கல்குவாரி அதிபரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிக்கலில் சீமான் !
திருச்சியில் அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்திவரும் தொழிலதிபர் ஒருவரிடம், இரண்டு இலட்சம் பணம் கேட்டும் மாதந்தோறும் மாமூல் கேட்டும் மிரட்டியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள்னு சொல்லிட்டு வந்தார்கள். அப்ரூவல் இருக்கிறதா? என்று கேட்டார்கள். எல்லாம் இருக்கிறது என்று ஆவணங்களை காட்டினேன். முறையாக அனுமதி பெற்றுத்தான் குவாரி நடத்துகிறேன் என்று சொன்னேன். அதெல்லாம் தேவையில்லை இரண்டு இலட்சம் பணம் கொடு என்றார்கள். அப்புறம் வாரம் வாரம் பேமெண்ட் கொடுங்கள் என்றார்கள்.
உங்களுக்கு எதுக்குங்க நான் கொடுக்கனும்? எதுக்காக சார் நீங்க பணம் கேட்கறீங்கனு கேட்டேன். இல்லைப்பா, நாங்க தலைமையிலேயிருந்து வர்றோம். நீ பணம் கொடுத்துத்தான் ஆகனும். நாம் தமிழர் கட்சி சீமான்தான் அனுப்பி வச்சாரு. நீங்க பணம் கொடுத்துதான் ஆகனும்னு சொன்னாங்க. அவ்ளோ பிசினஸ்லாம் இல்லைங்க. அவ்ளோ கொடுக்க முடியாதுனு சொன்னேன். சரி நாங்க பார்த்துக்கிறோம். வீடியோ எடுத்து இல்லீகலா நடத்துறீங்கனு போடுவோம்னு ஒருத்தர் சொன்னாரு.

இன்னொருத்தரு கையில பொருளை எடுத்து காட்டி, பார்த்துக்க போட்டுருவோம். அடுத்தமுறை வரும்போது கண்டிப்பா பணம் கொடுக்கனும்னு மிரட்டிட்டு போனாங்க…” என்பதாக நாம் தமிழர் கட்சியின் தம்பிகளால் மிரட்டப்பட்ட கல்குவாரி உரிமையாளரே நேரடியாக பேசிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை கூட்டியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள, அரசு அனுமதி பெற்ற TSK கல்குவாரியினை மதுராபுரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் 5 ஆண்டுகளுக்கு (10.06.24 முதல் 09.06.29)-ஆம் தேதி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார்.
கடந்த 03.10.24- ஆம் தேதி காலை 11.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார், மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர் செல்லதுரை, மற்றும் நாதகவைச் சேர்ந்த ராஜாங்கம் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவரும் சேர்ந்துகொண்டு, மேற்படி தங்கவேலிடம், அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி நடத்தி வருவதாகவும் அதற்கு ரூ.2 லட்சம் பணம் கேட்டும் மிரட்டி உள்ளனர்.
அவர்கள் கேட்டபடி, தங்கவேல் பணம் ஏதும் கொடுக்காத காரணத்தினால், அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும், சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 04.10.24-ஆம் தேதி மேற்படி TSK கல்குவாரி அலுவலகத்திற்கு சென்ற மேற்படி அருண்குமார், செல்லதுரை, ராஜாங்கம் மற்றும் ஒருவர், மேற்படி தங்கவேலிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளனர்.
பணம் தராததால், அன்றைய தினமே மேற்படி நபர்கள் கரிகாலன் வளையொலி என்ற youtube சேனலில், ”திருச்சிராப்பள்ளி மாவட்டம், கரட்டாம்பட்டியில் அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி இயங்கிவருகிறது. இதன் உரிமம் பற்றி விசாரித்தபோது, தனியாக கவனித்துக் கொள்வதாக கூறியதாகவும்; இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும்; பின் வரும் நாட்களில் (தேதி குறிப்பிடபடாமல்) ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ நடத்த உள்ளதாகவும்” வீடியோ ஒன்றினை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அக்-13 ஆம் தேதி, தன்னை பணம் கேட்டு மிரட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக TSK கல்குவாரியின் உரிமையாளர் தங்கவேல் புலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த செல்லத்துரை, ராஜாங்கம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய அருண்குமார், ஆனந்தன், தனபால், வினோத் மற்றும் மேற்படி மிரட்டல் வீடியோவை பதிவு செய்த அடையாளம் தெரியாத மற்றொரு நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
TSK கல்குவாரியின் உரிமையாளர் தங்கவேல் பேசி வெளியாகியுள்ள வீடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில், அண்ணன் சீமான் மீதும் வழக்கு பாயும் … அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள், போலீசு வட்டாரத்தில்.
– அங்குசம் செய்திப்பிரிவு.