ரூ.67 லட்சம் ‘லபக்’ கொலை மிரட்டல்…. ஆபாச பேச்சு… 420 கேசில் பி.கே.பி! அங்குசம் செய்தி எதிரொலி

0

ரூ.67 லட்சம் ‘லபக்’ கொலை மிரட்டல்…. ஆபாச பேச்சு… 420 கேசில் பி.கே.பி! அங்குசம் செய்தி எதிரொலி

சுதந்திர போராட்ட தியாகி மனைவியிடம் 67 இலட்சம் ஆட்டைய போட்ட தொழில் அதிபர் பி.கே.பி.” என்ற தலைப்பில் அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  சத்யா கிரானைட்ஸ், பி.கே.பி. டிரான்ஸ் போர்ட்ஸ், பி.கே.பி. மினரல்ஸ், ஸ்ரீ பி.கே.பி ஸ்பின்டெக்ஸ் மில், பி.கே.பி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பி.கே.பி. கோழிப்பண்ணை, பி.கே.பி. மாட்டுத்தீவனம் மில், பி.கே.பி.
கல்விக் குழுமங்கள் என தருமபுரி மாவட்டத்தில் பிரபலமான தொழிலதிபர் பி.கே.பி. என்றழைக்கப்படும் பி.கே.பவுன்ராஜ்.

https://businesstrichy.com/the-royal-mahal/

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகியான பி.எம்.வடிவேல் மற்றும் அவரது மனைவி பார்வதி ஆகியோரிடமிருந்து, கடனாக வாங்கிய 67 இலட்சத்தை திருப்பித்தரமால் பி.கே.பி. ஏமாற்றிவருகிறார் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. ஏழாண்டுகள் ஆகியும் வாக்களித்தபடி, வாங்கிய கடனைத் திருப்பியளிக்காததோடு, பணத்தைக் கேட்ட பார்வதி பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில்தான், தருமபுரி போலீசுக்கு புகார் தெரிவித்த பார்வதி பாட்டி, அங்குசம் இதழுக்கும் விரிவான நேர்காணலை வழங்கியிருந்தார். வீடியோ வடிவிலான பார்வதி பாட்டியின் நேர்காணல் அங்குசம் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. பார்வதி பாட்டியின் புகாரின் நிலை குறித்து தருமபுரி எஸ்.பி.யின் கருத்தையும் கேட்டு, இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டது. ஆகஸ்டு 16-&31 அங்குசம் அச்சு இதழிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. அங்குசம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, பி.கே.பி.யின் தகிடு தித்தங்கள் தமிழகம் முழுவதும் அம்பலமாகியிருக்கிறது.

தொழிலதிபர் பி.கே.பி.
தொழிலதிபர் பி.கே.பி.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நிலையில், அங்குசம் அலுவலகத்திற்கு ஐ.வீராசாமி என்ற வழக்கறிஞர் வழியாக விளக்கம் கோரும் நோட்டீசை அனுப்பியிருக்கிறார் பி.கே.பி. அதில் பல்வேறு சங்கதிகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். ஆதாரம் இல்லாமல், அவதூறாக அவரை பற்றி எழுதிவிட்டோமாம். அதனால், அவரது புகழுக்கும் நற்பெயருக்கும் பங்கம் ஏற்பட்டுவிட்டதாம். ஆகவே, 10 கோடி இழப்பீடு வேண்டுமாம். அதற்காகவே, இந்த நோட்டீசாம். தியாகி வடிவேலு மற்றும் பார்வதி பாட்டியிடமிருந்து 67 இலட்சம் வாங்கியதை மறுக்கவில்லை. வங்கிக்கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதால், அவரால் மறுக்கவும் முடியாது. அதேசமயம், வாங்கிய பணத்தை தியாகி வடிவேலுவின் ”மூத்தமகனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என புதுக்கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். பணத்தை கை நீட்டி வாங்கியது, தியாகி வடிவேலு மற்றும் அவரது மனைவி பார்வதியிடமிருந்து. யாரிடம் வாங்கினோமோ, அவரிடம் திருப்பிக் கொடுப்பதுதானே உலக நடைமுறை.

