விசிக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரவில்லை – திமுக கூட்டணியில் குழப்பம்

0

விசிக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரவில்லை திமுக கூட்டணியில் குழப்பம். இன்று (02.03.24) காலை 10 மணியளவில் மனித நேய மக்கள் கட்சி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் குழுவோடு தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 11.00மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தை என்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு விசிக குழு கூட்டணி குறித்துப் பேச வரவில்லை. திமுக தரப்பில் திருமாவளவனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, எங்கள் கட்சியின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று மட்டும் பதில் சொல்லப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து எப்போது பேச வருவோம் என்பது குறித்து விசிக தரப்பில் எந்த அறிவிப்பையும் திமுகவிடம் தெரிவிக்கவில்லை.

உடனே செய்தி ஊடகங்கள் “திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் திருமா பங்கேற்கவில்லை…. புறக்கணித்தார்…… கூட்டணியை விட்டு வெளியேறுவார்…. அதிமுக கூட்டணியில் இணைவார் என்ற ஊகங்களைத் திரித்துச் செய்தியாக வெளியிட்டன. திருமா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தனித் தொகுதிகளும் 1 பொதுத் தொகுதியும் திமுக கூட்டணியில் வழங்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது திமுக தலைமையிடம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேலும் விசிகவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ரோஸ்மில்

திமுக தரப்பில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போலவே 2 தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தொகுதிக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே விசிகவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறுவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தரப்பில் விசிகவுக்கு தனித்தொகுதிகள் 3 பொதுத்தொகுதி 2 என்று தருவோம் என்று விசிகவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவோடு கூட்டணி என்பதை விசிக தலைவர் திருமா முற்றிலும் நிராகரித்துவிட்டார். இந்திய அளவில் பாஜக ஆட்சி அப்புறப்படுத்தப்படவேண்டும். சனாதனம் ஒழிக்கப்படவேண்டும். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு உள்ள விசிக திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கும். எங்கள் வளர்ச்சிக்கேற்பத் தொகுதிகளைத் திமுகவிடம் உரிமையோடு கேட்டுப் பெறுவோம் என்பதில் திருமா உறுதியாக உள்ளார். இதனால் விசிக திமுக கூட்டணியை விட்டு விலகாது என்றும் தொடர்ந்திருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

4 bismi svs

திமுகவில் ஒரு தரப்பினர் விசிக கேட்கும் தொகுதிகளைக் கொடுக்காமல் இருந்தால் விசிக கூட்டணியைவிட்டு வெளியேறிவிடும். விசிகவினால் கூட்டணியில் ஏற்படும் வெற்றிடத்தைப் பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் இணைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவிவருகின்றது. சாதி வாதம் பேசும் பாமகவைத் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருமா தமிழகத்தில் அடுத்த தலைமுறையின் ஆளுமைமிக்க தலைவராக உயர்ந்து வருகிறார். விசிகவுக்குப் பொதுத்தொகுதி வழங்கும் நிலையில் விசிக கட்சி வளர்ச்சியின் பரப்பளவு கூடிக்கொண்டே போகும் என்ற கவலையும் திமுகவின் தலைமையிடம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

- Advertisement -

அண்மையில் விசிக தலைவர் திருமா செய்தியாளர்களிடம் பேசும்போது,“ஓட்டு அரசியல், வாக்கு வங்கி என்பதை உயர்த்திக்கொள்ள நாங்கள் இயக்கம் நடத்தவில்லை. அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக இயக்கம் நடத்துகின்றோம். முடிந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம்” என்று கட்டமாகவே பேசியுள்ளார். திமுக தரப்பில் 3 தொகுதிகளுக்குப் பச்சைக் கொடி காட்டினால்தான் திருமா அறிவாலயம் சென்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். திமுக பச்சைக்கொடி காட்டவில்லை என்றால் விசிக எடுக்கும் முடிவு திமுகவை மட்டுமல்ல; தமிழகத்தை அதிர்வுக்குளாக்கும் என்பதே தற்போதைய கள எதார்த்தமாக உள்ளது.

-ஆதவன்

(2/3/24 மாலை 4.30 மணி வரை கிடைத்த செய்திகளின் அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.