திருச்சியில் வெளிநாடு அனுப்பும் ஏஜென்ட் மர்ம மரணம்..
திருச்சியில் வெளிநாடு அனுப்பும் ஏஜென்ட் மர்ம மரணம்..
திருச்சியில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்ட் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர் நேற்று 16/05/2021 இரவு மர்மமான முறையில் தலையில் காயத்துடன் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இதுதொடர்பாக நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை தொடங்கியதில் இறந்துபோன பாரதிராஜாவின் சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் என்றும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிள்ளைகள் அங்கு இருந்து வரும் நிலையில், பாரதிராஜா வெளிநாட்டிற்கு ஆட்கள் பிடித்து அனுப்பும் ஏஜெண்டாக திருச்சியில் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த போது சுதா எனும் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வீடு எடுத்து அண்ணாநகரில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று 16/05/2021 இரவு 10 மணி அளவில் பாரதிராஜா தனது அப்பா பூபாலனுக்கு தொலைபேசி வாயிலாக திருச்சியிலிருந்து பேசியுள்ளார். அதன்பின்பு பாரதிராஜாவின் அப்பா அன்று இரவே பூபாலன் தன் மகனுக்கு 11 மணி அளவில் கால் செய்தபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் இல் இருந்துள்ளது.
மேலும் பாரதிராஜாவின் மனைவி சுதா தனது உறவினரின் வீட்டிற்கு இரவோடு இரவே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. காரணம் வீட்டில் பாரதிராஜாவுடன் பிரச்சனை என்று போலீசார் விசாரணையில் கூறியுள்ளார். அந்நிலையில் அதிகாலையில் வீட்டில் தலையில் காயத்துடன் பாரதிராஜா தூக்கில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர் .
மேலும் பாரதிராஜாவின் அப்பா பூபாலன் எனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனது மகனை சுதா மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொன்று விட்டனர் என்று நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
–ஜித்தன்