இந்த உலக நடைமுறையைக்கூட அறிந்திராத, தருமபுரி போலீசாரும் பி.கே.பி.யின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையான விசயம்.
தியாகி எம்.வடிவேலுவை அவரது மனைவி பார்வதி கொடுமைபடுத்து வாராம். சரிவர கவனித்துக்கொள்ள மாட்டாராம். இளைய மகன் சுகுமாரனோடு சேர்ந்து கொண்டு இவ்வாறு செய்தாராம். மூத்தமகன் மனோகரன் மற்றும் மகள் வீணா ஆகியோரை அவர்கள் ஒதுக்கினார்களாம். பி.கே.பி.தான் ஆதரவுக்கரம் நீட்டி, தாய்மாமா வடிவேலுவையும், பார்வதி மற்றும் இளையமகன் சுகுமாரனால் ஒதுக்கப்பட்ட மூத்தமகன் மனோகரனையும் வீணாவையும் தாங்கினாராம். அவர்களது மருத்துவ தேவை உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தானே முன்னின்று பூர்த்தி செய்து வைத்தாராம். அந்த வகையில், வடிவேலு மாமாவிடம் வாங்கிய 67 இலட்சத்தையும், அவரது விருப்பப்படியே மூத்தமகன் மனோகரனுக்காகவும், மகள் வீணாவுக்காகவும் பல்வேறு வகைகளில் தான் சிறுக சிறுக அத்தொகை முழுவதையும் திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

முதல் விசயம் தனது தாய் மாமாவான தியாகி பி.எம்.வடிவேலு தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை தனது மூத்தமகன் மனோகரனிடம் கொடுக்க சொன்னதாக குறிப்பிடும், பி.கே.பி., அதை தியாகி பி.எம்.வடிவேலு உயிருடன் இருந்தபோதே நேரில் சொன்னாரா? இல்லை, இறந்தபிறகு ’ஆவியாக’ வந்து சொன்னாரா? என்பதை பி.கே.பி. தனது விளக்கத்தில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
ஏனெனில், தியாகி வடிவேலு 2017-ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 05 ஆம் தேதியே இறந்து போகிறார். ஆனால், ”மாமா வடிவேலு சொன்னபடி” மூத்தமகன் மனோகரனுக்கு முதல் தவணையாக ரூ.5,00,000/-& கொடுத்தது, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதி. அதாவது அவர் இறந்து 28 நாட்கள் கழித்து. அதன்பிறகு, பல்வேறு தவணைகளில் 42 இலட்சத்தை மூத்த மகன் பெற்றுக்கொண்டதாக வவுச்சர்களை காட்டுகிறார். மிக முக்கியமாக, அவரே ஒரு கணக்கைப் போட்டு, பாக்கித்தொகை 40,000/-& எனக் குறிப்பிடுகிறார். அந்தப் பாக்கித் தொகையைக்கூட, 09.08.2023 அன்று மூத்த மகனிடம் செட்டில் செய்துவிட்டதாக சொல்கிறார். இந்த உண்மைகளை மறைத்து, (இரண்டு நாள் முன்னதாகவே) 07.08.2023 அன்று இணையத்தில் அவர்களை பற்றி அவதூறாக எழுதிவிட்டோமாம்.

பார்வதி பாட்டி.
பார்வதி பாட்டி.

அங்குசம் இணையத்தில் ஆக-07 அன்று செய்தி வெளியானதையடுத்தே, ஆக-09 அன்று பாக்கி பணத்தை செட்டில் செய்ததை போல வவுச்சர் பெற்றதாக அவரே ஒப்புக்கொள்கிறார் என்பதுதான் இதில் வேடிக்கையானது. இதுதவிர, வங்கியில் செலுத்தப் பட்ட தொகை அல்லாமல், வீட்டுக்கு அட்வான்சாக கொடுத்த 2,50,000 உள்ளிட்ட சில பணபரிமாற்றத்திற்கு வவுச்சர்கூட இல்லை. ஒரு தொழிலதிபர் 2,50,000 ரூபாயை குறைந்தபட்சம் வவுச்சர் உள்ளிட்ட எந்தவித ஆதாரமும் இல்லாமல் பணபரிமாற்றம் செய்துவிட முடியுமா? அடுத்த விசயம், ஆதாரமாக காட்டும் வவுச்சரின் நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ளது. வவுச்சரில் அலுவலக முத்திரையோ, வரிசை எண்ணோ, காசாளர் உள்ளிட்ட அலுவலக ஊழியரின் கையெழுத்தோ இடம்பெறவில்லை. அந்த வவுச்சரில், பணம் வாங்கியதாக மனோகரனும் வவுச்சரை தயாரித்தவர் என்ற கட்டத்தில் யாரோ ஒருவரும் மட்டுமே கையெழுத்திட்டிருக்கிறார்கள். இது ஏன் போலியாக இருக்கக்கூடாதென்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

