சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி எதுக்கு ? நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன ?

0

சவுக்கு உயிருக்கு ஆபத்து ! போலீஸ் கஸ்டடி எதுக்கு ?  நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன ? இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு, மே-16 மாலை 4 மணி முதல் மே-17 மாலை 4 மணி வரையிலான 24 மணிநேர போலீசு கஸ்டடிக்கு அனுமதி அளித்து உத்தவிட்டிருக்கிறார், திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா.
திருச்சி மாவட்டம் முசிறி உட்கோட்ட டி..எஸ்.பி. செல்வி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சவுக்கு சங்கர்மற்றும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

ஏற்கெனவே, கோவை சைபர் கிரைம் போலீசார் தொடுத்திருந்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சம்பிரதாய கைது செய்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் நேர் நிறுத்துவது மற்றும் போலீசு கஸ்டடி கோருவது தொடர்பாக மே-15 அன்று காலை கோவை மத்திய சிறையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார் சவுக்கு சங்கர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

திருச்சி கூடுதல் மகிளா நீதிபதி ஜெயப்பிரதா முன்பு சவுக்கு சங்கரை ஆஜர் படுத்திய நிலையில், 7 நாள் போலீசு கஸ்டடி கேட்டு திருச்சி மாவட்ட போலீசார் மனு அளித்திருந்தனர். சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.சுரேஷ், அலெக்ஸ், கென்னடி ஆகியோர் போலீசாரின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கோவை மத்திய சிறையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வந்த பெண் போலீசார் வரும்வழியில் தன்னை தாக்கியதாகவும், தாக்கி மன்னிப்புக்கேட்க சொன்னதாகவும் அதை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து வாட்சப்பில் யாருக்கோ அனுப்பி வைத்தார்கள் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் சவுக்கு சங்கர். சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பை நீதிமன்றத்தில் பலத்த குரலில் எடுத்துரைத்ததோடு, ”போலீசு அராஜகம் ஒழிக” என்ற குரலும் நீதிமன்றத்தில் ஒலிக்க அரசியல் மேடையாகவே மாறியிருந்தது, மாவட்ட நீதிமன்றம்.

சவுக்கு சங்கர்.....
சவுக்கு சங்கர்…..

இதையடுத்து, இருதரப்பிலும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி மே-16 அன்று மதியம் 1 மணியளவில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்பதாக வழக்கை ஒத்திவைத்தார், நீதிபதி.

இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திலேயே வழிக்காவல் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவரை, “ நீயெல்லாம் ஒரு ஆளாடி உன் உயர் அதிகாரியைப் பற்றியே மீடியாவில் போட்டு கிழிப்பேன். சட்டையை கழட்டாமல் விடமாட்டேன்” என்று ஒருமையில் பேசியதாக ஒரு புகாரும், போலீசு வாகனத்தில் அழைத்து வந்தபோது திருமணம் ஆகாத ஒரு பெண் போலீசிடம் பெயர், கைப்பேசி எண்ணை கேட்டார் என்பதாக மற்றொரு புகாரும் நீதிபதியிடம் புகாராக தெரிவிக்கப்பட்டது. புகாரை கேட்டுக் கொண்டவர் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியிருக்கிறார்.

மே-16 அன்று மதியம் 12.30 மணியளவில் விசாரணையை நீதிபதி தொடங்கிய நிலையில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த ஆவணங்களுடன் ஆஜராவதற்கு அவகாசம் கோரிய நிலையில், அரைமணிநேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் சவுக்கு சங்கருக்கு ”ஹாய்” சொல்ல, போலீசார் ஆட்சேபம் தெரிவிக்க, “உங்களிடம் தான் அதிகாரம் இருக்கிறது. அரசு வழக்கறிஞரும் போலீசும் சொல்வதைத்தான் நீதிமன்றமும் கேட்கிறது” என்பதாக, அவரும் பெருங்குரலெடுத்து கத்த களேபரமாக மாறியது நீதிமன்ற வளாகம்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு அமர்ந்த நீதிபதியிடமும் புகார் தெரிவித்தார்கள். போலீசு தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஹேமந்த்குமார், ஏழுநாள் போலீசு காவல் கேட்டு கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள், “ஒரே குற்றத்திற்கு ஒரு வழக்குத்தான் பதிவு செய்யமுடியும். இதே வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் போலீசு கஸ்டடி எடுத்து விசாரித்துவிட்டார்கள். தற்போது, அதே சட்டப்பிரிவுகளின் கீழ் திருச்சி போலீசார் போட்ட வழக்கிற்காக போலீசு கஸ்டடி தேவையற்றது.

