தமிழகத்தில் பாஜக குறிவைக்கும் 25 எம்.பி தொகுதிகள் !  பிஜேபி வீழ்த்த துடிக்கும் 10 பிரபலங்கள் !

0

தமிழகத்தில் பாஜக குறிவைக்கும் 25 எம்.பி தொகுதிகள் !  களத்தில் 10 வேட்பாளர்கள் ! ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக. !  

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக 18 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் பாஜக – எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக உறவு சுமூகநிலையில் இல்லை. கோவையில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை,“அதிமுக நான்காகத் திசைக்கொன்றாகப் பிரிந்து கிடக்கின்றன. அதிமுகவை ஒற்றுமைப்படுத்துவதும், எடப்பாடி வாழ்க, பன்னீர் வாழ்க என்று சொல்லிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைவிடப் பாஜக தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த முடிவுக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

அண்ணாமலை – எல்.முருகன்
அண்ணாமலை –
எல்.முருகன்

அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசும்போது, “தொண்டர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். பாஜகவோடு கூட்டணி வேண்டாமெனக் கருத்து தெரிவித்துள்ளீர்கள். இந்தக் கருத்துகள் அனைத்தும் நம் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டியிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதால், கழக இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகள் அதிக இடங்களில் கழகம் வெற்றிபெற இப்போதே சூளுரை எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இருவரின் பேச்சினைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் குறிப்பாகத் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்களில் பாஜக – பழனிசாமி அதிமுகவோடு கூட்டணி அமைய இனி வாய்ப்பில்லை என்று கூறினார்கள். ஜி 20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி மோடியால் அழைக்கப்பட்டுக் கலந்துகொண்டார். இதனைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் மோடிக்கு எதிராக அறிக்கையொன்றை வெளியிட்டார்.

ஓ.பிஎஸ் - மோடி
ஓ.பிஎஸ் – மோடி

அண்மையில் குஜராத் மாநிலத்தில் பாஜக பெரும் வெற்றிபெற்றது. பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு எடப்பாடிக்கும், பன்னீருக்கும் குஜராத் பாஜக அழைப்பு விடுத்திருந்தது. பன்னீருக்கு அழைப்பா? என்று கொந்தளித்த எடப்பாடி, குஜராத் பதவியேற்பு விழாவிற்கு வாழ்த்துகளை மட்டும் தெரிவித்து, கலந்துகொள்ள இயலவில்லை என்று தெரிவித்தார். அழைப்பு ஏற்றுப் பன்னீர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைப் பன்னீர் நேரில் சந்தித்துப் பேசினார். குஜராத் மாநிலப் பாஜக சார்பில் பன்னீரை வரவேற்றபோது காவி துண்டு போர்த்திச் சிறப்பித்தனர். பன்னீர் கழுத்தில் காவி துண்டுடன் விழாவில் வலம் வந்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு+புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்டு 25 இடங்களை வெல்வோம். 2024இல் அமையும் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தமிழ்நாட்டின் சார்பில் 5 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது மிகையாகத் தெரியலாம். பாஜக முழுமையாகத் தனித்துபோட்டியிடவில்லை. பன்னீர் அதிமுக, பாமக, சரத்குமாரின் கட்சி, புதிய தமிழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம், ஏ.சி.சண்முகம் கட்சி போன்ற உதிரிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சியினர் பாமக தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என்றும் பாஜக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் திமுக மற்றும் அண்ணா திமுகவுக்குத் தொடர்ந்து வாக்களிக்காமல் இவற்றை எதிர்க்கும் கட்சிகளுக்குச் சுமார் 15% பேர் வாக்களித்து வருகின்றனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது 7% வாக்கு வங்கியுள்ள பாஜக 15% அளவைத் தொட்டு, அரசியல் அரங்கில் அதிர்வை ஏற்படுத்தும் என்று தேர்தல் கணிப்பாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சி.பி.ராதா கிருஷ்ணன்
சி.பி.ராதா கிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது பெற்றுள்ள 7% வாக்கு வங்கியில் பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், நாம் தமிழர் கட்சியில் தொண்டர்களிடையே கூட்டணி வேண்டும் என்று குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்பதை அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சீமான் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாத கட்சிகளை இந்தத் தேர்தலில் மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் என்றும் கணிப்புகளின் வழி செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

கமலஹாசன் தலைமையில் உள்ள மக்கள் நீதி மையம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வருகின்ற டிசம்பர் 25ஆம் நாள் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைப்பயணத்தில் கமல் கலந்துகொள்கிறார். ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில்தான் கலந்துகொள்கிறார் என்பது கூடுதல் தகவல். திமுக காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும் தொகுதிகளில் ஒன்றில் கமல் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் கசிகின்றன.

திருமா - பேட்டி
திருமா – பேட்டி

திமுக கூட்டணியில் பாமக இணைக்கப்பட்டால் விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும் என்று திருமா தெரிவித்திருக்கிறார். இதனால் திமுக கூட்டணி தற்போது வரை உறுதியாகவே உள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் திமுக பாஜக கூட்டணி ஏற்படப்போகிறது என்ற வெடிகுண்டைத் தூக்கிப்போட்டார். வெடிகுண்டு வெடிக்காமல் சிரிக்கத் தொடங்கியது. மக்களும் சிரிக்கவே செய்தனர்.

பாஜக 25இல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்தாலும் 10 தொகுதிகளில் உறுதியாக வெல்லவேண்டும் என்று தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டது.

