உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !
கடந்த ஆகஸ்டு 3 ஆம் நாள் தஞ்சையில் திமுக சார்பில் காவிரி நதி நீர் பிரச்சனையைத் தமிழ்நாடு அரசு விரைந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய பேச்சு “பெண்களை அவமானப்படுத்துவதாக உள்ளது என்றும் இரு மாநிலங்களிடையே உறவைச் சீர்குலைப்பதாக உள்ளது” என்ற வகையில் 9 பிரிவுகளின் கீழ்ப் பிணையில் வரமுடியாத அளவுக்குக் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஆக.4ஆம் நாள் உதயநிதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கான தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணை முடிந்து அன்றிரவே அவர் விடுவிக்கப்பட்டார். அரசின் நடவடிக்கைகளில் பிடிபடாத விவரங்கள் குறித்துப் பாஜக வழக்கறிஞர் அசுவத்தமன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“17 ஆண்டுகள் நான் பல கிரிமினல் வழக்குகளை நடத்தியுள்ளேன். பிணை எடுத்துள்ளேன். உதயநிதி கைதில் பல விவரங்கள் பிடிபடவில்லை. உதயநிதியைக் கைது செய்து விசாரணைக்காகவே தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கிறோம் என்று காவல்துறை கூறியது. அவர் ரிமாண்ட் செய்யப்படவில்லை என்றும் விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்துள்ளது. ரிமாண்ட் செய்யப்படாத கேஸில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெயில் கொடுக்கப்படுகின்றது. உதயநிதி முன்ஜாமீன் கேட்டுப் பெட்டிஷன் போட்டுள்ளார். ஜாமீன் கொடுப்பது/கொடுக்காமல் இருப்பது உயர்நீதிமன்றத்தின் முடிவு அதில் நான் தலையிடவில்லை.

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக் காவல் கேட்டு ஆஜர்படுத்தும்போது நீதிபதிதான் ஜாமீன் வழங்கமுடியும். உதயநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் உள்ள 9 பிரிவுகளில் 3 பெண்கள் தொடர்பானது. மீதமுள்ள 6 பிரிவுகள் இருமாநிலம், கலவரம், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துதல் என்ற வகையில் ஜாமீனில் வெளிவரமுடியாப் பிரிவுகளுக்கு எப்படித் தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையம் ஜாமீன் வழங்க முடியும் என்பது புரியவில்லை.
தவெக அரசுக்கு யார் ஆலோசனை கூறினார்கள் என்பதும் தெரியவில்லை. தவெக அரசு ஏன் இப்படி நடந்து கொண்டது என்பதும் புரியவில்லை. நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்படாதவருக்கு ஜாமீன் வழங்கப்படுகின்றது. காவல் நிலையத்திலும் ஜாமீன் வழங்கப்படுகின்றது ஏன் என்பது புரியவில்லை” என்றார்.
உதயநிதி கைதில் தவெக அரசு ஏன் இத்தனை குழப்பத்துடன் நடந்து கொண்டது என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை உதயநிதி கைதில் தவெக நாடகம் ஆடியுள்ளதோ என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இதற்கான விடையை முதல் அமைச்சர் ஜோசப் விஜய்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
— ஆதவன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.