தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர்!
சுவிசேஷப்பணிக்கு தமிழகம் வந்து உலக பொதுமறையாம் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து தமிழரின் பெருவாழ்விற்கு உலகளாவிய கௌரவம் பெற்றுத்தந்தவர் தான் வீரமாமுனிவர். தேவாரம், திருப்புகழ், நன்னூல் ஆத்திச்சூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்தவரும் வீரமா முனிவர் தான்.அவரது பிறந்த தினம் இன்று. இதே நாளில் 1680 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர்தான் வீரமா முனிவர். அவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன்ஜோசப் பெஸ்கி. தனது 18 வது வயதில் துறவு பூண்டு ,கிறிஸ்துவ மதப்பிரச்சாகராக இத்தாலியில் இருந்து 1711 ஆம் ஆண்டு தமிழகம் வந்தடைந்தார் ஜோசப் பெஸ்கி .
இங்கே வந்த பிறகு, இந்திய மொழிகளை கற்க விரும்பி, அதனடிப்படையில் தமிழையும் கற்றார். காலப்போக்கில் தமிழ் மீது தீராகாதல் கொண்டவராக மாறினார். சுப்ரதிக் கவிராயரிடம் தமிழை முழுமையாக கற்றுத் தேர்ந்தார். தமிழ் மீது கொண்ட காதலால் தைரியநாதசாமி என தன் பெயரை மாற்றிக் கொண்டவர், பின்னர் அதில் வடமொழி சொல் கூடிக்கலந்திருப்பதறிந்து மறுபடியும் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். அவர் தமிழில் எழுதிய நூல்கள் 23. ஜைன மதநூலான சீவக சிந்தாமணியை போன்றே, கிறிஸ்தவ காவியம் ஒன்றை தமிழில் படைக்க பேராவல் கொண்ட வீரமாமுனிவரின் சிந்தனையில், தமிழ் ஊற்றில் கரு கொண்டு உருவானது தான், தேம்பாவணி. அதில் கதை மாந்தர்களின் பெயர்களை கூட தமிழ் படுத்தினார் வீரமாமுனிவர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஜோசப் என்கின்ற பெயரை வளன் என்று மாற்றினார்.
தேம்பாவணி காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு செந்தமிழ் தேசிகர் எனும் பட்டமும் வழங்கப்பட்டது. தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கி வந்த அந்த காலத்தில்,உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார். தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
திருக்காவலூர் திருத்தலத்தையும், ஏலாகுறிச்சியில் உள்ள அடைக்கல மாதாவையும் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட “திருக்காவலூர் கலம்பகம்” இவர் பாடியதுதான். வீரமாமுனிவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி தேடி அலைந்து பதிப்பு செய்ததால் அவருக்கு “சுவடி தேடிய சாமியார்” என்கிற பெயரும் உண்டு. தமிழ்-லத்தின் அகராதியை உருவாக்கினார்.இதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் மொழியில் விளக்கத்தை கொடுத்தார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி என தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. 4 4400 சொற்களைக் கொண்ட தமிழ் போர்ச்சுகீசிய அகராதியையும் வீரமாமுனிவர் உருவாக்கினார்.
பல பெயர்களைக் கொண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்து அதற்கு பெயர் அகராதி என பெயர் சூட்டி தமிழின் புகழுக்கு பெருமை சேர்த்தார். பொருள்களின் பெயர்களைத் தொகுத்து பொருளகராதி எனவும், சொற்கள் பலவாக கூடி நின்று ஒரு சொல்லாக விளங்குவதை தொகுத்து, தொகை அகராதி என்றும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தி தொடை அகராதி எனவும் அமைத்து தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். சதுரகராதி கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சேரும்.தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது இந்த சதுரகராதி . ஒரு மொழி அகராதி தான் சதுரகராதி. இரு மொழி அகராதி தமிழ்-லத்தின் அகராதி. மூன்று மொழி அகராதியே போர்ச்சுக்கீச்சு- லத்தீன்-தமிழ் அகராதி. இந்த மூன்று மொழி அகராதியை வீரமாமுனிவர் உருவாக்கியதால் தமிழ் அகராதியின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமல் எழுதுவது சுவடி காலத்து வழக்கம்.புள்ளிக்கு ஈடாக நீண்ட கோடு இருக்கும்.மேலும் குறில் நெடிலை விளக்க ,ஒற்றெழுத்தை கூடுதலாக சேர்த்தெழுவது வழக்கத்தில் இருந்தது.ஆ என எழுத “அர” என எழுதுவார்கள். தொல்காப்பிய காலத்தில் இருந்து வழங்கி வந்த இந்த பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர், நெட்டெடுத்து கொம்பை மேலே நீடித்தும், சுழி போடும் வழக்கத்தை உண்டாக்கினார். 1828 ஆம் ஆண்டு வீரமாமுனிவர் எழுதிய “பரமார்த்த குருவின் கதை”என்ற நூல் முதல் முறையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
இத்தகைய தமிழ்த்தொண்டு புரிந்த வீரமாமுனிவர் தனது அறுபதாம் வயதில் அம்பலக்காட்டிலுள்ள கிருஸ்தவ மடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் உளபூர்வமாக நமக்காக்கிக் கொடுத்த நூல்களால் தமிழ்த்தாய் அழகு பெற்றிருக்கிறாள். தேம்பாவணி, தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாக இன்றும் திகழ்கின்றது. தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. ஆம்.வீரமாமுனிவர் பிறப்பில் இத்தாலியராக இருந்தாலும்,தமிழுக்கு அவர் சேர்த்த உலகளாவிய பெருமைகளால் வீரமாமுனிவர் தமிழன்னையின் தவப்பிள்ளையாகவே கருதப்படுகிறார்.
– இனிகோ இருதயராஜ்