திருவண்ணாமலையை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் !
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடா் கனமழையால் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஏற்பட்ட மண் சரிவினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மலை மீது மண் சரிவு !
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் திருவண்ணாமலை அருணாசலம் தியேட்டர் ஒட்டியுள்ள வ.உ.சி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) மலை மீது சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டதின் காரணமாக ராட்சத பாறை உருண்டு மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. இதில் ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மீது அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டு வீடு மண்ணுக்குள் புதைந்தது.
அதில் ராஜ்குமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் உறவினர் குழந்தைகள் என 5 பேர் உள்பட , 7 பேர் சிக்கிக்கொண்டனர். இதில், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா மற்றும் குழந்தைகள் கவுதம், வினியா, மற்றும் மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
கலெக்டர் மற்றும் மீட்புப் குழுவினர் விரைந்தனர் :
இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, தீயணைப்புத் துறை, மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோர் மீட்புபணிகளை மேற்கொண்டனர்.
இந்த ,மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 35 , திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 , மாநில மீட்பு படையினர் 20, திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் 40 , மற்றும் காவல்துறை சார்பாக 60 பேர் என மொத்தம் 170 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி குறுகலான பாதை என்பதாலும் பெரிய கனரக வாகனங்கள் உள்ளே வரமுடியாத காரணத்தினாலும் மீட்பு பணி மிகவும் தாமதமாகவே நடைபெற்றது. “ஜேசிபி போன்ற வாகனங்களோ பாறைகளை உடைக்கக்கூடிய பெரிய உபகரணங்களோ கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் சில ஆயுதங்களை கொண்டு கைகளாலேயே பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தினர்.
மீட்பு பணியில் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டிசம்பர்-2 இரவு 7:35 மணியளவில் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 2 மண் சரிவு ஏற்பட்ட நிலையில் பே கோபுரம் பின்புறம் உள்ள பாதி மலை மீதுள்ள குகை நமச்சிவாயர் ஜீவ சமாதி ஆலயத்தின் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தென் கிழக்கு பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மகாதீபம் ஏற்றும் இடத்திற்கு முன்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் வேலு ,
திருவண்ணாமலை
இதனையடுத்து ,முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மீட்புப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவரோடு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, ஆகியோர் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். திருவண்ணாமலை கடந்த 1965 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் பெரிய மழையை எதிர் கொண்டிருப்பதாகக் கூறினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கார்த்திகை தீபம் ஏற்ற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மலை மீது அடுத்தடுத்து மண் சரிவு, 7 பேர் மரணம், கோவில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. அண்ணாமலையார் கோயிலை சூழ்ந்த மழை நீர் போன்ற சம்பவங்களால் திருவண்ணாமலையார் பக்தர்களிடையே பெறும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
– மணிகண்டன்.