ஒரு குறிப்பட்ட சாதி குற்றமே இழைக்காது என சமூக அறிவியல் பாடம் நடத்தாதீர்கள் !
ஒரே சாதியினர் தனது சாதிக்கு எதிராக எதையும் செய்யமாட்டார்கள். ஒரே மதத்தினர் தனது மதத்திற்கு எதிராக எதையும் செய்யமாட்டார்கள். ஒரே நாட்டினர் தனது நாட்டிற்கு எதிராக எதையும் செய்யமாட்டார்கள் என்பது எத்தகைய சமூக அறிவியல்?
கோவில்களில் மாட்டுக்கறியை வீசி மதக்கலவரத்தை இந்துமதத்தின் பெயரால் தூண்டியவர்கள் இல்லையா?
மசூதிகளில் பன்றிக் கறியை வீசி மதக்கலவரத்தை இஸ்லாமியர் தூண்டியதே இல்லையா?
அம்பேத்கர்/ தேவர் சிலைகளை அவரவர் சாதியினரே அவமரியாதை செய்து சாதிக் கலவரத்தை தூண்டிய சான்றுகளே இல்லையா?
வேங்கைவயல் குடிநீரில் மலம் கலந்த வழக்கில் தலித் இனத்தவரை எப்படி குற்றம் சாட்டலாம் என பொத்தாம் பொதுவாக “தலித் மக்கள் தீங்கே இழைக்காத மரபணு கொண்டவர்கள்” என்பது போல சித்தரிப்பது ஒருவித பார்ப்பனிய பிறப்பால் அடையும் குணம் சார்ந்த சிந்தனை அல்லவா?
எத்தனை எத்தனை தலித் இன மக்கள் அதே இன மக்களால் படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்குகளை காவல்துறை சந்தித்துள்ளது? மறுக்க இயலுமா?

திருமாவளவனும், சிபிஎம் செயலர் சண்முகமும் ஒரே இரவில் சிபிஐ அரசியல் கலக்காத புனித புலனாய்வு குழு என முடிவிற்கு வருகிறீர்களே, எப்படி?
இந்த இரு அரசியல் கட்சிகளும் மக்களோடு மக்களாக இயங்கும் கட்சிகள்தான் எனில் உண்மை சம்பவத்தை இரண்டு ஆண்டுகள் கடந்தும் உங்களால் கண்டறிய இயலாமல்தானே உள்ளது?
காவல்துறை ஒரு இறுதி அறிக்கையை தாக்கல் செய்கிறது. அதை மாஜிஸ்ட்ரேட் ஏற்கக் கூடாது என திருமாவளவன் உத்தரவு போடுகிறார். இது சரியா? இதையே எச். ராஜா சொல்வார். அப்போது என்ன சொல்வீர்கள்.?
உண்மையான மக்கள் இயக்கங்கள் காணாமல் போய்விட்டன. காலிப் பெருங்காய வாசனை கொண்ட கட்சிகளாகத்தான் இன்று கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள்.
தலித் மக்கள் தவறே இழைக்காதவர்கள் என திருமா சொல்வார் ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக கம்யூனிசப் பின்னணியோடு அஇஅதிமுகவில் இயங்கிய செ. குப்புசாமி அவர்களின் வாரிசுகள் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவது ஏன் ? தலித் இன மக்கள் போராளிகள் அவர்கள் என திருமா சொல்வாரானால், கட்சியை விட்டு நீக்கியது ஏன்? பதவிகளை இல்லாமல் செய்தது ஏன்?
திருவண்ணாமலை மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிர்மறை அடையாளத்திற்கு காரணமாக இந்தக் குடும்பத்தை மாற்றியதில் விசிகவிற்கு பங்கில்லையா?
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் , ஒடுக்கிப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர், இறுதி அறிக்கையை பார்க்காமலேயே நடுவருக்கு உத்தரவிடுவது, டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பை அவர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்காடும் அனுபவம் கொண்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், காவல்துறையின் அனைத்து வழக்குகளுமே பொய் வழக்கு எனச் சொல்ல இயலாது.
இந்த வழக்கில் கூட , குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகலாம். அதற்கு சட்டம், சாட்சி, விசாரணை முறை என பல காரணங்களை அடுக்கலாம். ஏன், நானே கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடலாம். அது வேறு. அதன் பொருள் இந்த அரசமைப்பு சட்டத்தை ஏற்று நான் என் பணி செய்கிறேன் என்பதே.
திமுகவை தோற்கடிக்க ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். அவற்றை முன்னெடுத்து மக்களின் ஆதரவைப் பெற்று தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றுங்கள். அதிகாரத்தை செலுத்துங்கள். ஒரு குறிப்பட்ட சாதி குற்றமே இழைக்காது என சமூக அறிவியல் பாடம் நடத்தாதீர்கள். சிபிஐ புனிதம் என சான்று வழங்காதீர்கள்.
கன்னியப்பன் இளங்கோவன் – உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
சரியான பார்வை தோழர்…