எதிர்கட்சிகளின் சங்கமம் ! மீண்டும்1977 ஆண்டு இந்திய அரசியல் !

நாம் பாஜகவை அகற்றவில்லை என்றால் இதுவே கடைசி தேர்தலாக அமைந்துவிடும்” என்று குறிப்பிட்டார். எல்லாக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து பாஜகவை அதிகாரத்திலிருந்து ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவோம் என்று சூளுரைத்தன

0

பீகார் – பட்னா: எதிர்க்கட்சிகள் சங்கமம்  – பதற்றத்தில் பாஜக

1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் இந்திராகாந்தி ஒன்றியத் தலைமை அமைச்சராக இருந்தபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் நெருக்கடிகால நிலையை அறிவித்தார். அதன் அடிப்படையில் இந்தியா முழுமையும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. நெருக்கடிகால நிலையை எதிர்க்கட்சித் தலைவர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது இந்தியாவின் ‘இருண்டகாலம்’ என்று அழைக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவர்கள் நெருக்கடிகால நிலையைத் திரும்பப்பெற்றுத் தேர்தலை அறிவித்தார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

ஜனநாயகத்தின் அடிப்படையான எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமையை மறுத்துக் கொடுங்கோல் ஆட்சி செய்த இந்திராகாந்திக்கு எதிராகப் பீகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் ஜெயபிரகாஷ் நாராயணன் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கூட்டணியாக மாற்றி, 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் தலைவராக மெராஜிதேசாய் ஒன்றியத் தலைமை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அணி திரண்ட எதிர்க்கட்சிகள் -2023
அணி திரண்ட எதிர்க்கட்சிகள் -2023

48 ஆண்டுகள் கழித்து அதே வரலாறு பீகார் தலைநகர் பட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தது. ஜனநாயகத்திற்கும், சட்டத்தின் ஆட்சியைப் புறந்தள்ளி மதவாதச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடின. பல்வேறு கருத்து, கொள்கை முரண்பாடுகளைக் கொண்ட எதிர்க்கட்சிகளைப் பட்னாவிற்கு அழைத்துப் பெருமை சேர்த்தவர் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார். எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டம் ஜூன் 23ஆம் நாள் பகல் 12.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. இக் கூட்டத்தில் 15 கட்சிகளின் தலைவர்கள் உட்பட 31பேர் கலந்துகொண்டது இக் கூட்டத்தின் தனிச்சிறப்பாகும். இக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் விவரம்:

1. ஐக்கிய ஜனதா தளம் – நிதிஷ்குமார், லாலன் சிங்
2. திருணமூல் காங்கிரஸ் – மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரின், பெர்ஹெட் ஹக்கீம்
3. திராவிட முன்னேற்றக் கழகம் – மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு
4. இந்தியத் தேசியக் காங்கிரஸ் – மல்லிகார்ஜூன கார்கே, இராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால்
5. ஆம் ஆத்மி – அரவிந்த் கெஜ்ரிவால், பகவாத்மான், இராகவ் சட்டஹா, சஞ்சாய் சிங்
6. ஜர்கண்ட் முக்தி மோச்சார் – ஹேமந்த் சோரான்
7. சிவசேனா – உத்வ்தாக்ரே, ஆதித்ய தாக்ரே
8. தேசியவாதக் காங்கிரஸ் – சரத்பவார், சுப்ரியா சுலி, பிரபுல் பட்டேல்
9. ராஷ்ரிய ஜனதா தளம் – லாலுபிரசாத் யாதவ், தேஜேஸ்வி யாதவ், மனோஜ்ஜகா
10. சமாஜ்வாதி – அகிலேஷ் யாதவ்
11. மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் – சீதாராம் யெச்சூரி
12. தேசிய மாநாடு – உமர் அப்துல்லா
13. மக்கள் ஜனநாயகக் கட்சி – மெகபூபா முப்தி
14. சிபி.எம்எல் – தீபங்கர் பட்டாச்சாரியா
15. இந்தியக் கம்யூனிஸ்ட் – டி.இராஜா

2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுவது குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆண்டு வரும் பாஜக ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்றது, சிபிஐ, அமலாக்கப் பிரிவு, உளவுத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்க நினைக்கின்றது, அரசியல் சாசனம் வரையறுத்துள்ள மதசார்பின்மைக்கு எதிராக இந்து மதச் சார்பைத் திணிக்கிறது. இந்தக் கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் ஒலித்தன.

Ragul gandhi
Ragul gandhi

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இராகுல்காந்தி பேசும்போது, எதிர்க்கட்சியாக உள்ள நம்மிடம் பல கருத்து வேறுபாடுகள், சிந்தனை வேறுபாடுகள் உள்ளன. என்றாலும் பாஜக ஆட்சியை அகற்றுவதை முதன்மை நோக்கமாக நாம் கொள்ளவேண்டும். அப்போது நாம் பாஜகவை அகற்றவில்லை என்றால் இதுவே கடைசி தேர்தலாக அமைந்துவிடும்” என்று குறிப்பிட்டார். எல்லாக் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து பாஜகவை அதிகாரத்திலிருந்து ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவோம் என்று சூளுரைத்தன.

