சம்பவம் செய்யும் வனவிலங்குகள்… பொறுப்பை தட்டி கழிக்கும் வனத்துறை… 

0

சம்பவம் செய்யும் வனவிலங்குகள்… பொறுப்பை தட்டி கழிக்கும் வனத்துறை… 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர் போன்ற பகுதிகள் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த பகுதி. வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

சம்பவம் – 1
டிசம்பர்- 1 அன்று மதனாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.

சம்பவம் – 2
டிசம்பர்-2 அன்று, தும்பேரி கிராமத்தில் விவசாயிகளான சம்பத், சின்னகண்ணன், தீர்த்தமலை ஆகியோருக்கு சொந்தமான 6 ஆடுகளை கடித்து குதறியதில் அனைத்து ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பலியானது.

- Advertisement -

- Advertisement -

சம்பவம் -3
தமிழக – ஆந்திரா எல்லையான வாணியம்பாடி அருகே உள்ள சிந்த காமணி பெண்டா, வெலதிகாமணி பெண்டா, மாதகடப்டா ஆகிய மலைகள் மீது உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் அதனைதொடர்ந்து மலையடிவார பகுதிகளான அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா; வெங்கடசமுத்திரம் ஊராட்சி, மலைக்காட்டை ஒட்டி உள்ள ராளகொத்தூர்; மிட்டாளம் மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களையெல்லாம் பாழ்படுத்தியிருக்கின்றன காட்டு யானைகள்.

இதுபோன்று காட்டு விலங்குகளினால் விவசாய நிலங்கள் பாழ்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய வனத்துறையினரோ, நாய்கள்தான் ஆடுகளை கடித்துக் குதறியிருக்கின்றன என்று சொல்லி தங்களது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்துறையினர் வாகனத்தை சிறைப்பிடித்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கிராமத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்துள்ளனர். மேலும், மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்டு பிடிக்க, கூண்டுகள் வைத்துள்ளனர்.

இதற்கிடையில், டிசம்பர்-3 அன்று ஆம்பூர் கன்னிகாபுரம் தார்வழி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜெயக்குமார் மற்றும் அவரது மைத்துனர் வெங்கடேசன் ஆகியோர், அவர்களது நிலத்திற்கு அருகாமை நிலத்துக்கு சொந்தக்காரரான ராமமூர்த்தி என்பவர் நிறுவியிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சட்டவிரோதமாக விளைநிலத்தில் மின்வேலி அமைத்த நடராஜன் மற்றும் மணியை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

” சத்தியமங்கலம் வனத்தில் இருந்து மேட்டூர் ஒகேனக்கல் பென்னாகரம் சூளகிரி கிருஷ்ணகிரி குப்பம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில் பயணித்து ஆந்திரா வனப்பகுதியில் நுழைந்து மீண்டும் இதே வழித்தடங்களில் பயணிக்கும் இக்குறிப்பிட்ட காட்டு பகுதியில் மனிதர்கள் வன விலங்குகளின் வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர்.

4 bismi svs

அதிக ஒலி சத்தம் எழுப்பும் கற்கள் உடைக்கும் தொழிற்சாலைகளால் வன விலங்குகள் வன உயிரினங்கள் தடம் மாறி அருகில் உள்ள மனித குடியிருப்பு மற்றும் விவசாய பகுதியில் தன் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கிறது” என்கிறார், யானைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஆற்றல் ப்ரவின் குமார். ”மதனாஞ்சேரி விவகாரத்தை பொறுத்த வரையில் மர்ம விலங்குகள் எல்லாம் இல்லை, நாய்கள் கடித்துதான் ஆடுகள் இறந்தது. அந்த கிராமத்து மக்களே சில வீடியோக்களை அனுப்பியுள்ளதாக” அடித்துக்கூறுகிறார்கள், வாணியம்பாடி வன அலுவலர் திரு நாகராஜ் மற்றும் திருப்பத்தூர் வனத்துறை இனை அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர். சரி, அந்த வீடியோவை காட்டுங்கள் என்றதற்கு. கைவசம் இல்லையென்று இருவருமே கைவிரித்துவிட்டனர்.

