மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்
சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இத்தகைய செயல்பாடு, அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதிநீக்கத்திற்கு வழிவகுக்குமா என்பது ஒரு தீவிரமான அரசமைப்புச் சட்டம் சார்ந்த கேள்வியாகும். மேலும், இந்தச் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக நியமிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய நியமனங்கள் சட்டரீதியாக அனுமதிக்கத்தக்கவையா என்பது மற்றொரு முக்கியமான வினாவாகும்.
சட்டரீதியான நிலைப்பாட்டைப் பின்வருமாறு ஆராயலாம்:
தற்போதைய சூழலில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற முறையில், அக்கட்சியின் கொறடாவை (Whip) நியமிக்கும் அதிகாரம் திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. ‘சுபாஷ் தேசாய் எதிர் மகாராஷ்டிர மாநில அரசு’ வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், உச்ச நீதிமன்றம் இக்கோட்பாட்டைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது:
“சட்டமன்றக் கட்சி அல்ல; அரசியல் கட்சி மட்டுமே அவையில் உள்ள கட்சியின் கொறடாவையும், கட்சித் தலைவரையும் நியமிக்கிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட முறையில் வாக்களிக்குமாறு அல்லது வாக்களிப்பிலிருந்து விலகி இருக்குமாறு வழங்கப்படும் உத்தரவானது, சட்டமன்றக் கட்சியால் அல்ல; அரசியல் கட்சியாலேயே பிறப்பிக்கப்படுகிறது.”
எனவே, அ.தி.மு.க தலைமையால் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவானது, அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டுப்படுத்தக்கூடியதாகும். அத்தகைய கொறடா உத்தரவை மீறிய எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் பத்தி 2-ன் கீழ் தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
அதே வேளையில், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற குழுவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்களை அமைச்சர்களாக நியமிக்க மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் முற்பட்டால், சட்டரீதியாகச் சொல்வதானால், அத்தகைய நியமனங்களுக்கு எதிராக உடனடியான அரசமைப்புச் சட்டத் தடை ஏதும் இல்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது:
“அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 164(1-B)-ஆனது, பத்தாவது அட்டவணையின் பத்தி 2-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது மாநிலச் சட்டமேலவை உறுப்பினரையோ (அத்தகைய அவை உள்ள மாநிலங்களில்) அமைச்சராக நியமிப்பதைத் தடை செய்கிறது. இந்தத் தடையானது, சட்டமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்கு உள்ளாகும் தருணத்திலிருந்தே நடைமுறைக்கு வருகிறது.”
மேலும், நீதிமன்றம் பின்வரும் கருத்தையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது:
“பத்தாவது அட்டவணையின் பத்தி 2-இன் கீழ் ஒரு உறுப்பினரைத் தகுதிநீக்கம் செய்வதற்கான மனு, சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், அந்த உறுப்பினரை அமைச்சர் பதவியில் நியமிப்பதை உறுப்பு 164(1-B) தடை செய்யாது.”
ஆகவே, கண்டிப்பாகச் சட்டரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அத்தகைய சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையில் தகுதிநீக்கத்திற்கு உள்ளாகும் வரையில், அவர்களை அமைச்சர்களாக நியமிப்பது அனுமதிக்கத்தக்கதாகவே இருக்கிறது. இருப்பினும், அரசமைப்புச் சட்ட ஒழுக்கநெறி ( constitutional morality) மற்றும் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதிக்கும் விஷயங்களில், சட்டப்பூர்வமான தன்மை மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியாது.
எனவே, இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன:
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில், திரு. எடப்பாடி கே. பழனிசாமிக்குக் கட்சியின் கொறடாவை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அவரால் வழங்கப்படும் கொறடா, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் . இதன் விளைவாக, கட்சியின் வழிகாட்டுதலுக்கு மாறாக, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள், பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
தற்போது அத்தகைய சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியான தடை எதுவும் இல்லாவிட்டாலும், அவ்வாறு செய்வது அரசியல் ஒழுக்கநெறி மற்றும் நெறிமுறைகளுக்குப் பொருத்தம் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அஇஅதிமுக எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அரசமைப்புச் சட்ட ரீதியாக மிகவும் தெளிவான ஒரே வழி, அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, முறையாக தவெக கட்சியில் இணைந்து, இடைத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதே ஆகும்.
இந்த விஷயத்தில் எழும் கேள்வி சட்டம் சார்ந்தது என்பதை விட தார்மீக அரசியல் சார்ந்தது: மக்கள் இத்தகைய கட்சித் தாவல்களை ஏற்றுக்கொண்டு, அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தவெக சின்னத்தின் கீழ் மீண்டும் தேர்ந்தெடுப்பார்களா? திரு விஜய் அவர்கள் முன்வைக்கும் தூய்மையான அரசியலுக்கு அது உகந்துதானா?
இதைத் தேர்தல்தான் முடிவு செய்யவேண்டும்.
– ரவிக்குமார் எம்.பி








Comments are closed, but trackbacks and pingbacks are open.