கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை ! போலீசாரை பாராட்டிய திருச்சி எஸ்.பி. !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமங்கலத்தை சேர்ந்த கவியரசன், அதே கிராமத்தை சேர்ந்த நிருபன்ராஜ் என்பவரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துள்ளார். பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, நடைபெற்ற இத்திருமணம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி, கவியரசன் தனது நண்பர்களான கலைவாணன், மற்றும் பிரேம்நிவாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தனது மனைவியின் சகோதரனான நிருபன்ராஜை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த இலால்குடி போலீசார், திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சக்திவேல் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில், (11.06.2025) கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5500 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்திருக்கிறார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக இலால்குடி காவல் நிலைய ஆய்வாளர் அழகர் மற்றும் இலால்குடி காவல் நிலைய நீதிமன்ற காவலர் பிரபாகரன் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், ஐ.பி.எஸ்., வெகுமதி வழங்கி பாராட்டியிருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.