ஜெயில மாத்துங்க ! உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து போன சவுக்கு சங்கர் !
உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து போன சவுக்கு சங்கர் ! குறித்து நீதிபதியிடம் கோரிக்கை ! கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் … கோவை சிறையிலிருந்து மாத்துங்க … சவுக்கு சங்கர் கோரிக்கை !
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கஸ்டடியின் கீழ் நடைபெற்ற 24 மணிநேர விசாரணைக்குப் பிறகு, திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர். மே-28 ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார், நீதிபதி சத்யபிரதா.

சவுக்கு சங்கர் தரப்பில் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்தால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வாதிட்ட நிலையில், மூன்றாம் தரமான விசாரணை முறைகளை கடைபிடிக்கக்கூடாது; மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது; மூன்றுமுறை வழக்கறிஞர் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒருநாள் நீதிமன்றக் காவலுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரிடம் போலீசார் துன்புறுத்தினார்களா? முறையாக உணவு வழங்கினார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “விசாரணையின்போது, போலீசார் துன்புறுத்தவில்லை. கண்ணியமாகவே நடத்தினார்கள். உரிய நேரத்திற்கு உணவும் வழங்கினார்கள்.” என்பதாக பதிலளித்தார் சவுக்கு சங்கர்.

இதனைத்தொடர்ந்து, மே-28 ஆம் தேதிவரை நீதிமன்றக்காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். மேலும், ஏதேனும் தெரிவிக்க விரும்புகிறார்களா? என்று சவுக்கு சங்கரிடம் சம்பிரதாய அடிப்படையில் நீதிபதி கேட்டதுதான் தாமதம்.
“திருச்சி சிறை அல்லது சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும்” என்பதாக கோரிக்கையை முன்வைத்தார் சவுக்கு சங்கர். எதற்காக சிறையை மாற்ற கோருகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “கோவை மத்தியசிறையில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாத, கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அறையில் என்னையும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வழக்கமான கைதிகள் அடைக்கப்படும் பொதுவான அறைக்கு என்னை மாற்ற வேண்டும். மனநலம் பாதித்த கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் தங்க வைக்கப்பட்டிருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். ஆகவே, திருச்சி அல்லது சென்னைக்கு மாற்றுங்கள்” என்பதாக கோரிக்கையை நீதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்தார், சவுக்கு சங்கர்.

சிறையை மாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்பதாகவும், உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்த நீதிபதி, கோவை மத்திய சிறையில் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை கோரிக்கை மனுவாக சமர்ப்பித்தால், கோவை சிறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கம்போல பெண்போலீசார் படைசூழ பாதுகாப்பாக கோவை மத்திய சிறையை நோக்கி போலீசு வேனில் பயணமானார் சவுக்கு சங்கர்.
கோவையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டதிலிருந்து கடந்த மூன்று நாட்களும் சவுக்கு சங்கரின் முகம் வாடிய நிலையிலேயே இருந்தது. யூட்யூப் வீடியோக்களில் நெஞ்சை நிமிர்த்தி நரம்பு புடைக்க பேசிய சவுக்கு சங்கரா, இப்போது நீதிமன்ற வளாகத்தில் குனிந்த தலை நிமிராமல் தரையை நோக்கி சொருகிய கண்களோடு களையிழந்து காட்சியளிக்கிறார் என்று அவரது கருத்தோடு உடன்படாதவர்களைக்கூட இரக்கம் கொள்ளச் செய்வதாக இருந்தது.
ஆதிரன்.