”காட்டில் உள்ள ஓநாய் செந்நாய் கடித்து இருக்க வாய்ப்பு இருக்கலாம். வீட்டில் வளர்க்கும் நாய்கள் கூட கடிக்க வாய்ப்பு இருக்கிறது.” என பொத்தாம் பொதுவான பதிலை கூறினார், வாணியம்பாடி ஜாப்ராபாத் அரசு கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் கோகிலாசன். மர்ம விலங்கு என்ற அச்சம் கிராம மக்களிடையே நிலவிவரும் நிலையில், இறந்த விலங்கு ஒன்றைக்கூட பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”கூட்டமாக இருக்கும் ஆடுகளை நாய்கள் கடிக்காது. அதுவும் நாய்கள் கழுத்துப் பகுதியில் கடிக்காது. ஆனால், இறந்துபோன ஆடுகள் அனைத்தும் கழுத்துப் பகுதியில் கடிபட்டிருக்கிறது. மதனாஞ் சேரி கன்னிகாபுரம் கிராமங் களை சுற்றி காப்புக் காடுகள் இருப்பதால் செந்நாய் ஓனாய் போன்ற விலங்குகளால் இந்த ஆபத்து நேர்ந்திருக்கலாம்” என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத கால்நடை மருத்துவர் ஒருவர்.

”காட்டுயிர் – மனித மோதல் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மனிதர்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உயிரிழப்புகள், பொருளிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. யானை, காட்டுப் பன்றி, புலி, சிறுத்தை, காட்டெருது, குரங்குகள், சதுப்புநில முதலைகள், மயில்கள் போன்றவற்றால் சேதங்கள் பெரிதும் நிகழ்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதனாஞ்சேரி பகுதியில் கழுதைப்புலியின் நடமாட்டம் இருந்ததாகவும்” கூறுகிறார், சமூக ஆர்வலர் அம்பலூர் அசோகன்.

”வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான், ஏழை எளிய விவசாயிகள் வேறு வழியின்றி சட்ட விரோதமான முறையில் மின்வேலிகளை அமைத்து காட்டு விலங்குகளிலிருந்து விவசாய பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் காட்டுப்பன்றிகளால் விவசாய பயிர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 7562. வனத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை என ஒவ்வொரு துறையாக அலைந்து திரிந்து இழப்பீடு வாங்குவதும் ஒன்று வாங்காமல் விடுவதும் ஒன்று. இவற்றுக்கெல்லாம் உரிய வழிமுறைகளை வகுத்து தீர்வு காணப்பட வேண்டும்.” என்கிறார்,

வனஆராய்ச்சியாளர் ஆற்றல் ப்ரவின்குமார்
வனஆராய்ச்சியாளர் ஆற்றல் ப்ரவின்குமார்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும் விவசாயியுமான ஆர்.எஸ்.தர்மன். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150-க்கும் அதிகமான ஆடுகள் இதுபோல மர்மமான முறையில் இறந்திருக்கின்றன. ஆடுகளை கடித்து குதறும் அளவுக்கு வெறிபிடித்த நாய்களை நாங்களே வளர்ப்போமா? ஆடுகள் இறந்ததுகூட பிரச்சி னையில்லை. எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது பற்றிய முறையான விசாரணை கூட செய்யாமல், நாய்கள் தான் கடித்தது என வாயடைப்பதிலேதான் வனத்துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.

ஒருவேளை நாளை பள்ளி செல்லும் சிறுவர்களை வழிமறித்து மர்ம விலங்குகள் தாக்கினால் யார் பொறுப்பு? எங்களது உயிர்களுக்கு என்ன உத்தரவாதம்? என்ற கிராம மக்களின் கேள்விகளுக்கு விடையளிக்குமா? அம்மக்களின் அச்சத்தை போக்குமா? வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும்.

– மணிகண்டன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.