மீள் பதிவு : அன்றே சொன்ன அங்குசம் ! திருச்சி எம்.பி. வேட்பாளரான துரை வைகோ !

திருச்சி தொகுதியைக் கேட்டு மதிமுக மல்லுக்கு நிற்பதையும்; ஒருவேளை திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டாலும் வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ தான் களமிறக்கப்படுவார் என்பதையும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாகவே அங்குசம் இணையத்தில் பதிவு செய்திருந்தோம் ...

0

திமுக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதிமுக சார்பில் துரை. வைகோ போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி தொகுதி மதிமுகவிற்குத்தான் ஒதுக்கப்படுதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாவும், அவ்வாறு மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டால் வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ தான் களமிறக்கப்படுவார் என்பதையும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாகவே அங்குசம் இணையத்தில் பதிவு செய்திருந்தோம். நமது கணிப்பை உறுதிபடுத்தும் விதமாக, முடிவுகள் அமைந்திருக்கிறது. கடந்த ஜூன்-13 அன்று அங்குசம் இணையத்தில் வெளியான திருச்சி எம்.பி. வேட்பாளராக  வைகோ மகன் துரை வைகோ ! பதிவை மீள்பதிவு செய்கிறோம்.

 

திருச்சி எம்.பி. வேட்பாளராக  வைகோ மகன் துரை வைகோ !

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

துரை வைகோ
துரை வைகோ
- Advertisement -

- Advertisement -

அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் தொகுதியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோவும், காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லைச் சத்யாவும் போட்டியிட மதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது.

காரணம் 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றால் மாநிலக் கட்சிக்காக அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பது முக்கியக் காரணமாகும்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

மதிமுக விருப்பத்தை அறிந்த திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான பேச்சுவார்த்தைக் குழு, மதிமுகவிடம், “இரண்டில் ஒன்று உறுதி. இரண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விருதுநகர் தொகுதி வைகோவுக்கு மிகவும் சாதகமான தொகுதிதான் என்றாலும் தனித்தும் கூட்டணியிலும் நின்ற போது விருதுநகரில் வைகோவே தோல்வியடைந்துள்ளார்.

துரைவைகோவுக்கு எப்படி வாய்ப்பாக அமையும்? வேறு தொகுதியைத் தேர்வு செய்யுங்கள்” என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 7 தனித்தொகுதிகளைத் தவிர்த்து 32 தொகுதிகளையும் மதிமுக அலசி ஆராய்ந்து திருச்சியைத் தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மையப் பகுதி திருச்சி. இந்தத் தொகுதியில் மட்டும்தான் சாதி, மதம், இனம், சொந்த ஊர்க்காரர், வெளியூர்க்காரர் என்ற பிரிவினைகள் பார்க்காமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

வைகோ - துரை வைகோ
வைகோ – துரை வைகோ

1952இல் சுயேட்சையாக டாக்டர் ஏ.பி.மதுரம் வெற்றி பெற்றார். தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்கள் வெற்றி பெற்றன. 80இல் திமுகவின் செல்வராஜ் வெற்றி பெற்றார். தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் வெற்றி பெற்றார். இரு முறை பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பொதுத்தொகுதியில் பட்டியலினம் சார்ந்த தலித் எழில்மலை வெற்றி பெற்றார். மதிமுக சார்பில் எல்.கணேசனும் வெற்றிபெற்றுள்ளார்.

இதனையடுத்து அதிமுக சார்பில் பா.குமார் இரண்டு முறை வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலை வைத்துத்தான் மதிமுக துரைவைகோவுக்குத் திருச்சியைத் தேர்வு செய்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் போட்டியிடுவதற்கான பூர்வாங்க வேலைகளை மதிமுக செய்து வந்தது. பூத் கமிட்டிகள் கூட மதிமுக சார்பில் அமைக்கப்பட்டது.

வைகோ - மு.க. ஸ்டாலின்
வைகோ – மு.க. ஸ்டாலின்

திருச்சியின் மதிமுக மாவட்டச் அலுவலகமான நடராசன் மாளிகை அப்போது மாவட்ட செயலாளராக இருந்த TTC சேரன் அவர்களால் ரூ.25 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. வைகோ ஓய்வெடுக்கப் படுக்கையறை, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க அறை, தொண்டர்களைச் சந்திக்கத் தனியாக அரங்கம், 10க்கும் மேற்பட்ட குளியல் வசதியுடன் கழிவறைகள் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன.

தேர்தல் நெருங்க… நெருங்க… திமுக கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும். அதனால் 40க்கு 40ஐ வென்றெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இதன் அடிப்படையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

வைகோ உதயசூரியன் நின்றால் திமுக உறுப்பினராக வேண்டும் என்பதால் தனக்குத் திருச்சி தொகுதி வேண்டாம். மாநிலங்களவை உறுப்பினர் தந்தால் போதும் என்று மக்களவைத் தேர்தலிருந்து விலகிக்கொண்டார் என்பது வரலாறு.

L.-Ganesan DMK
L.-Ganesan DMK
4 bismi svs

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற எல்.கணேசன் பதவிக் காலம் முடிவதற்குள் திமுகவில் இணைந்து விட்டார். வைகோ போட்டியிட முடியாத இடர்ப்பாடு. திருச்சியை மீண்டும் மதிமுக வசம் கொண்டுவரத் துரை வைகோவை போட்டியிட வைப்பதற்காக முயற்சிகளைத் திருச்சி மாவட்டக் கழகம் தொடங்கிவிட்டது எனலாம்.

