மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை! சனாதன சர்ச்சை ! ஊழல் பாஜக ! திருச்சியில் வெடித்த திருமாவளவன்!

0

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை! சனாதன சர்ச்சை ! ஊழல் பாஜக! திருச்சியில் வெடித்த திருமாவளவன்!

தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ரோஸ்மில்

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் வழக்கறிஞர் முசிறி கலைச்செல்வன், ஆற்றலரசு, அன்புகுருசெல்வம், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,
இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில நிர்வாகி அரசு, திருச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர் தங்கதுரை, திருச்சி மண்டல செயலாளர் பொன்.முருகேசன், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, மாவட்டத் துணைச் செயலாளர் சிந்தை சரவணன், பெல் விஜயபாலு, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர் காட்டூர் புரோஸ்கான் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி மற்றும் ஒன்றிய, நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன், நடப்பு அரசியல் சூழல் குறித்தான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“ சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார். சனாதானத்தை வேரறுப்பதன் மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகுக்கு உணர்த்தியவர் அவர்.

4 bismi svs

அந்த மாமனிதனின் அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதான சக்திகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். பெரியார் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு உரிமையானவர் அல்ல! ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கும் உரிமையானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து காழ்ப்புணர்வை கக்கி கொண்டிருக்கின்றனர்.

அவரை வீழ்த்துகிற முயற்சிகளில் பெரியாரின் சிந்தனையாளர்களும், அம்பேத்கரின் சிந்தனையாளர்களும், மார்க்சிய சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு இருக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் சமூகநீதி காண போராளிகளாய் ஒருங்கிணைந்து இருக்கிறோம். வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்.” என்றார்.

தொடர்ந்து பாஜக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து எதேச்சியதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை. அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அப்படித்தான் இந்த கூட்டத்தொடரிலும் இந்த அமர்வில் மூன்று முக்கிய குற்றவியல் சட்டத்தையும், சட்டங்களுக்கான மசோதாவையும் நிறைவேற்றிவிட வேண்டும் என முடிவு செய்து அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வெளியேற்றிவிட்டு எந்த வித எதிர்ப்பு இல்லாமல் அதனை நிறைவேற்றியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது. மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகற்றுவார்கள்.”
என்றவர் தொடர்ந்து,

“பாஜகவை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சிஏஜி மெகா ஊழல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் இந்த ஆட்சி ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது.
ஆகவே, பாஜகவை சேர்ந்தவர்கள் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை” என்றார்.

வெள்ள நிவாரணம், நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, “21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி ஒரு தம்பிடி காசு கூட வழங்கவில்லை. வழக்கம் போல ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதியை மட்டுமே வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்வது போன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல தொனியை ஏற்படுத்துகிறார். எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்திருக்கிறார்” என்றார்.

“வெல்லும் சனநாயக மாநாடு, சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் நடைபெறும். முதல்வரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம்.” என்றவர், இறுதியாக, “வருகிற 29-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏவிஎம் இயந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.” என்ற வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார், முனைவர் தொல்.திருமாவளவன்.

அங்குசம் செய்தி பிரிவு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.