மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை… பச்சை கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

0

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை… பச்சை கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மதுரை என்றாலே வீரம் விளைந்த மண் தூங்கா நகரம் மண் மணக்கும் மல்லிகைப்பூ வாசனைகளும் மத்தியில் இருக்கும் மீனாட்சி அம்மனின் பக்திக்கும் புதிதாக பழகுபவர்களின் பாசத்திற்கும் புகழ்பெற்றது தான் என உலக மக்களின் மனதில் பதிய வைத்துள்ளது அதையும் தாண்டி  தென் மாவட்டங்களில் சினிமா துறையும் அதில் வரும் பாடல்களும் மனிதர்களை ஈர்க்கும் தன்மை உடையது. அப்படி பாடல்களை பாடியவர் தான் டி.எம்.சௌந்தராஜன் இவர் மதுரைக்காரர்.

2 dhanalakshmi joseph

அந்த கால நடிகர்களுக்கு பாடல் பாடி எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் ஆகியோரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளார். சினிமாவில் நடிக்கும் நடிகர்களை மட்டும் பார்க்கும் ரசிகர்களுக்கு பின்னால் பாடும் பாடகர்களை பற்றி எதுவும் தெரியாது. டிஎம்எஸ் என்றாலே தனி குரல்வளம் தான். இவர் பாடிய பாடல்கள் சந்தோசம், துக்கம், பக்தி, தத்துவம், சோகப்பாடல் என தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர்.

பூமிநாதன் பேச்சு…

- Advertisement -

- Advertisement -

இவருக்காக மதுரை தெற்கு தொகுதியில் சிலை வைப்பது சம்பந்தமாக மதுரை மாநகர் மதிமுக மாவட்ட செயலாளரும், தெற்கு எம்எல்ஏ., பூமிநாதன் தனது தொகுதியில் டிஎம்எஸ்ஸின் சிலை வைப்பதற்கு சட்ட மன்றத்தில் குரல் கொடுத்து அனுமதி பெற்றுள்ளார். இதை தெரிந்து கொண்ட நாம் பூமிநாதனை நேரில் சந்தித்தோம்.

மதுரை மாநகர் மதிமுக மாவட்ட செயலாளர், தெற்கு எம்எல்ஏ., பூமிநாதன்
மதுரை மாநகர் மதிமுக மாவட்ட செயலாளர், தெற்கு எம்எல்ஏ., பூமிநாதன்

நான் கடந்த 25 ஆண்டுகளாக தலைவர் வைகோ உத்தரவின் பேரில் மதுரையில் மதிமுக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறேன். 2011 மற்றும் 2016ல் சட்டமன்றத் தேர்தல் கிழக்குத் தொகுதியில் வேட்பாளராக தலைவர் வைகோ என்னை நிறுத்தி அழகு பார்த்தார். 52 ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

அதேபோல் 2021ல் கிழக்கு தொகுதி இப்போது தெற்கு தொகுதியாக மாறி உள்ளது. இங்கு இருக்கும் 2.36 லட்சம் மக்கள் என்னை 6,615 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்கள் எனது தொகுதியில் இருக்கும் பகுதி, வட்டச் செயலாளர், மண்டல தலைவர், கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகளும் அனைவரும் கூட்டணி.  முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறாரோ அதேபோல் நான் எனது தெற்கு தொகுதி மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நானும் செய்து வருகிறேன். அதில் டிஎம்எஸ் சிலையும் ஒன்று என்பது திருப்தியாக உள்ளது.

நான் சட்டமன்ற கூட்டத்தில் டிஎம்எஸ் சிலையை வைப்பதற்கு முன் வைத்தபோது எதிர்ப்புகள் யாரும் தெரிவிக்கவில்லை. எல்லோரும் கைத்தட்டி ஆதரவு தெரிவித்தார்கள். முதல்வர் ஸ்டாலின் கருணை உள்ளத்தோடு நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திமுக அரசாங்கமே இதை நடத்தும் என்றார்.

சௌராஷ்டிரா மக்கள் மகிழ்ச்சி

சட்டசபையில் நான் மதுரை தவுட்டு சந்தை பகுதியில் சிலை வைப்பதற்குஅனுமதி பெற்று விட்டேன் என்று தெரிந்ததும் சௌராஷ்ட்ரா சமுதாய சபை மக்கள் அனைவரும் ஒன்று கூடி போஸ்டர் அடித்தும், இதுபோக எனது மதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் வால்போஸ்டர், பேனர் என தொகுதி முழுவதும் வைத்து நன்றி தெரிவித்துள்ளனர்  வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் அமெரிக்கா, லண்டன், துபாயில் உள்ள சௌராஷ்ட்ரா சமுதா யத்தைச் சேர்ந்த நண்பர்கள், ரசிகர்கள், டிஎம்எஸ்ஸின் மகன்கள் செல்வகுமார், பால்ராஜ் ஆகிய இருவரும் போன் மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வருக்கு நன்றி

