என்னது, ஏரியைக் கானோமா? – நெடுங்கூர் மக்கள் பகீர் புகார் !

0

என்னது, ஏரியைக் கானோமா? – நெடுங்கூர் மக்கள் பகீர் புகார் !

”அய்யா என் கிணத்தக் கானோம்” னு வடிவேலு பதறிப்போய் போலீஸ்ல புகார் கொடுத்த கதை போலவே, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெடுங்கூர் கிராம பொதுமக்களும் சிறுகனூர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பெருவளப்பூர் குறுவட்டம் நெய்குளம் ஊராட்சியைச் சேர்ந்தது, நெடுங்கூர் கிராமம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

என்னது, ஏரியைக் கானோமா? – நெடுங்கூர் மக்கள் பகீர் புகார் !
என்னது, ஏரியைக் கானோமா? – நெடுங்கூர் மக்கள் பகீர் புகார் !

இந்த கிராமத்தில் சர்வே எண் 126 என்பது ஒரு காலத்தில் 5.64 ஏக்கரில் ஒரே இடமாக இருந்தது. திருப்பட்டூர் ஸ்ரீநாராயண சௌமிய சன்னதிக்கு சொந்தமான இந்த இடத்தை, கோவிலுக்கு மானேஜராக இருந்து பராமரிக்கும் பொறுப்பு அருணாச்சல செட்டியார் என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகிறது 1941-ஆம் ஆண்டு ஆவணம். செட்டிக்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 20-வதாக இந்த ஆவணம் பதிவாகியிருக்கிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த ஆவணத்திலேயே, ”பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெட்டப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் ஏரியை ரிப்பேர் செய்து பராமரிக்க வேண்டும்.” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலப்போக்கில், அருணாச்சல செட்டியார் பெயர் மர்மமான முறையில், பத்மநாத ரெட்டியார் என்ற பெயருக்கு மாற்றப்படுகிறது.

என்னது, ஏரியைக் கானோமா? – நெடுங்கூர் மக்கள் பகீர் புகார் !
என்னது, ஏரியைக் கானோமா? – நெடுங்கூர் மக்கள் பகீர் புகார் !

காலங்காலமாக செட்டியார் வகையறாவில் இருந்துவந்த கோயிலுக்கு சொந்தமான இடம், சம்பந்தமே இல்லாமல் 1987 இல் பத்மநாத ரெட்டியாருக்கு பெயர் மாறியதுதான் இந்த வழக்கில் முதல் கோணல். பெயர் மாறினாலும், கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அ-பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களிலும் தண்ணீர் பந்தல் ஏரி, சதுர கிணறு, குளம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுவரை, தண்ணீர் பந்தல் ஏரியாகவும், குளமாகவும் வகைப்படுத்தப்பட்டு வந்த அந்த இடம், 22.06.2022 அன்று முதல், பட்டா எண் 6475 இன்படி சுந்தர்ராஜன் என்பவரது மனைவி சுமதியின் பெயருக்கு தனிநபர் பட்டா இடமாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்கள்தான் தற்போது, ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு விற்பணை செய்வதற்காக, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ஏரியை தூர்த்து வருகிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.” என்கிறார், நெடுங்கூரைச் சேர்ந்தவரும் வழக்கறிஞருமான நேசமனோகர்.

வழக்கறிஞர் நேசமனோகர்
வழக்கறிஞர் நேசமனோகர்

”எங்களுக்கு நினைவு தெரிஞ்சு, நாங்கல்லாம் இந்த ஏரியில குளிச்சியிருக்கோம். இன்னும் சொல்லப்போனால், நாப்பது வருசத்துக்கு முன்ன என் கூடப்பிறந்த அண்ணன் ஒருத்தர் இந்த ஏரியில விழுந்துதான் இறந்துபோனாரு. இப்போவும் மழை வந்தா, இந்த ஏரி நிரம்பி வாய்க்கால் வழியா நெய்குளம் ஏரி வரைக்கும் தண்ணீர் போகும். வெறும் ஏரியா மட்டுமில்ல, ஊர் திருவிழாவில சாமி சிலைகளை கொண்டு வந்து சில சம்பிரதாயங்கள் செய்து திரும்ப ஊருக்கு எடுத்து போகும் நடைமுறையும் இருக்கு. இவங்க இருந்த சாமி சிலைகளை கூட இருந்த இடம் தெரியாம மண்ணோட மண்ணா புதைச்சிட்டாங்க…” என்கிறார், நெடுங்கூரைச் சேர்ந்த க.சுப்பிரமணியன்.

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன்

”சர்வே எண் 126-ல மொத்தம் 5.64 ஏக்கர் பொதுவா இருந்த இடத்தை, இப்போ 1,2,3 னு மூனா பிரிச்சிட்டாங்க. 2-யும் ஏ, பி,னு கூறு போட்டுட்டாங்க. இப்போ இந்த இடத்துக்கு உரிமை கொண்டாடும் சுமதியோட அப்பா தியாகராஜன் ரெட்டியார், ஊருக்கு வெளியே கேட்பாரின்றி கிடந்த தரிசு நிலத்துல சுண்ணாம்பு கால்வாய் ஆரம்பிச்சு ரொம்ப காலத்துக்கு நடத்திகிட்டு இருந்தாரு. அப்புறம் வயசாச்சுனு விட்டுட்டு போயிட்டாரு. அவரு இங்க சுண்ணாம்பு கால்வாய் வச்சி நடத்திகிட்டு இருந்தப்போதான், கொஞ்சம் கொஞ்சமா இடத்த சேர்த்துகிட்டது இல்லாம, பழைய ரெக்கார்டுலாம் மாத்தி இப்போ தன்னோட மகப்பேருக்கு வர மாதிரி பன்னிட்டு போயிட்டாரு. இந்த எடத்த ஆக்கிரமிக்க கூடாதுனு 2018-லேயே மதுரை கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கோம்.அப்படியிருந்தும் துணிவா செய்றாங்க.” என்கிறார், ஜெயக்குமார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

