அரசு பேருந்தில் 40 கிலோ கஞ்சா : அசால்டாக கடத்திய வட மாநில இளைஞர்கள் !
அரசு பேருந்தில் 40 கிலோ கஞ்சா : அசால்டாக கடத்திய வட மாநில இளைஞர்கள் !
டிசம்பர்:5 இரவு 8 மணியளவில் வேலூர் மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்த அரசுப் பேருந்து, ஒன்று மாதனூர் அருகே வந்தபோது, ஆம்பூரைச் சேர்ந்த காவலர் ராஜேஷ் என்பவர் அந்தப் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வட மாநில இளைஞர்கள் இருவர் பேருந்தில் ஒரு பெரிய பார்சலுடன் பயணம் செய்து கொண்டிருந்துள்ளனர். இது குறித்து காவலர் ராஜேஷ், வட மாநில இளைஞர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்கள்.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர் பார்சலை பிரித்துப் பார்க்க முற்பட்டபோது, ஒரு வடமாநில இளைஞர் பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார் பின்னர், உடனடியாக இது குறித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து ஆம்பூர் பேருந்து நிலையிலிருந்த போலீசார், தயார் நிலையில் இருந்தனர் பேருந்து வந்தவுடன் அதில் இருந்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் என்பதும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து, அதன் பின்னர் வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி கஞ்சாவை எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அன்வர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சட்டம் என்ன சொல்கிறது!
NDPS சட்டம் என்பது போதைப் பொருள் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம், ஹெராயின், மார்பின், மரிஹுவானா (கஞ்சா), ஹாஷிஷ், ஹாஷிஷ் எண்ணெய், கோகெய்ன், மெபெட்ரான், எல்.எஸ்.டி, கெட்டமைன், ஆம்பெடமைன் போன்ற போதைப் பொருட்களைத் தயாரித்தல், விநியோகம் செய்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் 20வது பிரிவின்படி, சட்டவிரோதமாக கஞ்சாவை பயிரிட்டால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் கஞ்சா பயிரிட முடியாது என்றாலும், மாநில அரசுகள் இதுதொடர்பாக சட்டங்களை உருவாக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே உத்தராகண்ட் மாநில அரசு மட்டுமே கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு முறைப்படி அனுமதி பெறவேண்டும். உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆராய்ச்சிக்காக மட்டும் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சா மக்களின் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
– மணிகண்டன்