மதுரையில் சிலை திறப்பு விழாவிற்கு வைகோ தலைமையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார். சிலை வைப்பதற்கு கருணை உள்ளத்தோடு ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

டிஎம்எஸ் உறவினர் வருத்தம்

டிஎம்எஸ் பிறந்து வாழந்த தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு அருகிலுள்ள வீட்டுக்கு சென் றோம், அங்கு டிஎம்எஸ் அக்கா மகன் கிருஷ்ண மூர்த்தி வர்த்தினி தம்பதியினரிடம் நேரில் நாம் விசாரித்த போது எனது தாய்மாமன் டிஎம்எஸ் பெரிய நடிகர், நடிகைகளுக்கு பாடல்கள் பாடி அவர்களை தான் உருவாக்கி விட்டாரே தவிர அவர் அப்படியேதான் இருந்திருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி - வர்த்தினி
கிருஷ்ணமூர்த்தி – வர்த்தினி

அவருடைய இரு மகன்களும் தற்போது வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு இருப்பதாக கூறுகிறார்கள், கடந்த 30 வருடங்களாக எங்களிடம் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள் என்றார்,

மதிமுக எம்எல்ஏவின் அக்கறை

4 bismi svs

கீழவாசல் சந்திப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் சந்திரனிடம் கேட்டபோது, 1980 முதல் இங்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கிறேன், இந்த கிழக்கு தொகுதியில் இதுவரை சுப்புராம், ஏஜிஎஸ் . ராம்பாபு, ஓஎஸ் .அமர்நாத், எஸ்ஆர். ராதா, எஸ்எஸ். சரவணன், எஸ்கே. பாலகிருஷ்ணன் என 2  எம்பிக்கள், 3 எம்எல்ஏக்கள்,  மேயர் என இவர்கள் எல்லோரும் டிஎம்எஸ் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக தான் இந்த தெற்கு தொகுதியில் இருந்துள்ளனர், அவர்களெல்லாம் செய்யாத ஒரு விஷயம், முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மதிமுக எம்எல்ஏ., பூமிநாதன் இப்படி ஒரு முயற்சி எடுத்து இருக்கிறார் பாராட்டக்கூடியது உலகமே அவரது பாட்டுக்கு அடிமையாக இருக்கும் ரசிகர்களுக்கு மதுரையில் டிஎம்எஸ் சிலை கீழவாசல் தவிட்டுச்சந்தையில் வந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சியே என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் சந்திரன்
ஆட்டோ ஓட்டுநர் சந்திரன்

தமிழன்னையின் பூரண ஆசி

மதுரையில் சிலை வைப்பது சம்மந்தமாக நம்மிடம் பேசிய அனைவரும் டிஎம்எஸ் தமிழிலும், தமிழ் உணர்வில் ஆர்வமுள்ளவர் என்று கூறினர். அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சத்தியமூர்த்தியை நாம் நேரில் சந்தித்தபோது தமிழ் மொழிக்கு வளம் சேர்த்தவர் டிஎம்எஸ், எம்ஜி ஆர்க்கு தத்துவ பாடல்கள், சிவாஜிக்கு காதல் பாடல்கள், பக்தி பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்தவர், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எல்லோரும் திரைப்படத்தில் மட்டுமல்ல. தான் நடத்திய இசை கச்சேரியிலும் ஆள வைத்தவர். இவர் பாடிய பாடல்கள் ஹிந்தியில் முகமது ரஃபி மற்றும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு வையும் பாட வைத்தார்கள். அவர்களால் இவரை போல் பாட முடியாமல் திணறினார்கள். 90 வயது வரை வாழ்ந்தவர் சொல்வோர் சொன்னால் தமிழ் சொந்தம் கொண்டாடும் என்பார்கள். தமிழன்னையன் பூரண ஆசி டிஎம்எஸ்க்கு கிடைத்திருக்கிறது,

பத்மஸ்ரீயை விட உயர்ந்த தேசிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள மெல்லிய காற்றில் தலைமுறைகளை தாண்டி டிஎம்எஸ் குரல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும். அந்த காலத்தில் முன்னணி கதாநாயகன்கள் மூன்றெழுத்து நடிகர்களின் குரல்கள் எல்லாம் தம் தொண்டைக் குழியில் அடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎம்எஸ்சை கவுரவித்த அழகிரி