மாநில மகளிர் அணி செயலாளர் - துரை வைகோ
மாநில மகளிர் அணி செயலாளர் – துரை வைகோ

நம்முடன் பேசி மதிமுகவைச் சார்ந்த ஒருவர், “சில நாள்களுக்கு முன்பு கட்சியின் விழாவில் பேசிய மாநில மகளிரணி செயலாளர் திருச்சியில் மீண்டும் மதிமுக நாடாளுமன்றத்தில் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மகளிரணி செயலாளர் போட்டியிட விரும்புகிறார் என்று தான் நினைத்திருந்தோம்.

அவரே நம் இளந்தலைவர் துரைவைகோ போட்டியிட வேண்டும் என்று தலைமையை வலியுறுத்திப் பேசினார். விருதுநகரை விடத் திருச்சி துரைவைகோவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

துரைவைகோ திருச்சியில் போட்டியிட்டால் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடத் திமுக அனுமதிக்காது. தங்களின் சின்னமான உதயசூரியனில்தான் நிற்கவேண்டும் என்பதை வலியுறுத்தும்.

அப்படியானால் துரைவைகோ திமுகவில் உறுப்பினராக மாறித்தான் நிற்கவேண்டும் என்ற நிலை உருவாகும். அந்தநல்லூரில் மகளிரணி செயலாளர் கட்டியுள்ள திருமண மண்டபத்தைத் திறந்து வைக்கத் திருச்சிக்குத் தலைவர் வைகோவும், இளந்தலைவர் துரைவைகோவும் வருகைதர உள்ளனர். அப்போது துரைவைகோவைத் திருச்சியில் போட்டியிட வைக்கத் தலைமையிடம் வலியுறுத்தப்படும்” என்று கூறினார்.

திருப்பூர் துரைசாமி
திருப்பூர் துரைசாமி

திமுகவோடு மதிமுகவை இணைக்கவேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள வைகோ,“எந்த காலத்திலும் மதிமுகவைத் திமுகவோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மதிமுகவின் பொருளாளர் கணேசமூர்த்தியின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், “நான் திமுக உறுப்பினர்” என்று நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் மதிமுக பொதுக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் கணேசமூர்த்தி மேடையில் பொருளாளர் என்ற நிலையில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்துக் கீழே இருப்பார்.

மதிமுகவைத் திமுகவோடு இணைக்கமாட்டேன் என்று கூறும் வைகோ மகன் துரைவைகோ நாடாளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்று திமுக உறுப்பினராகச் சம்மதம் தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.

பொருளாளர் கணேசமூர்த்தி
பொருளாளர் கணேசமூர்த்தி

இது குறித்து நம்மிடம் பேசிய மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஒருவர்,“கட்சியில் அவைத்தலைவர் ஆதரவு இல்லை. பொருளாளர் திமுகவில் உள்ளார். மதிமுக இப்போது வைகோ என்ற தனிமனிதனை மட்டுமே நம்பி இயங்கி வருகின்றது.

வைகோவுக்கு அடுத்துக் கட்சியின் தலைமைக்குத் துரைவைகோ என்று அடையாளம் காட்டிவிட்டார். அந்த இளந்தலைவர் பின்னால் ஒரு கூட்டம் செல்கிறது. துரைவைகோ தலைமைக்கழகச் செயலாளர் என்ற நிலையில் பெரிதாகக் கட்சியை வளர்க்கவும் இல்லை, வளர்க்கவும் முடியாது.

துரைவைகோ நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் தொகுதி நிதியில் பல வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளலாம். அது துரைவைகோ வளர்ச்சிக்கும் கட்சி வளர்ச்சிக்கும் உதவியாகவே அமையும். துரைவைகோ உள்ளே மதிமுகவாக இருந்துகொள்ளலாம்.

வைகோ - துரை வைகோ
வைகோ – துரை வைகோ

உதயசூரியனா? பம்பரமா ?

வெளியே திமுகவாக இருந்துகொள்ளலாம். திமுக பெரிய எதிர்ப்பைத் தெரிவிக்காது. அப்படித்தான் அண்ணன் கணேசமூர்த்தியும் தற்போது உள்ளார். எனவே துரைவைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ அனுமதிப்பார் என்றே நம்புகிறோம்.” என்று முடித்துக்கொண்டார்.

துரை வைகோ விருதுநகரில் போட்டியிடுவதைத் தவிர்த்துத் திருச்சியில் போட்டியிட வைக்க மதிமுக எடுத்த முடிவு நல்லமுடிவுதான். ஐயமில்லை. துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவாரா? தன் கட்சி சின்னமான பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவரா? என்ற கேள்விக்குத் திமுகவிடம்தான் பதில் உள்ளது.

வைகோவையே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று நிபந்தனை விதித்த திமுக, துரைவைகோவைப் பம்பரம் சின்னத்தில் போட்டியிட விட்டுக்கொடுக்காது என்பதே தற்போதைய திமுகவின் நிலைப்பாடாக உள்ளது.

மதிமுகவும் திமுகவை அனுசரித்தே முடிவுகளை எடுக்கும் என்பதில் ஐயமில்லை. துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் நிற்கவே வாய்ப்புகள் அதிகம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுகவும் மதிமுகவும் ஒன்னு, இதை அறியாதவர்கள் வாயில்தான் மண்ணு என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகின்றது. காலம் சொல்லும் பதிலுக்குக் காத்திருப்போம்.

– ஆதவன்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.