தஞ்சை வங்கியை இரும்புத்திரை திரைப்பட பாணியில் ஹேக் செய்த இலங்கை தமிழர்கள் !
தஞ்சை வங்கியை இரும்புத்திரை திரைப்பட பாணியில் ஹேக் செய்த இலங்கை தமிழர்கள் !
இரும்புத்திரை’ திரைப்பட பாணியில் திருச்சியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களை ‘ஹேக்’ செய்து தஞ்சை மாவட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல லட்ச ரூபாய் திருடிய குற்றவாளிகள் 2 பேர் என்பதும், அவ்விருவரும் இலங்கைத் தமிழர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் திருச்சி வாழவந்தான்கோட்டையில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்தவர், திருமணமானவர் என்பதும், மற்றொருவர் திருமணமாகாத இளைஞர் என்பதும் தெரியவந்துள்ளது.
தஞ்சை மங்களபுரம் பகுதியில் வசிக்கும் ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் சிலர் ஏ.டி.எம்-களில் பணம் எதுவும் எடுக்காத நிலையில் அவர்கள் பணம் பரிவர்த்தனை செய்ததுபோல அவர்களது மொபைலுக்கு கடந்த ஜுலை மாதம் தொடர்ந்து குறுஞ்செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
குற்றவாளிகள் திருச்சி காட்டூர் பகுதியிலுள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஏ.டி.எம் ஆகியவற்றிலிருந்தே நூதன முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடியிருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
குற்றவாளிகள் இருவரும் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவ்விரு குற்றவாளிகளையும் கையும் களவுமாக பிடிக்க அவ்விரு ஏ.டி.எம்-களையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான செய்திகள் பிரபல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வைரலாகியது. போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த அவ்விருவரும் சுதாரித்துக்கொண்டு திடீரென தலைமறைவாகிவிட்டனர்.
“தொலைக்காட்சி உள்ளிட்ட மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அச் செய்தி வெளியாகி வைரலானதால் சுதாரி;த்துக் கொண்ட அவ்விருவரும் தலைமறைவாகி விட்டனர். மீடியாக்களில் அச் செய்தி வெளிவராமல் இருந்திருந்தால் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்திருப்போம.; குற்றவாளிகள் தப்பிச் சென்றதற்கு மீடியாக்கள்தான் காரணம்,” என்றார் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதா.
குற்றவாளிகளில் ஒருவர் தனது மனைவியுடன் வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். ஆனால், அவரது கூட்டாளி திருமணமாகாதவர் எனத் தெரிய வந்தள்ளது. தங்களை போலீஸார் தேடுவதை அறிந்து அவ்விருவரும் தலைமறைவாகி விட்டனர். அவ்விருவரின் புகைப்படங்களையும் இராமேஸ்வரம், மண்டபம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களுக்கும், கியு பிரிவு போலீஸார் உள்பட அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளோம். அவர்கள் இருவரும் இதுவரை வேறு எந்த அகதிகள் முகாமுக்கும் செல்லவில்லை எனத் தெரிகிறது என்கிறார் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி இளங்கோவன்.
தமிழகத்தில் வேறு எந்த அகதிகள் முகாமுக்கும் அவர்கள் சென்று தங்கியதாக இதுவரை தகவல்கள் இல்லை. அதனால், அவ்விருவரும் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கியூ பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்