வயதான தம்பதியினரின் வங்கிக்கணக்கிலிருந்து தான் பி.கே.பி.யின் வங்கிக்கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யபட்டது. வாங்கிய தொகையும் ரூபாய் அஞ்சு, பத்துமில்லை. சுளையாக 67 இலட்சம். ஒருவேளை, தியாகி வடிவேலு சொல்படிதான் திருப்பிக் கொடுத்ததாக இருந்தாலும், அதனையும் வங்கிக்கணக்கில் பதிவாகும்படி, காசோலையாகவோ, பணபரிமாற்றமாகவோ செய்யாமல், இந்த டிஜிட்டல் காலத்திலும் அரதப்பழைய நடைமுறையான வவுச்சரை ஆதாரமாகக் காட்டுவது ஏன்?  தியாகி வடிவேலுவிடம் வாங்கிய கடனை அவரிடமே திருப்பிச் செலுத்தாமல், அவரது மூத்தமகனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது ஒருபுறமிருக்க; அவ்வாறு மூத்தமகனிடம் திருப்பிக்கொடுத்ததாக சொல்வதாவாவது நம்பகத்தன்மையோடு இருக்க வேண்டுமல்லவா? ஆகவே, வவுச்சரின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தும் இடத்தில் பி.கே.பி. இருக்கிறார். அதனை நாம் ஏற்கும் வகையில் தெளிவுபடுத்த வேண்டியது, அவருடைய பொறுப்பாகிறது. இதனை அவரது வழக்கறிஞரான ஐ.வீராசாமி அவர்களும் நன்கறிவார்.

2017 தொடங்கி 2023 வரையிலான வவுச்சர்களை சமர்ப்பித்திருக்கிறார் பி.கே.பி. வாங்கிய கடன் 67 இலட்சமும் அந்தக் கடன் தொகை பல்வேறு தொகைகளில் திருப்பிச் செலுத்திய விவரங்களும் கண்டிப்பாக அவரது ஆண்டு வரவு செலவு அறிக்கையில் (ஐ.டி. ரிட்டர்ன்ஸ்) இடம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு முன்பாக, முறையாக அன்றாட லெட்ஜர் பராமரிக்கப்பட்டு அந்த வரவு & செலவு வகையினங்கள் ஆடிட்டர் ஒருவரால் தணிக்கைக்குள்ளாகியிருக்க வேண்டும். இதனை ஏன் பி.கே.பி. தரப்பில் சமர்ப்பிக்கவில்லை? பாவம், வழக்கறிஞராவது கொஞ்சம் அவருக்கு எடுத்து சொல்லியிருக்கலாம். அவசரப்பட்டு நோட்டீசை அனுப்பி வைத்திருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தியாகி வடிவேலு பார்வதி பாட்டி
தியாகி வடிவேலு பார்வதி பாட்டி

அடுத்து தருமபுரி போலீசு இந்த விவகாரத்தை பி.கே.பி.க்கு சாதகமாக கையாண்டிருப்பதாகவே கருத இடமளிக்கிறது. அவர்களது நடவடிக்கைகளே அதற்கு போதுமான ஆதாரங்களாக அமைந்தி ருக்கிறது. தன்னிடமும் தனது கணவரிடமிருந்தும் வாங்கிய 67 இலட்சத்தை திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.
தருமபுரி எஸ்.பி.க்கு பதிவு அஞ்சலில் அனுப்பிய கையோடு, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அதே புகாரை ஆன்லைனில் பதிவு செய்கிறார். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரை, ”வடிவேலுவிடம் வாங்கிய பணத்தை மூத்த மகனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்று பி.கே.பி. சொல்லும் வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வழக்கை ஊற்றி மூடிவிட்டார்கள்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பார்வதி பாட்டி அறிவித்ததையடுத்தே, எஸ்.பி. அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பி.கே.பி.க்கு எதிராக குற்ற எண்:447/2023 இன்படி, 420 சட்டப்பிரிவின் கீழ் ஆக-14 அன்று (சுதந்திர தினத்திற்கு முதல்நாள்) வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் வழக்கு கூட போடவில்லை என்றால், சுதந்திரநாள் அதுவுமாக ”தியாகியின் மனைவி போராட்டம்” என்று ஊடகங்களில் செய்தியானால் பெயர் கெட்டுவிடும் என்ற நோக்கில் அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே படுகிறது.

