மறைந்தார் – தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்
மறைந்தார் – தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் கொள்ளிடக் கரையேராம் அமைந்துள்ள படுகை என்னும் ஊரில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சூன் மாதம் 15, 1944இல் பிறந்தார்.
தமிழில் முதுகலைத் தமிழில் பட்டம் பெற்று, அரசுக் கல்லூரி ஆசிரியராக பல ஆண்டுகாலம் பணியாற்றினார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநராவும் செயல்பட்டார். தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தின் பேராசிரியராகவும் செயல்பட்டார்.
அறிவு தளத்தில் தமிழ் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து 22 நூல்களை வெளியிட்டுள்ளார்.
![க.நெடுஞ்செழியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/IMG-20221104-WA0057-1024x576.jpg)
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள்
1. தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
2. இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் 1989
3. தமிழர் தருக்கவியல்
4. தமிழரின் அடையாளங்கள்
5. ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
6. ஆசீவகமும் தினமணி அரசியலும்
7. ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்
8. சமணர் என்போர் சைனரா : வினாவும் விடையும்
9. சமூகநீதி
10. தமிழக் குகைப் பள்ளிகளின் சமயம்
11. தருமசாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்
12. பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்
13. சங்ககாலத்தமிழர் சமயம்,
14. தமிழரின் அடையாளம்,
15. சித்தன்னவாசல்
16. தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், தமிழ் எழுத்தியல் வரலாறு
17. தமிழர் இயங்கியல் (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்) 2000
18. உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
19. மரப்பாச்சி 2010
20. தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும் 2010
21. மரப்பாச்சி 2010
22. தமிழர்களின் அடையாளங்கள்
![தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-04-at-10.20.01-AM.jpeg)
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேராசிரியர் சக்குபாய் அவர்களைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நகை, குறிஞ்சி என்ற இரு மகள்களும் பண்ணன் என்னும் ஒரு மகனும் உள்ளனர். பேராசிரியர் நெடுஞ்செழியன் குடும்பம் திராவிட இயக்கத்தோடு மிக நெருக்கமான உறவு கொண்ட குடும்பம் ஆகும். 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ்நாடு தொடர்பாக, மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் க.நெடுஞ்செழியன் கலந்து கொண்டு முதல் பரிசை அண்ணாவின் கரங்களால் பெற்றவர்.
பின்னர் அரசுக் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் நெடுஞ்செழியன் திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றினார்.
பெங்களூர் குணா அவர்களோடு பேராசிரியர் நெடுஞ்செழியன் கொண்ட நட்பின் தொடர்ச்சியாக, அவர் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் தமிழ்நாட்டில் இயங்கி வந்த அனைத்து தமிழ் இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றி தமிழ்-தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்.
![தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-04-at-10.20.02-AM.jpeg)
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையில் தலைவராகவும் பணியாற்றினார். இந்தக் காலத்தில்தான், “பெங்களூர் குணாவோடு இணைந்து தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கத் திட்டமிட்டார்” என்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் ஒராண்டுக்கும் மேலாக பெங்களூரில் சிறைப்படுத்தப்பட்டார்.
பொய் வழக்கில் தமிழ்ப் பேராசிரியர் சிறைப்படுத்தப்பட்டிருப்பது முறையல்ல; பேராசிரியர் க.நெடுஞ்செழியன் விடுதலை செய்யப்பட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போதைய கர்நாடக முதல்வர் தரம்சிங் அவர்களைச் சந்தித்து வேண்டுகோள் வைத்தார்.
வைகோவின் வேண்டுகோளை ஆராய்ந்த கர்நாடக மாநில அரசு, பேராசிரியர் க.நெடுஞ்செழியனைப் பிணையில் விடுதலை செய்தது. இந்த வழக்கை திருச்சியைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் சு.க.மணி அவர்கள் நடத்தினார்.
30.05.2013ஆம் நாள் வழங்கப்பட்ட தீர்ப்பில், பேராசிரியர் க.நெடுஞ்செழியன் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்தது.
பேராசிரியர் க.நெடுசெழியன் – சக்குபாய் இணையர் 1984ஆம் ஆண்டு தொடங்கி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தனர்.
இவர்கள் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் ஆண்டுக்கணக்கில் தங்கி இருந்தனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் பொருளுதவிகள் செய்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் அன்பைப் பெற்றவர். இவருடைய மகன் பண்ணன் ஈழவிடுதலைக்குப் போராடும் பேராளியாகத் தன்னை இணைத்துக்கொண்டார்.
திமுக தலைவர் திமுகவினர் திராவிட இயக்கக் கருத்துகளை அறிந்துகொள்ள அறிவலாயம் என்னும் அஞ்சல் வழி படிப்பைத் தொடங்கினார். அறிவலாயம் என்னும் பெயரில் பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. பாடத்திட்டக் குழுவில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் இடம் பெற்றார். தொடர்ந்து திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டார்.
பேராசிரியர் க.அன்பழகன் 80ஆம் ஆண்டு மணிவிழாவைப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நடத்தி, மணிவிழா மலரை வெளியிட்டு பேராசிரியர் க.அன்பழகனுக்குப் பெருமை சேர்த்தார்.
![தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-04-at-10.23.34-AM.jpeg)
கடந்த மாதம் செம்மொழி நிறுவனத்தின் 10 இலட்சம் பொற்கிழியுடன் கலைஞர் விருதைப் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் உடல் நலம் குன்றிய நிலையிலும், சக்கர நாற்காலியில் அமர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றார்.
![தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/Prof-N.jpg)
அவ்விழாவில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் குறித்து பேசும்போது,
‘’திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்ததில் அடிமட்டத் தொண்டர்களுக்கு எவ்வளவு பங்கு உண்டோ – அதேபோல அறிவுத் தளத்தில் செயல்பட்டு இந்த இயக்கத்தை வளர்த்ததில் பேராசிரியர்களுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு! அதனால்தான் திராவிட இயக்கத்தையே தமிழ் இயக்கம், தமிழர்களின் இயக்கம் என்று சொல்கிறோம். அப்படி கட்சிக்குள் இணையாமலேயே தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமலேயே இயக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த எத்தனையோ பேராசிரியர்களில் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் சக்குபாய் அவர்களுக்கும் நிரம்ப பங்குண்டு என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறோம்.
பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா, சித்தப்பா ஆகிய இருவரும் தந்தை பெரியாருக்கு நெருக்கமானவர்கள்.
ஆனால் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய போது இவரது சித்தப்பாவும் தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவரது வழியில் வந்த நெடுஞ்செழியன் அவர்களும் இளமை முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு வளர்ந்து வந்துள்ளார்.
திராவிட இயக்கத்துக்குத் தேவையான வரலாறு, அரசியல், தத்துவ நூல்களை எழுதித்தரும் பேராசிரியர்களில் ஒருவராக அவர் வளர்ந்து வந்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் அறிவுப் பணியை விடாமல் தொடர்ந்தவர் பேராசிரியர் நெடுஞ்செழியன்.
![தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்ரமணியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-04-at-10.23.35-AM.jpeg)
பொதுவாக சிலர் நல்ல வேலை கிடைத்ததும் இயக்கத்துக்கான பணிகளை மறந்துவிடுவார்கள்.
ஆனால் நெடுஞ்செழியன் அவர்கள் அதனையும் சேர்த்துச் செய்தவர் என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை, பக்தி இயக்கங்களும் வைதீக எதிர்ப்பும், தமிழ் எழுத்தியல் வரலாறு, இந்தியப் பண்பாட்டில், தமிழும் தமிழரும், தமிழரின் அடையாளங்கள், சங்ககாலத் தமிழர் சமயம் போன்ற தலைசிறந்த நூல்களை எழுதியவர் நெடுஞ்செழியன்.
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு பொய் வழக்கில் கைதாகி சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்படிப்பட்ட நேரத்தில்கூட அஞ்சாத நெஞ்சத்துடன் அந்த வழக்கை எதிர்கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன்.
”பொய்வழக்குப் போட்டு
புகழையெல்லாம் தீய்த்து
கைவிலங்கு மாட்டி என்னை
கடுஞ்சிறையில் பூட்டி
வெங்கொடுமை செய்தாலும்
நான் வீழ்ந்துவிட மாட்டேன்.
பங்கமெல்லாம் கண்டு
நான் பயந்துவிட மாட்டேன்.
வஞ்சத்தின் முன்னே
நான் மண்டியிடமாட்டேன்”
– என்று கவிதை எழுதினாரே தவிர பயந்து அஞ்சி நடுங்கி ஒடுங்கிவிடவில்லை நம்முடைய பேராசிரியர்.
அவர் சிறையில் இருந்தபோதும் சங்ககாலத்தமிழர் சமயம், தமிழரின் அடையாளம், சித்தன்னவாசல் ஆகிய புத்தகங்களைத்தான் எழுதியிருக்கிறார். இதில் தமிழரின் அடையாளம் என்ற நூல் தமிழக அரசின் பரிசையும், சித்தன்னவாசல் என்ற நூல் கலைஞரின் பொற்கிழி விருதையும் பெற்றுள்ளன.
இதோ, ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்ற பெரிய புத்தகத்தை எழுதி நமக்காக வெளியிட்டு இருக்கிறார். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாரதிதாசன் சொல்வதைப் போல, செயல்படக் கூடியவர்தான் நம்முடைய பேராசிரியர் நெடுஞ்செழியன். அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தின் பெருமையைப் பறைசாற்றும் பல நூல்களை எழுதி, அறிவுதளத்தில் இயங்கிய பேராசிரியர் க.நெடுஞ்செழியன் 04.11.2022ஆம் நாள் அதிகாலை 3.00 மணியளவில், சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் காலமானார்.
![பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்](https://angusam.com/wp-content/uploads/2022/11/IMG-20221104-WA0231-1024x1024.jpg)
78 ஆண்டுகளில் சுமார் 60 ஆண்டுகள் திராவிட இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டு, எழுதியும் பேசியும் வந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் காலமாகி, அவர் விட்டு சென்ற எழுத்தின் வழி, திராவிட இயக்கச் சிந்தனைகளில் அவர் எப்பொழும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவரின் எழுத்துகள் நம்மை வழிநடத்தும். பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு அங்குசம் செய்தி இதழ் வீரவணக்கம் செலுத்துகின்றது.
– ஆதவன்