பொன்.இராதாகிருஷ்ணன்
பொன்.இராதாகிருஷ்ணன்

நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக கன்னியாகுமரி தொகுதியில் 5% வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி கன்னியாகுமரி தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணன் நின்றால் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது எனலாம்.

அடுத்து, கார் குண்டு வெடிப்பு, சிலிண்டர் குண்டு வெடிப்பு என்று கோவை பதட்டத்துடன் உள்ளது. இந்தப் பதட்டத்தைப் பயன்படுத்திக் கோவையில் சி.பி.இராதாகிருஷ்ணனை நிறுத்து வெற்றியை ஈட்டிவிடவேண்டும் என்று முனைப்புடன் பாஜக தொண்டர்கள் செயலாற்றித் தொடங்கி விட்டார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு இவர் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தே வருகிறார். இவரைத் தாமரை சின்னத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உடையார் சமூகம் அதிகம் உள்ள கள்ளக்குறிச்சியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அங்கே தற்போதைய எம்.பி. பொன்முடியின் மகன் சிகாமணி. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துப் பாஜகவை வெற்றிபெற வைத்து, பொன்முடி மகனைத் தோற்கடித்த வேண்டும் என்று பாஜக திட்டம் வகுத்துள்ளது.

தடா பெரியசாமி
தடா பெரியசாமி

பாஜகவின் மிகப்பெரிய எதிரி திமுக என்றாலும், அதைவிடப் பெரிய எதிரி விசிகவின் தலைவர் தொல்.திருமா தான். சிதம்பரம் தொகுதியில் மீண்டும் திருமாவளவன் போட்டியிட்டால், திருமாவின் பழைய நண்பர் தடா பெரியசாமியைக் களத்தில் இறக்கி, ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் திருமா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாஜக உறுதி பூண்டுள்ளது.

தூத்துக்குடியில் பாஜகவின்  சசிகலா புஷ்பா போட்டியிட வைத்துத் திமுக மகளிர் அணி செயலாளர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைத் தோற்கடிக்கவும் பாஜக உறுதி பூண்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார் என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் வாரிசு அரசியல் என்ற முழக்கத்தை வைத்து இவரையும் தோற்கடிக்கப் பாஜக வியூகம் வகுத்து வருகின்றது.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

அதுபோலவே வேலூரில் துரை முருகன் மகன், வட சென்னையில் ஆற்காடு வீராசாமி மகன், தென்சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி, மத்தியச் சென்னை தயாநிதி மாறன், பெரம்பலூர் தொகுதியில் கே.என்.நேரு மகன் அருண்நேரு போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். அரசியல்வாதிகளின் வாரிசுகளைத் தோற்கடிப்போம். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்துத் தோற்கடிக்கத் திட்டங்கள் டெல்லியில் அமித்ஷாவால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ராசா. ஆ
ராசா. ஆ

பாஜகவுக்குச் சிம்மசொப்பனமாக இருப்பவர் திமுகவின் முன்னணி தலைவர் ஆ.இராசா. இவர் சனாதன எதிர்ப்பைக் கையிலெடுத்தார் என்பதற்காக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை ஒன்றிய அரசு தொடுத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவர் தற்போது நீலகிரி தொகுதி எம்.பி.யாக உள்ளார். எதிர்க்கட்சிகள் ஒருவேளை ஆட்சி அமைக்க நேர்ந்தால் ஆ.இராசா ஒன்றிய அமைச்சராக வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஆ.இராசாவைச் சித்தாந்த ரீதியில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்ற மத்திய மந்திரி சிதம்பரம் மகன் கார்த்தியின் பேச்சுகள் அனைத்தும் திமுகவை எப்போதும் கோபம் கொள்ள வைக்கும் என்பது உண்மையே. 2024 தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் மீண்டும் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டால், வாரிசு அரசியல் என்ற முழக்கத்தை முன்வைத்தும் திமுக வாக்குகளையும் கார்த்திக்கு எதிராகத் திருப்பி எச்.இராஜாவைப் போட்டியிட்டு வெற்றிபெற வைக்கவும் திட்டம் உள்ளது.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

ஒருவேளை பாஜக கூட்டணியில் பன்னீர் அதிமுக இருந்தால் தேனித் தொகுதியில் பன்னீர் மகன் இரவீந்திரநாத் குமார் வாரிசு அரசியல் எதிர்ப்பு அடிப்படையில் அவர் 2024 தேர்தலில் போட்டியிட மாட்டார். அவருக்குப் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர உறுதி தந்துள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 15% என்று வாக்கு வங்கியை உயர்த்திக்கொள்ளும். பன்னீர், எடப்பாடி அதிமுக குறைவாக விழுக்காட்டில் தான் வாங்கித் தங்களின் வாக்கு வங்கியைச் சரித்துக்கொள்ளும். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வாங்கிச் சரியும் ஆபத்தும் உள்ளது.

2026 சட்டமன்றத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வங்கியைச் உயர்த்தி அதிமுகவின் இரு அணிகளின் வாக்கு வங்கியை சிதைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்கள் இன்னும் எப்படி மாறும் என்பது புதிராகவே உள்ளது

பாஜக – வெற்றி இலக்கு தொகுதிகள்

1.கன்னியாகுமரி 2. கோயமுத்தூர் 3. வட சென்னை 4. மத்தியச் சென்னை 5. தென்சென்னை 6. தென்காசி 7. சிவகங்கை 8. வேலூர் 9. கள்ளக்குறிச்சி 10. நீலகிரி 11. பெரம்பலூர்

 

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.