திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா – திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பெ. ரா. அலெக்ஸாண்டார் பிரவின் துரை தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கத்தில் இளங்கலைத்தமிழ் மாணவர் பத்மஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அறிமுக உரையாற்றினார்.

அவர் தம் அறிமுக உரையில் வளனார் தமிழ்ப்பேரவை என்பது மாணவர்களுக்கான களம். அறிவை விரிவு செய்ய, தம் உள்ளக் கிடக்கைகளில் இருக்கிற படைப்புணர்வை வெளிக்கொணர கிடைத்துள்ள தளம். உள்ளூர் கவிஞர்கள் தொடங்கி உலக எழுத்தாளர்கள் வரையிலான படைப்பாளர்களை, எழுத்தாளர்களை கவிஞர்களைச் சந்தித்து, அவர்களின் அனுபவ உரைகளைக் கேட்க, அவர்களோடு உரையாட வாய்ப்புகள் இந்தத்தளத்தில் உருவாக்கித் தரப்படும்.
இதை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தி ஒரு முழுமை பெற்ற இலக்கிய மாணவராக உருவாகிட வேண்டும் என்பதே வளனார் தமிழ்ப்பேரவையின் நோக்கம் எனக் குறிப்பிட்டார். தலைமையுரையாற்றிய துணை முதல்வர் அலெக்ஸாண்டர் பிரவின் துரை, தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறியதுடன் அரிக்கமேடு, கீழடி ஆய்வுகளை மேற்கோளிட்டுக்காட்டினார்.

மேலும் தமிழாய்வுத்துறை எண்ணற்ற ஆய்வு தொடர்பான நிகழ்வுகளை நடத்துவது, அந்தக் கருத்துக்களைத் ஆய்வுக்கட்டுரையாகத்தொகுத்து நூல்களாக வெளிக்கொணர்வது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்களின் பங்களிப்பு கல்லூரி அனைத்து செயல்பாடுகளிலும் முதன்மையானது எனக்குறிப்பிட்டார்.
மேலும் பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருவதையும் நூல்கள் வெளியிடுவதையும் பாராட்டி மகிழ்ந்தார். முன்னிலையுரை ஆற்றிய கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் ஐ.நா சபை வரை அரங்கிற்கு நுழைகிறபோது வணக்கம் என்று தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள். உலக அரங்கில் தமிழ் உச்சத்தில் இருக்கிறது. நம் தமிழ் குறித்து நாம் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோமா என வினா எழுப்பினார்.
நிறைவாக சுவிட்சர்லாந்து எழுத்தாளர் சண் தவராஜா உலக அரங்கில் தமிழ் என்கிற மையப்பொருளில் கருத்துரை ஆற்றினார். உலக வழக்கில் 7164 மொழிகள் உள்ளதாக மொழிகள் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தப் பட்டியலில் தமிழ் 17 வது இடத்தில் இருக்கிறது. தமிழ் உலக அரங்கில் தமிழ் முதல் இடத்திற்கு வர வேண்டும். அதற்கு இங்கு இருக்கிற இளைஞர்கள் சீரிளமை குறையாத தமிழ் மொழியை பேச்சிலும் எழுத்திலும் முன்னெடுத்து செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் தம் உலகத்தின் பல தேசங்களில் தமிழால் தனக்குக் கிடைத்த அனுபவ நிகழ்வுகளை பகிர்ந்து உலக அரங்கில் தமிழ் பெற்றுள்ள இடம் குறித்து விரிவான உரையாற்றினார். இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவா் எ. அனிஷா சிரில் நன்றியுரையாற்றினாா். மூன்றாம் ஆண்டு மாணவா் மு. வசீர் அகமத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தமிழாய்வுத்துறையின் மூத்த பேராசிரியர் முனைவர் ஆ ஜோசப் சகாயராஜ், பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு சீனிவாசன், வளனார் தமிழ்ப்பேரவை பொறுப்பாளர் முனைவர் ஆ. அடைக்கலராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளங்கலை தமிழ் இலக்கிய மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் இந்த விழாவில் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
– ஆயிஷா சித்திகா & ஹரிணி