பிரபல மருத்துவமனையின் தவறான சிகிச்சை ! பறிபோன கண் ! நீதிமன்றம் தந்த உத்தரவு !
பிரபல மருத்துவமனை | தவறான சிகிச்சை | நீதிமன்ற உத்தரவு!
மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பார்வையை பறிபோனவருக்கு 12 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது, திருச்சி மாவட்ட நுகா்வோர் குறைதீா் ஆணையம்.
திருச்சி, தில்லைநகரைச் சேர்ந்த ராமராஜ். காவலாளியாக பணிபுரியும் இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டில், இவருக்கு கண் பார்வையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருச்சியில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். மருத்துவர்களும் உடனடியாக அறுவை சிகிச்சை அவசியம் என்றிருக்கிறார்கள். அதற்கு உடன்பட்டு பணம் கட்டி அறுவை சிகிச்சையையும் செய்திருக்கிறார் ராமராஜ். ஆனாலும், அவரது பார்வை சிக்கல் தீரவில்லை.

மீண்டும் மருத்துவமனையை நாடுகிறார், மற்றொரு கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றிருக்கிறார்கள். அதற்கும் உடன்பட்டு அடுத்த அறுவை சிகிச்சையையும் செய்திருக்கிறார். இந்த முறையும் அவரது சிக்கல் தீரவில்லை. மாறாக, இரு கண்களிலும் பார்வை மங்கத் தொடங்கியிருக்கிறது. பயந்து போய் மருத்துவமனை நிர்வாகத்தை நாடியிருக்கிறார். அறுவை சிகிச்சையில் கவனக்குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டது. நாங்களே சரிசெய்து தருகிறோம். இந்தமுறை நீங்கள் பணம் கட்டத் தேவையில்லை என்றிருக்கிறார்கள்.
வேறுவழியின்றி அதற்கும் உடன்பட்டு மூன்றாவது முறையாகவும் சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார், ராமராஜ். இந்தமுறை இரு கண் பார்வையும் பறிபோனதுதான் மிச்சம். பார்வையிழந்ததால் ராமராஜால் வேலைக்கும் போக முடியாத நிலை. இவரை பார்த்துக்கொள்ள 24 மணிநேரமும் ஒருவர் உடன் இருந்தாக வேண்டுமென்ற நிலையில், மனைவியும் வேலைக்கு செல்ல முடியாத நெருக்கடி. படிக்கும் வயதில் இரு மகன்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று புரியாமல், மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி நியாயம் கேட்டபோது, அழைத்து பேரம் பேசியிருக்கிறார்கள். பார்வை பறிபோன கண் ஒன்றுக்கு 35,000 விலை பேசியிருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான பதிலை கண்டு அதிர்ச்சியடைந்த ராமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதற்கு, உன்னால் முடிந்ததை பார் என்று மிரட்டலும் விடுத்திருக்கின்றனர்.

இதனையடுத்தே, வழக்கறிஞர் சு.சதீஷ்குமார் உதவியுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார் ராமராஜ். அவரது தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்த திருச்சி மாவட்ட நுகா்வோர் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா்கள் ஜே.எஸ். செந்தில்குமார்ஆா். சாயீஸ்வரி ஆகியோரை கொண்ட அமா்வு மனுதாரருக்கு கண் அறுவைச் சிகிச்சைக்கான நஷ்டஈடாக 12 சதவீத வட்டியுடன் ரூ. 10 லட்சமும், மன உளைச்சலுக்காக ரூ. 2 லட்சமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சர்ச்சையில் சிக்கிய அந்த மருத்துவமனை, முன்னர் கோவிந்தராஜ் கண் மருத்துவமனை என்ற பெயரிலும் தற்போது ஏஜி கேர் என்ற பெயரில் தில்லைநகர் ஆபிசர்ஸ் காலனியில் இயங்கிவரும் திருச்சியில் பிரபலமான கண் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
— VJ தினேஷ்.