17 ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம் … அர்ச்சக மாணவர்கள் !
கருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் 5-ஆ ம் ஆண்டு !
ஆகஸ்ட் 14 – பொன்னெழுத்துக்களால் வரலாறு தன்னைப் பதிவு செய்த நாள்!
பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கலைஞரை நினைவு கூர்கிறோம்!
17 ஆண்டுகளாக காத்திருக்கும் 178 மாணவர்களுக்கும், 2021-லிருந்து படித்து முடித்த 400 மாணவர்களுக்கும் உடனே பணிநியமனம் வழங்க வேண்டும்!
இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில் விதைக்கப்பட்டு வளர்ந்து செழித்த காலம், திராவிட இயக்கத்தின் ஆட்சிக்காலம்.
சமூகத்தின் மிக முக்கிய அதிகார மையமான கோயில் கருவறையில் 2000 ஆண்டுகளாக நிலவி வந்த பார்ப்பனீய மேலாண்மை அடிப்படையிலான கருவறைத் தீண்டாமை இருள் அகற்றப்பட்ட காலமும் இதுதான்.
அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் நிகழ்ந்து இன்றுடன் 5-ஆம் ஆண்டு நிறைவடைகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக அரசு 29 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தது. அந்த அர்ச்சகர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளை ஆர் எஸ் எஸ் — பார்ப்பனிய சக்திகள் கொடுத்தாலும் அதையும் தாண்டி சிறப்பான முறையில் கோயில்களில் பூஜை செய்து குடமுழுக்கு நடத்தி மக்கள் மத்தியில் முறையான அங்கீகாரத்தை பார்ப்பனரல்லாத 29 அர்ச்சகர்களும் பெற்றுள்ளனர் என்பது இத் தருணத்தில் மிகவும் நினைவு கூறத்தக்கது.
நம்மை கவலை கொள்ளச் செல்லும் விசயங்களும் தொடர்ந்து நடந்து வருவதை புதிய அரசு இந்நாளில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அர்ச்சகர் நியமனம், விதிகள், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் அர்ச்சகர் நியமன விதிகள் ரத்து செய்யப்பட்டதுடன், ஆகமக் கோயில் பார்ப்பனருக்கு, ஆகமம் அல்லாத கோயில்கள் சூத்திர, பஞ்சமருக்கு எனப் பிரிக்கும் முயற்சிகளும் நடக்கிறது.
இதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.புதிய விதிகள், சட்டம் கொண்டு வந்தோ அல்லது உச்சநீதிமன்றம் சென்றோ இப்பார்ப்பனீய சதியை முறியடிக்க வேண்டும். அர்ச்சகர் நியமனத்திற்கு ஆகமம் தடையில்லை குறிப்பிட்ட கோயிலில் ஆகமத்தை படித்த எந்த இந்துவும் அர்ச்சகராகலாம், சாதி தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், திருச்சி வயலூர் முருகன் கோயில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்த நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமி நாதன் தீர்ப்பிற்கு, 11.08.2023 அன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருவாளர்கள் S.S.சுந்தர் & பரத சக்கரவர்த்தி அமர்வு விதித்த தடையும், அர்ச்சகர் நியமனத்திற்கான சட்டத் தடைகளை அகற்றியது .
அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆவதை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் பார்ப்பனர்கள், ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணியினர் தொடர்ந்து அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான பல்வேறு முட்டுக்கட்டைகளை உருவாக்கி உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தடைபெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு விதித்த தடை கடந்த மூண்றாண்டாக நீக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு,மேல் முறையீடும் செய்யப்படவில்லை.
அர்ச்சகர் நியமனம் தொடர்பாக விதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்பு, இதுவரை புதிய விதிகளுக்கான எந்த நடவடிக்கையும் இல்லை.
அர்ச்சகர் நியமனத்திற்கான ஆகமங்களில் சாதி தடையாக இருக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் அர்ச்சகர் நியமன நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவே, இட ஒதுக்கீடு அடிப்படையில் விரைந்து கோயில்களில் உடனடியாக அர்ச்சகர் பணிநியமனத்தை நடத்த வேண்டும்.
மிக முக்கியமாக, எங்களுடன் 2008 ஆம் ஆண்டிலேயே பயிற்சி முடித்து தீட்சை பெற்ற 178-க்கும் மேலான மாணவர்கள் உள்ளனர். அதன்பின் சுமார் 400 மாணவர்கள் படித்து முடித்துள்ளனர். இவர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்க வேண்டும். இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், திருவரங்கம் அரங்கநாதர், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் தமிழ்ச் சமுதாயத்தின் தேவர் , கவுண்டர், யாதவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதிதிராவிடர் உள்ளிட்டோர் கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது.
அரசியல் சட்டத்தின் ஆட்சி என்பதற்கான சவால் இது.
எனவே இந்நாளில் தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் மக்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமிழையும் தமிழர்களையும் நிலைபெறச் செய்ய வேண்டுகிறோம்.

மேற்படி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக
(i) தடையற்ற அர்ச்சகர் நியமனத்திற்கு உரிய சட்ட ஆலோசனை வழங்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.
(ii)அனைத்து சாதி இந்துக்கள் அர்ச்சகர் நியமனத்திற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
(iii) 17 ஆண்டுகளாக வேலைக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு 2007-2008 ஆண்டில் மாணவர்களுக்கு தற்போது வரை உள்ள மாதங்களுக்கு இழப்பீடும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற மாதங்களிலும் இழப்பீட்டுத் தொகையமாதம் ரூபாய் 20,000 வேலை வழங்கும் வரை தமிழக அரசு வழங்க வேண்டும்
(iv) அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும்
(vi) தமிழக அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்து அர்ச்சகர் மாணவர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வும், கோயிலில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்
(Vii) அனைத்து சாதி அர்ச்சக பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஐந்து பேர் இறந்து விட்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
தமிழக முதல்வரின் நேரடி தலையீடு இல்லாமல் அர்ச்சகர் மாணவர் திட்டம் – ஆலயங்களில் சமத்துவம் நிறைவேற வாய்ப்பு இல்லை.
எனவே கலைஞரின் நினைவு மாதமான ஆகஸ்ட் மாதத்தில், கலைஞரின் கனவும், தமிழக முன்னாள் முதல்வரின் நியமனங்களும், எதிர்கால நியமனங்களும் கேள்விக்குள்ளான சூழலில் உரிய கோரிக்கையை தமிழக முதல்வர் முன்பு வைக்கிறோம்.
உரிய நடவடிக்கை எடுத்து, ஈராயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருள் முழுமையாக அகற்றக் கோருகிறோம்.
வா.ரங்கநாதன், தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.