வேகமெடுக்கும் எல்ஃபின் வழக்கு ! அடுத்தடுத்து கைதான ஏஜெண்டுகள் ! திருச்சி EOW போலீசார் அதிரடி !
எல்ஃபின் மோசடி வழக்கில் எல்ஃபின் ராஜா உள்ளிட்டு பல்வேறு நபர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய ஏஜெண்டுகள் வினோத்குமார், விஜய் (எ) தங்கவேல் ஆகிய இருவரை அடுத்தடுத்து கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவினர்.
தமிழகத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்துவரும் ஆயிரக்கணக்கான வழக்குகளில், தமிழகம் தழுவிய அளவில் கவனத்தை பெற்ற வழக்குகளுள் ஒன்று எல்ஃபின் மோசடி வழக்கு.

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல இடங்களில் கிளை நிறுவனங்களை தொடங்கி மோசடியில் ஈடுபட்ட நிறுவனம்தான் ELFIN E.Com Pvt Ltd என்ற நிறுவனம்.
இதுதவிர, R.M.W.C, parrow Global Trade Trichy ஆகிய பெயர்களில் துணை நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டும் மோசடியை நடத்தியிருக்கிறார்கள்.
ஊருக்கு ஒரு திட்டம். பேருக்கு ஒரு கம்பெனி. ஒரு ஊரில் ஒரு நிறுவனம் வழக்கில் சிக்கினால், அடுத்த ஊரில் வேறு ஒரு பெயரில் நிறுவனம் என தமிழகம் முழுவதும் இவர்கள் சுமார் 400 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டிருப்பதாக, போலீசார் தெரிவிக்கிறார்கள். கம்பெனி வழக்கில் சிக்கியிருந்த சமயத்திலும், அதன் ஏஜெண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த நிலையிலும் ஆன்லைன் ஆப் வழியாக புதுவகை மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பதையறிந்து போலீசே மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.
எல்ஃபின் ராஜா மற்றும் அவரது துணை நிறுவன மோசடிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பதிவான 17 வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்றே, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையில் சுமார் 20 போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திருந்தார்கள்.
இக்குழுவினரின் தொடர் முயற்சியால், 17 வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் டிசம்பரில் அடுத்தடுத்து இருவரை கைது செய்யப்பட்டார்கள். 2025 ஆண்டு தொடக்கத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான், தற்போது, திருச்சி மாவட்டத்தில் நபர்களுக்கு எதிராக பதிவான 5/2022 என்ற குற்ற எண் கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கடைசி இரண்டு குற்றவாளிகளையும் தற்போது கைது செய்து, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், R.M.W.C, ELFIN E.com.pvt Ltd..Sparrow Global Trade Trichy ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்திருப்பின் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், மன்னார்புரம், திருச்சிராப்பள்ளியில் புகார் அளிக்கலாம் என்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, கவர்ச்சிகரமான திட்டங்களுக்கும் அதிக வட்டிக்கும் ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் பணத்தை இழந்து ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
— அங்குசம் செய்திப் பிரிவு.