பள்ளிக்கு வராத மாணவர்களையும் ஆர்வத்துடன் வந்து கற்க உதவிடும் – “தமிழ்க்கூடல்”
பள்ளிக்கு வராத மாணவர்களையும் ஆர்வத்துடன் வந்து கற்க உதவிடும் – “தமிழ்க்கூடல்”
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் “தமிழ்க்கூடல்” நிகழ்வு இடமலைப்பட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டார்.
இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவள்ளி தலைமை வகித்தார். நிகழ்வில் பள்ளியின் தமிழாசிரியர் திரு. பிராங்ளின் இளங்கோ வரவேற்றார்.
சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினர் தன் உரையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பண்பாட்டுப் புரட்சியை நம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது போற்றத்தக்கது, குறிப்பாக கொரானா பெருந்தொற்றுக்குப் பின் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல், வாசித்தல், எழுதுதல், பழக்கங்களில் ஏற்பட்டுள்ள உளவியல் சிக்கல்களுக்கு அவற்றை களைந்து சீர்படுத்தி செம்மைபடுத்தும் விதமாக கலைத்திருவிழா தமிழ்க்கூடல் ஆகிய நிகழ்வை மாமருந்தாக அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
பள்ளிக்கு வராத மாணவர்களையும் ஆர்வத்துடன் வந்து கற்க உதவிடும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் பெரிதும் துணை புரிகிறது. குறிப்பாக மொழித் திறனில் பின் தங்கிவரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் சிறப்பை உணரவும் ஆளுமை பெறவும் தாய்மொழிக் கல்வியே முதுகெலும்பாய் அமையும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்து நின்றாலும் எழுத்தையே முதல் அதிகாரமாய் வைத்தார் தொல்காப்பியர். எனவே அறிவின் தொடக்கம் எழுத்து. உலகிலுள்ள 6000 மேற்பட்ட மொழிகளிலுள்ள வரிவடிவங்களை ஒருங்கே பெற்ற மொழி நம் தமிழ்மொழியாகும்.
காலத்திற்கேற்ப மக்கள் பயன்பாட்டில் உள்ள உலகின் தலைமைச் செம்மொழி நம் தமிழ். சிந்துவெளி முதல் வைகை, தாமிரபரணி வரையுள்ள நம் பண்பாட்டின் சிறப்பை இன்றைய வளரும் பள்ளி மாணவர்கள் தெரிந்துக் கொண்டு கலை இலக்கியத்தில் வல்லமை பெறுவதற்காகவே தமிழ்க்கூடல் நடத்தப்படுகிறது. உலகிலுள்ள பெருவாரியான மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் உள்ளது. உலக மொழிகளிலுள்ள வேர் சொற்களின் சுரங்கமாய் திகழ்கிறது தமிழ் மொழி.
இயல் இசை நாடகம் என ஐந்திணை மரபில் முதல் கரு உரி என வகுத்து பண்ணிசையோடும் கலைகளோடும் பல்லுயிர்க் காத்து செழித்த மரபு தமிழர் மரபு. எனவே படைப்பாளிகளும் படைப்பும் தான் சமூகத்தை காலந்தோறும் உயிர்ப்போடு அடுத்தடுத்த தலைமுறைக்கு கையளிக்கிறது. எனவே மாணவர்கள் தாய் மொழியில் திறன் பெற்று தலைமைப் பண்புடன் திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை திருமதி.தமிழ்ச் செல்வி நன்றி கூறினார்.