இளைய மகன் சுகுமாறன்
இளைய மகன் சுகுமாறன்

இன்னும் சொல்லப்போனால், தனது இறப்பிற்கு பிறகு தனது பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் தனது மனைவி பெயருக்கு மட்டுமே சேர வேண்டும் என்றும், அவராக விரும்பி எந்த மகன் – மகளுக்கு எவ்வளவு என பிரித்துக்கொடுக்கிறாரோ அதன்படி செய்ய வேண்டுமென மிகத்தெளிவாக எழுதப்பட்ட சட்டப்படியான உயில் நடைமுறையில் உள்ள நிலையில், ”மாமா சொன்னாரு”னு ஒருவர் வாய்மொழியாக சொன்னதை நம்பி சொத்தை பங்கு போட முடியுமா? சட்டம் அதற்கு இடம் தருகிறதா? பார்வதி பாட்டிக்கு ஆதரவாக இளைய மகன் சுகுமாறன் உடனிருக்கிறார். மூத்த மகன் மனோகரன் பி.கே.பி.க்கு ஆதரவாக இருக்கிறார். ”அண்ணனை கைக்குள் போட்டுக்கொண்டு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினையை உண்டு பண்ணுகிறார்” என சுகுமாறன் குற்றஞ் சாட்டுகிறார். ”அம்மாவும் தம்பியும் எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தர மறுக்கிறார்கள். 9.5 ஏக்கர் நிலத்தை எனக்கு தெரியாமல் ஏமாற்றி விற்றுவிட்டார்கள். எனக்கு சேர வேண்டிய பணத்தை நான் வாங்கிவிட்டேன். அவர் தரப்புக்கு அவர் பார்த்துக்கொள்ளட்டும்.” என்கிறார், மூத்தமகன் மனோகரன்.

முழுக்க முழுக்க குடும்ப பிரச்சினை. உரிமையியல் சார்ந்த பிரச்சினை. மிக முக்கியமாக, சிவில் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டிய விவகாரத்தை தருமபுரி மாவட்ட சட்டம் ஒழுங்கு போலீசார் கையாண்டிருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. ”தன்னிடம் கை நீட்டி வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். திருப்பிக் கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார்.” என்பதுதான், இறந்துபோன தியாகி வடிவேலுவின் மனைவியான 85 வயது பார்வதி பாட்டியின் குற்றச்சாட்டு. பி.கே.பி.யிடமிருந்து பணத்தை மீட்டுத்தாருங்கள் என்பது அவரது கோரிக்கை. அது அவருடைய பணம். அவருக்கு சேர வேண்டிய உரிமை. அவருடைய மறைவிற்குப்பிறகு சட்டப்படியான வாரிசுகளுக்கு போய்ச்சேர வேண்டிய பணம். இதில் பஞ்சாயத்து செய்ய பி.கே.பி.க்கோ, போலீசுக்கோ, இல்லை எமக்கோ எந்த உரிமையும் இல்லை.

”420- பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டால் மட்டும் போதுமா? எனது தாயாருக்கு பி.கே.பி. கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். ஆபாசமாக பேசியிருக்கிறார். அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட விசாரணை இல்லை. எனக்கோ, எனது தாயாருக்கோ உயிருக்கு எந்த நேரத்திலும் எதுவும் ஆகலாம்?” என பதைபதைக்கிறார், இளைய மகன் சுகுமாறன். இன்றோ, நாளையோ என இறுதிநாளை எண்ணிக் கொண்டிருக்கும் பார்வதி பாட்டிக்கு எதற்கு 67 இலட்சம்? சாவதற்கு முன்பாக, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டுமென்ற வேட்கையிலிருந்தா, இந்த தள்ளாத வயதிலும் போலீசிடம் மன்றாடுகிறார்? உரிமைக்காகப் போராடும் பார்வதி பாட்டியின் பக்கம் நின்று சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமா தருமபுரி போலீசு?

வீடியோ லிங்:

 

–  விசாகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.