குழப்பியடிக்கும் த.வெ.க.நிர்வாகிகள்! இறுக்கிப் பிடிக்கும் பி.ஜே.பி.!விஜய் தாக்குப் பிடிப்பாரா? ஓட்டம் எடுப்பாரா?
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஓராண்டு வரை பனையூரிலிருந்தே கட்சியை நடத்திக் கொண்டிருந்தார் அதன் தலைவரும் நடிகருமான விஜய். கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழாவையும் முதல் பொதுக்குழுவையும் கூட்ட வேண்டிய கட்டாயம் இருந்ததால், இந்த 2025 பிப்ரவரி மாதம் பனையூரிலிருந்து சுமார் 25 கி.மீ.தூரம் நகர்ந்து , சென்னை திருவான்மியூருக்கு வந்தார்.
அதற்கடுத்த இரண்டு மாதங்கள் கழித்து, பனையூரிலிருந்து சுமார் 600 கி.மீ. நகர்ந்து கோவையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தார் விஜய். அந்த பூத் கமிட்டியின் ஆரம்பமே, விஜய் படத்தின் முதல் நாள் முதல் ஷோ [ எஃப்.டி.எஸ்.] போல ஆனது. இன்னும் தொண்டர்களாக மாறாத விஜய்யின் ரசிகர்கள், கூட்டம் நடந்த அரங்கிற்குள் திமுதிமுவென நுழைந்து, சேர்களைப் பறக்கவிட்டார்கள்.

கட்சியின் தலைவர் விஜய், பொ.செ.புஸ்ஸி ஆனந்த் உட்பட அனைத்து தலைமை நிர்வாகிகளும் உளறிக் கொட்டினார்கள். தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவோ, “வந்துட்டாருல்ல லியோ… எங்க லியோவைப் பாரு , ரெண்டு மாசத்துக்குப் பிறகு பாரு எங்க தலைவரோட ஆட்டத்தப் பாரு. ஒரு கூட்டத்தையே உருத்தெரியாம சிதைக்கப் போறாரு”ன்னு ஏதேதோ உளறிக் கொட்டி விஜய்யையும் மீடியாக்களையும் கிறுகிறுக்க வச்சாரு. ஆனா யாருமே பூத் கமிட்டி உறுப்பினர்களுக்காக உருப்படியா எதுவுமே பேசல. ஏன்னா அப்படி ஒரு கமிட்டியை முறையா அமைச்சிருந்தாத் தானே.
அதன் பின் அதே ஏப்ரலில் நடந்த ஐ.டி.விங் நிர்வாகிகள் கூட்டத்திலும் இப்ப ஒருவாரத்துக்கு முன்பு நடந்த மா.செ.க்கள் கூட்டத்திலும் ஆன்லைன் மூலம் ஆஜரானார் கட்சியின் தலைவர் விஜய். இதற்குக் காரணம் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கார் என சொல்லப்பட்டது.
இதுக்குப் பிறகு தான் த.வெ.க.வில் குழப்பக் கும்மியடிகள் ஆரம்பமானது. 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? இல்ல தனித்துப் போட்டியா? என்பது குறித்தெல்லாம் பொ.செ.புஸ்ஸி ஆனந்த் வாயே திறப்பதில்லை. ஏன்னா அதுபத்தி பேசும் அளவுக்கு அவருக்கு தெளிவில்லை. சரி, மற்றவர்களாவது தெளிவாக பேசுகிறார்களா என்றால் அதுவுமில்லை.

த.வெ.க.வின் துணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் சமீபத்தில் கூட “கொள்கை எதிரி பி.ஜே.பி.யுடனும் அரசியல் எதிரி திமுகவுடனும் நிச்சயம் கூட்டணி இல்லை” என்றார். ”சரி, இந்த இரண்டு கட்சியுடனும் கூட்டணி இல்லேன்னா அதிமுகவுடன் கூட்டணியா?” என சில மா.செ.க்கள் மண்டை காய்ந்திருந்த நிலையில் தான், “பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லேன்னு விஜய்யே சொல்லட்டும்” என மிரட்டல் பாணியில் ஒரு உருட்டு உருட்டினார் தமிழ்நாடு பி.ஜே.பி.யின் டாக்டர். தமிழிசை.

பி.ஜே.பி.டெல்லித் தலைமை எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன்படி தான் மேற்படி ஷாக் ட்ரீமெண்டை விஜய்க்கு கொடுத்துள்ளார் தமிழிசை. இதனால் ரொம்பவே அதிர்ச்சியான விஜய், ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் பெயரளவுக்கு ஆலோசனை நடத்திவிட்டு, மே.20—ஆம் தேதி ஆதவ் அர்ஜுனாவை பிரஸ் மீட் நடத்தச் சொன்னார். அப்போது பேசிய ஆதவ், “பி.ஜே.பி.யுடன் கண்டிப்பாக கூட்டணி இல்லை. பி.ஜே.பி.இல்லாத அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கு. அது இயற்கையானது. ஏன்னா எங்களுக்கு எதிரி திமுக தான். ஆளும் கட்சி ஊழல் தான் முக்கியம், எதிர்க்கட்சி ஊழல் இரண்டாம்பட்சம் தான். டிசம்பர் மாசத்திலிருந்து எங்க தலைவரோட ஆட்டம் ஆரம்பம்” என்ற ரீதியில் பேசி, பிரஸ்ஸையும் த.வெ.க. தொண்டர்களையும் கிறுகிறுக்க வைத்தார்.
“என்னயா இது, பிப்ரவரி மாசம் பொதுக்குழு நடந்தப்ப, இன்னும் ரெண்டு மாசத்துல எங்க தலைவரோட ஆட்டத்தப் பாருங்கன்னாரு. இப்ப டிசம்பர் மாசத்துக்குப் போய்ட்டாரு. ஸ்ஸ்ஸ்ஸ்…ஸப்பா… இப்பவே ஓவரா கண்ணக் கட்டுதே” என விஜய்யின் ரசிகர்கள் விழிபிதுங்கிப் போய்க்கிடக்கிறார்கள்.

இதுக்கிடையில ‘தினத்தந்தி’ வேற அப்பப்ப… ‘ஜனநயாகன்’ படத்துக்கு அடுத்து இன்னொரு படத்துல விஜய் நடிக்கப் போறாரு. கோலிவுட்டில் பரபரப்பு, விஜய் ரசிகர்கள் உற்சாகம்னு நியூஸைக் கிளப்பிவிட்டு, தவெக முகாமுக்குள் கும்மியடிக்குது. வேலூரில் பூத் கமிட்டிக் கூட்டம், விஜய் ரோடு ஷோன்னு மறுநாளே ஒரு நியூஸ் போட்டு தொண்டர்களை டோட்டலா மெண்டலாக்குது .
பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தால் ஆபத்து, வைக்காவிட்டால் பேராபத்து என்ற பரிதாப நிலையில் நிற்கிறார் த.வெ.க.தலைவர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா? ஓட்டம் எடுப்பாரா?
— கரிகாலன்.