திருச்சி – துறையூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ! கண்டுக்கொள்ளாத மா.செ. !
”நீ ஒன்றிய நிர்வாகி, நகரத்தில் தலையிட உரிமையில்லை” என நகரச்செயலாளர் அமைதி பாலு பேச, வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு நடக்கும் நிலையில் ...
திருச்சி – துறையூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ! கண்டுக்கொள்ளாத மா.செ. !
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் துறையூர் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மார்ச்-31 இரவு நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நகரச் செயலாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரான பரஞ்ஜோதி முன்னிலையிலேயே அடிதடி ஏற்படும் அளவிற்கு நடந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் நகர அதிமுக செயலாளராக அமைதி பாலு என்ற பாலமுருகவேல் கடந்த ஒன்றரை வருடமாக, முன்பு இருந்து மறைந்த செக்கர் ஜெயராமன் அடுத்ததாக துறையூர் அதிமுக நகரச்செயாளராக பொறுப்பேற்றதில் இருந்து அவரின் கட்சியைச் சார்ந்த துறையூரின் 24 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், மூத்த நிர்வாகிகள் பெரும்பாலோனோர் . நகரச்செயலாளர், கட்சியினரை கண்டுகொள்வதில்லை, எந்தத் தகவலும் கட்சி சேர்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தகவல்களை சரியான நேரத்தில் சொல்வதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு முசிறி பிரிவு ரோடு அருகில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வருகின்ற 13-ந்தேதி பெரம்பலூர் பாராளுமன்றத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கான இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்த போது, துறையூர் நகர வார்டு அதிமுக மூத்த நிர்வாகி மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதியிடம், நகரச்செயலாளர் அமைதி பாலு கட்சியினரை மதிப்பதில்லை, தகவல் சொல்வதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினார் – இதற்கிடையில் நகரச்செயலாளரை தனக்கு இந்தக் கூட்டம் நடப்பதை ஏன் சொல்லவில்லை என 22-ம் வார்டு செயலாளர் , மாவட்ட மருத்துவ அணி செயலாளருமான டாக்டர் அரவிந்தன் கேட்டார். அவருக்கு ஆதரவாக இதே கருத்தை ஒன்றிய நிர்வாகியான வழக்கறிஞர் மனோகர் என்பவரும் நகரச் செயலாளரிடம் கேட்க, ”நீ ஒன்றிய நிர்வாகி, நகரத்தில் தலையிட உரிமையில்லை” என நகரச்செயலாளர் அமைதி பாலு பேச, வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பு நடக்கும் நிலையில் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிகழ்வு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி முன்பாகவே நடந்தது. இது பற்றி ஒரு தரப்பினர் பரஞ்ஜோதியிடம் கூறி முறையிட, அவரோ இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இது குறித்து நகரச்செயலாளரான அமைதி பாலுவிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் சென்றதைக்கண்ட துறையூர் நகர, ஒன்றிய மூத்த கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் அதிருப்தியில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மாற்றுக்கட்சியில் இருந்து இங்கு வந்து நகரச்செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதில் பொறுப்பின்றி நகர செயலாளர் நடந்து கொள்கிறார். தற்போதைய எம்.பி. தேர்தலுக்காக துறையூர் நகரில் உள்ள 24 வார்டு பிரதிநிதி மற்றும் வார்டு செயலாளர்களை சந்தித்து , எந்தெந்த பகுதிகளில் அதிமுகவின் வாக்கு வங்கி பலவீனமாக உள்ளது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப தேர்தல் பணிகளைச் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை எவ்விதமான தேர்தல் வேளையும் பார்க்காமல், எந்த நிர்வாகியையும் சந்திக்காமல் இருந்து வருவதால் துறையூர் நகர்ப்புற பகுதிகளில் அதிமுக வாக்குவங்கி நகரச்செயலாளரின் மெத்தனப்போக்கால் மிகுந்த பலவீனமாகவே உள்ளது” எனக் கூறினார். இந்த சூழலில் வருகின்ற 13ந்தேதி எடப்பாடி பழனிச்சாமி துறையூரில் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஷ், துறையூர்.