பகல் வந்தால் இரவு வரும், பௌர்ணமி வந்தால் அம்மாவாசை வரும் – அது போல தான் திமுக ஆட்சி !
விடியல் ஆட்சி என்று கூறும் திமுக 2026ல் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா?
கோவில்பட்டி அருகே அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ – திமுகவிற்கு சாவல் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் எம்ஜிஆர் அதிமுகவை துவங்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழகமே இருந்திருக்காது. கொள்ளையடிப்பது ஒரு கலை என்று திரைப்படத்தில் கூறியதை நிரூபித்து காட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றும்,விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் திமுக கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்துள்ளனர். 2ஜி ஊழல் வழக்கினை பற்றி உலகமே பேசியது அப்படிப்பட்ட வரலாறு திமுகவுக்கு உள்ளது.
பகல் வந்தால் இரவு வரும், பௌர்ணமி வந்தால் அம்மாவாசை வரும். அதே போன்று தான் நல்ல ஆட்சி இருக்கும் போது ஒரு கெட்ட ஆட்சி வந்தா தான் நல்ல ஆட்சியின் அருமை தெரியும். அதற்காக அவ்வப்போது திமுகவை மக்கள் ஆட்சியில் அமர வைக்கின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சட்டமன்றத் தேர்தலில் 520 வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி உள்ளது. விடியல் ஆட்சி என்று கூறும் திமுக அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா ? தமிழக மக்கள் நன்றியுள்ள மக்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய தேர்தல் தான் 2026 சட்டமன்றத் தேர்தல் என்றும்.
ஏழை எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. மக்கள் விரும்பவில்லை என்பதால் நிறுத்திவிட்டதாக அந்த துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் தங்கம் மற்றும் பணத்தினை உயர்த்தி வழங்குவதாக கூறியிருந்தனர். ஆனால் அதை செய்யவில்லை . தாலி கொடுத்தது அதிமுக – தாலியை அறுத்தது திமுக என்றும் தாலி இங்கே தங்கம் எங்கே என்று பேசி ஓட்டு வாங்கிய திமுக தான் இன்றைக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது .
அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களை நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றி வாக்கு வாங்க நினைப்பது திமுகவுக்கு கைவந்த கலை . தற்போதும் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள் ஏமாந்து விடக்கூடாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு பல நலத்திட்டங்கள் கிடைக்கும் அது உங்கள் கைகளில் இருக்கிறது என்றார்.
— மணிபாரதி.