”தண்ணீர் பந்தல் ஏரியை காணவில்லைனு… பத்து நாளுக்கு முன்னாடியே போஸ்டர்லா அடிச்சு ஒட்டுனோம். சிறுகனூர் போலீஸ்ஸ்டேஷன்ல, தாலுக்கா ஆபிஸ்ல கம்ப்ளைண்ட்லா கொடுத்தும் ஒன்னும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க…” என்கிறார், கலியமூர்த்தி.

கலியமூர்த்தி
கலியமூர்த்தி

”நானும் இதே ஊர்க்காரன்தான். யார் எதிர்த்து கேட்டாலும் நேரு எனக்கு மாமா மாதிரி பகைச்சிக்காதனு மிரட்டுறாங்க. இல்ல, பணத்தை கொடுத்து சரிகட்டிடுறாங்க. ஊர் பொதுமக்கள் சார்பாக, நான்தான் முன்ன நின்னு செஞ்சிட்டு இருக்கேன். நெடுங்கூர்னு இல்லாம, நெய்க்குளம், பி.கே.அகரம்னு சுற்றுவட்டார கிராம மக்களோட சேர்ந்துதான் எடுத்துட்டு போறோம்.

இன்னிக்கு (ஜூன்-`15) காலையில, நெய்குளம் வி.ஏ.ஓ. ஆபிஸ்க்கு எதிர்ல நெய்க்குளம் நால் ரோட்ல ஆர்ப்பாட்டம் கூட செஞ்சோம். ஆய்வுக்காக அந்த வழியா போன கலெக்டர்கிட்டயும் மனு கொடுத்திருக்கோம். அவரும் தாசில்தார்கிட்ட சொல்றேன்னு சொல்லியிருக்காரு.” என்கிறார், வழக்கறிஞர் நேசமனோகர்.

கண்டன ஆர்பாட்டம்
கண்டன ஆர்பாட்டம்

”இது முழுக்க தனியார் இடம். முதல்ல ஏரியே இல்ல அது. குளம்தான். அதுகூட இப்போ கொஞ்சம் கொஞ்சமா, தானா தூர்ந்து குட்டையா மாறிடுச்சு. தண்ணீர்பந்தல்னு சொல்றதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. அதோட சர்வே நம்பரே வேற. அதுல கொஞ்ச இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்தது போக மிச்சம் இடம் அப்படியேத்தான் இருக்கு. புரியற மாதிரி சொல்லனும்னா தாத்தா குளம் வெட்டுனாரு. பேரன் குளத்த மூடுறாரு. அவங்க பட்டா இடத்துல அவங்க தேவைக்கு வெட்டுனாங்க, இப்போ தேவையில்லைனு மூடுறாங்க. இந்த இடம் தொடர்பா தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளில்கூட, எல்லாமே நிலத்தோட உரிமையாளருக்கு சாதகமாகத்தான் தீர்ப்புகள் வந்திருக்கு.

வரைபடம்
வரைபடம்

இதுல நாங்க எப்படி தலையிட முடியும், சொல்லுங்க? அரசுக்கு சொந்தமான ஏரி – குளமா இருந்தா, இன்னேரம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருப்போமா?” என்கிறார், நெய்க்குளம் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன்.

இலால்குடி தாசில்தார் விக்னேஷ் அவர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “என்னிடமும் மனு கொடுத்திருக்கிறார்கள். கலெக்டர் சாரும் சொன்னாங்க. பிரச்சினைக்குரிய அந்த இடம் எங்களது அலுவலக ஆவணங்களின்படி, என்றைக்குமே அரசு புறம்போக்காக வகைப்படுத்தப்படவில்லை. ஒருகாலத்துல, கோயில் டிரஸ்ட்டுக்கு சொந்தமா இருந்த அந்த இடம், 1927 Resettlement ல தனிநபருக்கு சொந்தமான இடமா மாறிடுது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நீர்நிலை என்றுதான் எங்களது ஆவணப்படி வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. எங்கள் தரப்பில் நேரில் வந்தால், ஆவணங்களை வைத்துக்கொண்டு விளக்கிச் சொல்ல தயாராகவே இருக்கிறோம்.” என்கிறார்.

கோயில் டிரஸ்டிக்கு சொந்தமாக இருந்துவந்த அந்த இடம் தற்போதைய உரிமையாளருக்கு சட்டப்படியான நடைமுறைகளின் படிதான் கைமாறியிருக்கிறதா? கோயில் டிரஸ்டிக்கு சொந்தமாக இருந்த சமயத்தில், அவர்களது ஆவணத்திலேயே குறிப்பிட்டிருப்பதை போல, “பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெட்டப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் ஏரி”யை தற்போது தூர்த்து மனைகளாக மாற்றுவதை சட்டம் அனுமதிக்கிறதா? என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

– வே.தினகரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.