அழகிரியின் ஆதரவாளர் சலீமை சந்தித்தோம், டிஎம்எஸ் பாட்டு என்றால் அழகிரிக்கு உசுரு, நெடுந்தூர பயணம் எங்கு சென்றாலும் காரில் டிஎம்எஸ் குரல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும், அவர் மீது ஒரு ஈர்ப்பு தன்மை, டிஎம்எஸ் இதுவரை எத்தனையோ பெரிய நடிகர்களுக்கு பாடல் பாடி பேரும் புகழும் பெற்று தந்தார், ஆனால் அவர்கள் யாரும் இவரை திரும்பிப் பார்க்கவில்லை ஏன் அவருடைய சௌராஸ்ட்ரா சமுதாயமே கண்டுக்கலை.   ஏழ்மை காரணமாக அவர் கஷ்டப்படுகிறார் என்று  அழகிரியிடம் கூற, உடனடியாக அவரை  நேரில் சந்தித்து உதவ முன் வரும்போது டிஎம்எஸ் கூறியது,. எனக்கு நீங்கள் மதுரையில் வைத்து உதவி செய்யுங்கள் என்றதும், அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் இதைப்பற்றி எடுத்து கூறி சினிமா துறையில் உள்ள பின்னணி பாடும் ஜாம்பவான்கள் அனைவரையும் தலைவர் முன்னிலையில் மண்டல தலைவர் இசக்கிமுத்து மற்றும் கட்சியினர் ஏற்பாட்டில் தமுக்கம் மைதானத்தில் தமிழன்னை சிலை முன்பு தலைவர் கலைஞரை வைத்து டிஎம்எஸ்க்கு பாராட்டு விழாவும், பரிசு மழையிலும் நனைய வைத்தார் அழகிரி. அவர் பிறந்து வளர்ந்த மதுரையில் சிலை வைக்கிறார்கள் என்றால் பெருமையாக தான் இருக்கிறது என்றார்.

சலீம்
சலீம்

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி சேர்க்க…

திமுக சார்பாக 2011ல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் திமுகவில் நின்ற டாக்டர் சரவணன்,  சிலை எப்போதே செய்துவிட்டார் அவர் செய்த சிலை தானா என்று கேள்வியை நம்மிடம் வைத்தார். வரும் மார்ச் 25-ல் நூறாவது பிறந்த நாள் விழா நடத்துவதாக காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடப்பதாக கேள்விப்பட்டேன். இங்கு ஏற்கனவே இதே போல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி எம்ஜிஆர் உடன் நடித்த நடிகை லதாவை வரவழைத்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். அதேபோல் டிஎம்எஸ் குரல் கொடுத்து பாடிய முன்னணி நடிகர்களை வரவழைத்து விழா நடத்தினால் டிஎம்எஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றார்

சிலை செய்ய அட்வான்ஸ் கொடுத்தேன்-…

அழகிரியின் ஆதரவாளர் சலீம் கூறியது உண்மைதானா? என நாம் டாக்டர் சரவணனை நேரில் சந்தித்து கேட்டபோது, உண்மைதான். நான் 2011 ல் திமுக சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக என்னை அறிவித்தபோது முதலில் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டு அறிந்தேன். அதில் நிலையூர், திருப்பரங்குன்றம் பின்பகுதியில் அதிகமாக சௌராஷ்ட்ரா சமுதாய மக்கள் உள்ளனர் அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள முருகன் கோவில் தெப்பக்குளம் பிரச்சனை, டிஎ.ம்.சௌந்தராஜனுக்கு சிலை வைப்பது, வலையங்குளம் பகுதியில் முத்தரையர் அதிகமாக உள்ளனர் அவர்களுக்கும் சிலை வைப்பதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருந்தேன்.

அதேபோல் நான் வெற்றி பெற்று வந்தவுடன் உடனடியாக சௌராஸ்ட்ரா சமுதாய மக்களை ஒன்றிணைத்து சிலை வைப்பது சம்பந்தமாக வெளிநாட்டில் உள்ள ஒருவர் சிலை வைப்பதற்கு இடம் தருவதாக கூறியிருந்தார், அதற்காக கும்பகோணத்தில் ராகவன் என்ற சிற்பி ஒருவர் உள்ளார். அவரிடம் 7 அடியில் டிஎம்எஸ் சிலை செய்வதற்காக ரூ.50 ஆயிரம் அட்வான்ஸாக கொடுத்து சிலையை வடிவமைக்க வைத்தேன்,  அப்போது திமுகவில் புறநகர் மாவட்ட செயலாளரான மூர்த்தி இடையில் புகுந்து ஆட்டையை களைத்து விட்டார், அதனால் என்னால் செயல்பட முடியவில்லை. அப்பகுதி மக்கள் இன்று வரை என்னிடம் உதவிகள் கேட்டு வரத்தான் செய்கிறார்கள். நானும் என்னால் முடிந்த உதவியை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.

பேனர் வைத்து கொண்டாட்டம்…

தமிழகத்தில் அதிகமாக சிலைகள் இருக்கிறது என்று கணக்கெடுத்து பார்த்தால் குறிப்பாக தென் மாவட்டங்களில்தான் இருக்கிறது என்று சொல்லிவிடலாம். இங்கு சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதி தலைவர்கள், சினிமா நடிகர்கள் என அதிகமாக மதுரையில்தான் உள்ளது. அதேபோல் இப்போது புதிதாக டிஎம்எஸ் சிலை வைக்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இனி வருடந்தோறும் எல்லோரையும் போல் பிறந்தநாள் நினைவு நாட்களில் சௌராஷ்ட்ரா இன மக்களும் போஸ்டர் பேனர் வைத்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்ப்போம்..

-ஷாகுல், படங்கள்: ஆனந்த்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.