டாஸ்மாக் … கஞ்சா … சாதிய போதையில் விடலை பசங்க !
வடகாடு நடந்தது என்ன ? வடகாடு மக்கள் அதிகாரம் நேரடி விசிட் !
இந்தியாவிற்கே முன்னோடி மாநிலம் என்றும்; திராவிட மாடல் தமிழகம் என்றும் மார் தட்டிக்கொண்டாலும்; ஆயிரம் மேடைகளில் பெரியார், அம்பேத்கர் என்று என்னதான் வாய் கிழிய பேசினாலும் ”இதுதான் இன்றைய தமிழகம்” என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது, புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் நிகழ்ந்துள்ள சாதிய மோதலும் அதன் உச்சமாக அரங்கேறிய தீ வைப்பு சம்பவமும்.
சமீபத்திய ஆண்டுகளில், தமிழகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அடுத்தடுத்து சாதிய மோதல்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. குறிப்பாக, பள்ளிக்கூட பசங்களும், விடலைப்பசங்களும் கூட, சாதி வெறியில் திளைக்கும் போக்குதான் தமிழகத்தின் அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.
”முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கல், கட்டை, ஆயுதங்களுடன் அலை அலையாக போருக்கு கிளம்பி செல்வதைப்போல கிளம்பி வந்தார்கள். எல்லாமே 20 – 25 வயசு பசங்க. அதுல பாதி பேரு நிதானம் இல்லாத அளவுக்கு போதையில வந்தாங்க. சுனாமி மாதிரி தாக்கிட்டு போயிட்டாங்க”னு வடகாடு கிராமத்தை சேர்ந்த திருவள்ளுவர் நகர் மக்கள் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்கள்.
கல்யாணத்துக்கும் கருமாதிக்கும் கலர் கலரா பேனர் வைப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், அதே பேனருக்கு 24 மணி நேரமும் ஒருவர் சுழற்சி முறையில் காவல் காத்து நிற்கும் அவலத்தை எங்கேனும் கண்டிருக்கிறீர்களா? வடகாடு கிராமத்தில் அது சர்வ சாதாரணம். அம்பேத்கர் படம் பதித்த பேனர் எனில், கூடுதல் கவனம் தேவை. கண்ணிமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கழுத்திலும் வயிற்றிலும் பிளேடுகள் பாயலாம்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அரசையே அடிபணிய வைக்கும் அளவுக்கு சாதி கடந்து முன்மாதிரியான மக்கள்திரள் போராட்டத்தை கட்டியமைத்த அதே வடகாடு கிராமம்தான், இன்று சாதியின் பெயரால் பகை மூண்டு பிரிந்து கிடக்கிறது.
”வருசத்துக்கு ஒருக்கா, பனியன் கொண்டாந்து கொடுப்பாங்க. அத மாட்டிகிட்டு மாநாடு பேரணினு போறானுங்க. உங்க அப்பாவும் இந்த மாதிரிதான் போயி சேர்ந்தாரு. நீயும் இந்த வயசுலேயே கத்தி கபடானு போகாதே, கேஸ்ல சிக்கிறாதேனு நான் எவ்ளோ தடுத்தும் கேட்கல” மருத்துவமனை வளாகத்தில் வெளிப்பட்ட பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த தாய் ஒருத்தியின் வேதனை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை குறிவைத்து, அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்பட்டு வருவதாகவும்; அதன் தொடர்ச்சியாகத்தான், சாதிய பகை கூர்மைபடுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்கள். கஞ்சா போதையும், டாஸ்மாக் சாராய போதையும் தன் பங்குக்கு சாதிய சீண்டல்களை தூண்டி வருவதாகவும்; உப்புப்பெறாத சிறு சண்டைகளையும்கூட சாதிய மோதல்களாக உருமாற்றி விடுவதாகவும் எச்சரிக்கிறார்கள் அம்மாவட்டத்தை சேர்ந்த ஜனநாயக சக்திகள்.