தொடர் திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கைது !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் உட்கோட்டம், ஜெம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கோவில்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்.
மேற்படி தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் துறையூர் தாலுக்கா, கள்ளிக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததன் பேரில் அங்கு சென்ற தனிப்படையினர் 1.தமிழ்பாரதி 22/25 த.பெ நித்யானந்தம், பொன்பரப்பி, செந்துறை வட்டம். அரியலூர் மாவட்டம் மற்றும் 2. சரவணன் 38/25 த.பெ மோகன்ராஜ், கீழபுதூர், பாலக்கரை. திருச்சி ஆகியோரை பிடித்து விசாரித்ததில் மேற்படி குற்றங்களை இருவரும் செய்தது தெரிய வந்தது.

மேலும், குற்றவாளிகளில் எதிரி 1. தமிழ்பாரதி என்பவர் மீது திருச்சி, அரியலூர். மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் 40-ற்கும் மேற்பட்ட வழக்குகளும், எதிரி-2 சரவணன் மீது திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மாநகரத்தில் பல வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்து, இருவரிடமிருந்தும் ஜெம்புநாதபுர காவல் நிலையத்தில் கடந்த நான்கு மாதத்தில் நடைபெற்ற திருட்டு வழக்குகளின் சொத்துகளான 12 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இது போன்று திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர்கள் பற்றி தெரிய வந்தால், உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களிடம் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்