ஆம் ஆத்மி கட்சி, தில்லி மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தில்லி ஆளுநருக்கு வழங்கி ஒன்றிய அரசு அவசரக் கருப்பு சட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்போம் என்றால்தான் கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று அறிவித்திருந்தது. இது குறித்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, அவசரச்சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது எதிர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்ற குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கூட்டத்தில் கலந்து கொண்டது.

எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற 3 வழிகாட்டுதலை முன்வைத்தார். அவை,

1. மாநிலக் கட்சிகள் வலிமையாக உள்ள இடங்களில் அந்தக் கட்சிகளின் தலைமையில் மாநிலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வது.
2. கூட்டணி அமைத்துக்கொள்ளமுடியாத சூழ்நிலையில் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது.
3. கூட்டணி, தொகுதி உடன்பாடு கொள்ளமுடியாத சூழ்நிலையில் ஒற்றைப் பொதுவேட்பாளரைப் பாஜகவுக்கு எதிராக நிறுத்துவது என்பதாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மாலை 4.00 மணிக்கு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. அப்போது எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் நிதிஷ்குமார், அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசலபிரதேசம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12ஆம் நாளில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். இச் சந்திப்பில் ஆம் ஆத்மி கலந்துகொள்ளவில்லை. மாறாக அறிக்கை ஒன்று வெளியிடபட்டது. தில்லி அரசுக்கு எதிரான ஒன்றிய அரசின் அவசரச் சட்டம் தொடர்பான நிலைப்பாட்டைக் காங்கிரஸ் தெளிவுபடுத்தவில்லை என்றால் சிம்லா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

விமானத்தைப் பிடிக்கவேண்டிய அவசரத்தின் காரணமாக இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவில்லை என்பதைச் சில ஊடகங்கள் திமுக தலைவர் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தார் என்று செய்தி வெளியிட்டன.

இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு – அதிமுக, ஆந்திரா – ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கனா – ராஷ்ரிய சமிதி, கர்நாடகம் – மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசா – பிஜூ ஜனதாதளம், உ.பி. – பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. எனினும் சில ஊடகங்கள் இக் கட்சிகள் புறக்கணித்தன என்று செய்தி வெளியிட்டன. இது குறித்து நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, அழைக்கப்பட்டிருந்தால் புறக்கணிப்பு என்பது பொருத்தமாக இருக்கும். அழைக்கப்படவேயில்லை புறக்கணிப்பு எப்படிப் பொருத்தமாக இருக்கும்” என ஊடகங்களுக்குக் கேள்வியை முன்வைத்தார்.

மோடி - அமித்ஷா
மோடி – அமித்ஷா

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் பாஜக முன்னணித் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா,“எதிர்க்கட்சிகள் போட்டோ ஷூட் நடத்துகின்றன” என்று எள்ளி நகையாடினார். எதிர்க்கட்சிகள் எவ்வளவு முயன்றாலும் 3ஆவது முறையாக மோடி ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.

அமைச்சர் ஸ்மிருதி இராணி,“காங்கிரஸ் தனித்து நின்று மோடியை எதிர்க்கமுடியாது என்பதைப் பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கருத்து தெரிவித்தார்.

பாஜக ஆதரவு வலதுசாரி சிந்தனையாளர்கள்,“எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடியதைச் சாதனையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. எதிர்க்கட்சிகள் வென்றால் யார் தலைமை அமைச்சர் என்பதை அறிவிக்கமுடியுமா? முடியாது. மோடி என்ற அசைக்கமுடியாத தலைவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மனக்கோட்டை கட்டலாம். அத்தனையும் மண்கோட்டையாக சரிந்துவிடும்” என்று கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்தனர்.

ஜென்ராம்
ஜென்ராம்

வலதுசாரி சிந்தனையாளர்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் ஜென்ராம்,“நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். பெரும்பான்மை மக்களவை உறுப்பினர்கள் தங்களின் தலைவரைத் தேர்வு செய்வார்கள். அவரே தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்பார். இதுதான் அரசியல் சாசனம் சொல்லியுள்ள வரைமுறை. வலதுசாரிகள் மக்களே தலைமை அமைச்சரைத் தேர்வு செய்வார்கள் என்பதுபோல் பிரச்சாரம் செய்வது, அவர்கள் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பையும் உறுதிப்பாட்டையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஏற்பட்ட அச்சத்தின் விளைவாகவே தவறான கருத்துகளைப் பேசிவருகிறார்கள். மேலும், 1977ஆம் ஆண்டு எதிர்கட்சிகளின் கூட்டணியில் பாஜக இணைந்திருந்தது. அப்போது இவர் தான் தலைமை அமைச்சர் என்று அறிவிப்பு வெளியிடவில்லை என்பதை பாஜக எளிமையாக மறந்துவிட்டு பேசுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குப் பாஜக ஆட்சியை அகற்றுவது என்ற ஒன்றை நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மென்மேலும் வலிமைபெற்றுப் பாஜக ஆட்சியை அகற்றுமா என்பதற்கு வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்.

-ஆதவன்

இந்த வீடியோவை பாருங்கள்… உங்களுக்கு முக்கியமானது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.