சவுக்கு சங்கரின் பேச்சு தமிழகம் முழுவதுமுள்ள ஒரு லட்சம் போலீசாரின் மனதை புண்படுத்திவிட்டது என்றால், ஒரு லட்சம் போலீசாரும் புகார் கொடுப்பார்களா? ஒரு லட்சம் எஃப்.ஐ.ஆர். போடுவார்களா? ஒரு கொலைக்கு ஒரு எஃப்.ஐ.ஆர்.தானே போட முடியும்? சவுக்கு சங்கரின் வீடு, அலுவலகம், ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். முக்கியமான ஆவணங்களை கைப்பற்றிவிட்டார்கள்.

சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பாக - பெண் காவலர்கள்
சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பாக – பெண் காவலர்கள்

இதற்கு மேல் என்ன விசாரணை செய்யப் போகிறார்கள். வேண்டுமென்றே சவுக்கு சங்கருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவே கோரிக்கை வைக்கிறார்கள். ஏற்கெனவே கையை உடைத்திருக்கிறார்கள். போலீசு வாகனத்தில் அழைத்துவரும்பொழுது தாக்கப்பட்டிருக்கிறார். போலீசு காவலில் அனுப்பினால், அவரது உயிருக்கு ஆபத்து. ” என்பதாக தங்களது கடும் ஆட்சேபங்களை தெரிவித்தனர்.

சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், போலீசின் மனித உரிமை மீறல்; அராஜகம் என்பதற்கு அழுத்தம் கொடுத்து பேசியதோடு, போலீசு துறையில் நடக்காத எதையும் சவுக்கு சங்கர் சொல்லிவிடவில்லை என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் டிஜிபி ராஜேஷ்தாஸ் சம்பவத்தை வழக்குரைஞர் கென்னடி விவரிக்க, குறுக்கிட்ட நீதிபதி ”எல்லா துறையிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்கின்றன. அதற்குரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றும் வழிவகைகள் இருப்பதாக”வும் சுட்டிக்காட்டி வழக்கிற்கு தொடர்பில்லாத சங்கதிகளை பேசவேண்டாம் என்பதாக தடுத்து நிறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், “சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்காக நாடு முழுவதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும்கூட, போலீசு காவலில் எடுத்து விசாரித்தார்கள். அடுத்து, வழக்கின் தன்மை அறிந்து என்ன விசாரிக்க வேண்டும்? என்பதை விசாரணை அதிகாரிதான் முடிவு செய்வார். அவருக்கான அதிகாரத்தில் தலையிட உரிமையில்லை. ” என்பதாக, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மீண்டும் சில மணி நேரங்கள் ஒத்திவைத்தார். இறுதியாக, போலீசு தரப்பில் ஏழு நாட்கள் கேட்டிருந்த நிலையில், ஒருநாள் மட்டும் போலீசு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த ஆட்சேபங்களையும் கருத்திற்கொண்ட நீதிபதி, அதற்கேற்ப சில நிபந்தனைகளையும் போலீசாருக்கு விதித்திருக்கிறார்.இதன்படி,

நீதிமன்றம் -
நீதிமன்றம் –

* மே-16 மாலை 4 மணி முதல் மே-17 4 மணி வரையில் 24 மணிநேரத்திற்கு போலீசு காவலுக்கு அனுமதி.
* போலீசு கஸ்டடியிலிருந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கும் முன்பாக முறையான மருத்துவ பரிசோதனையை நடத்த வேண்டும்.
* போலீசு கஸ்டடியில் விசாரிக்கும்பொழுது, மூன்றாம்தரமான முறைகளை பிரயோகிக்கக்கூடாது; மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது; காயம் ஏற்படுத்தும் வகையிலோ மனிததன்மையற்ற முறையிலோ நடத்தக்கூடாது.
* சவுக்கு சங்கர் கோரினால், அவரது தரப்பு வழக்கறிஞரை மூன்று முறை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

* சவுக்கு சங்கரின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பையும் போலீசு கண்காணிப்பாளர் ஏற்க வேண்டும். இதற்கு தகுந்த முறையில் மருத்துவரீதியான, நிர்வாக ரீதியான அனைத்து முன்ஏற்பாடுகளையும் செய்வதை உத்தவாதப்படுத்த வேண்டும். எந்த வகையிலும் மனித உரிமை மீறாமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். இப்போது உள்ள நிலையிலேயே மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.” என்பதான கட்டுப்பாடுகளுடன் ஒருநாள் போலீசு கஸ்டடி வழங்கி உத்தரவை பிறப்பித்திருக்கிறார், திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா. இதனையடுத்து, பலத்த போலீசு பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

”ஊமைக்குத்தாக குத்தினார்கள்; கண்ணை கட்டி காட்டிற்கு இழுத்துச் சென்றார்கள்; பொம்பள போலீச வச்சி செவி சிவக்க பசுமையாக பேச வைத்தார்கள்; படக்கூடாத இடத்திலெல்லாம் அடித்துபடுத்தி எடுத்துவிட்டார்கள். ” என்று நாளை நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையிட்டாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை !

ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.