விஜய்காந்த்: சாமானியனின் கம்பீரம் !

0

விஜய்காந்த்: சாமானியனின் கம்பீரம்

காலம் மிகக்கொடுமையானது. மனிதன் தான் விரும்பி நேசித்து உருவாக்கக்கிய அனைத்தையும் பிடுங்கிவிட்டு நிற்கவைக்கும் ஆற்றல் அதனிடம் இருக்கிறது. நிற்க.
தமிழ் சுயமரியாதை அரசியல் உருவாக்கிய இணையற்ற சமூக முன்வடிவுகளில் முக்கியமானது ‘சமூக வீரனாக முன்னிற்கும் திரை கதாநாயகன்’. புராண, இதிகாச மேஜிக் கித்தாப்புகளுக்கான மாற்று அப்பீடம்.
- Advertisement -

- Advertisement -

எம்.ஜி.ஆர் – சிவாஜி முரண் ஓய்ந்த பிறகு அப்பீடம் காலத்தின் பாசிகளை தன் மீது தொடர்ந்து அப்பிக்கொண்டது.
ஆனால், எம்.ஜி.ஆர்-க்கு பிறகு, ஓரளவில் எம்.ஜி.ஆர் க்கு நிகராக மிக மிக மிக மிக மிக நீண்ட காலத்திற்கு சமூக வீரன் பீடத்தின் தன்மதிப்பீடுகளை நிறுவியவர் விஜய்காந்துதான்.
விஜயகாந்த் (3)
விஜயகாந்த் (3)
கலைஞர், ஜெ. இருவரும் இருக்கும் காலத்தில் துணிந்து சொந்தப்பணத்தில் கட்சித்தொடங்கி துடுப்புபோட்ட வீரியத்தின் வரலாற்று முடிச்சு, சுயமாரியாதை அரசியல் உருவாக்கிய பீடத்தின் சங்கிலியில் விஜய்காந்த் தன்னை ஆழமாக பிணைத்துவைத்திருந்ததில் இருக்கிறது.
அவரளவுக்கு ஒரு நாயகனாக மட்டுமே பயணித்த இன்னொரு ‘ஹீரோ’ அவர்காலத்தில் இல்லை. மலைக்கத்தக்க உச்சம் அது.
ஏதுமற்ற பின்னணி கொண்ட ஒரு கலைஞனான மதிப்பிடும்போது, 3ம் கட்ட, 2ம் கட்ட நடிகர்களே தங்களுடைய இடத்தை தக்கவைக்க படாதபாடுபடும் கதைகளை இன்றைய youtube கடலில் கடக்கும்போது விஜய்காந்தின் அந்த உச்சம் புரியும்.
மரபை தக்கவைக்கும் விமர்சன கண்ணோட்டத்திலிருந்து அணுகும்போது, சிவாஜி மரபின் துடிப்புமிக்க வசன உச்சரிப்பு, எம்.ஜி.ஆர் மரபின் சண்டைவீரன் கம்பீரம் இரண்டையும் சரிசமமாக கலந்துகொண்ட கலைஞன் விஜய்காந்த். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த சண்டைஹீரோக்களில், ஆகச்சிறந்த வசன பொழிப்புகளில் இரண்டிலும்
விஜய்காந்த் முதல் 3 இடங்களுக்குள் இருப்பார்.
ரஜினிகாந்த் 80களின் ஆவேசத்தின் குரல். கமல், அதே ஆவேசத்தின் கனவுகளின் குரல். விஜய்காந்த், அந்த ஆவேசத்தின் மனசாட்சி.
வைதேகி காத்திருந்தாள் வெள்ளைச்சாமி முதல் வானத்தைப்போல வெள்ளைசாமி வரை, ஊமைவிழிகள் தீனதயாளனிலிருந்து – சத்திரியன் பன்னீர்செல்வம் வரை அந்த ஆவேசத்தின் மனசாட்சி விரிந்திருந்தது.
அந்த மனசாட்சியின் அடிவேர்கள் ரஜினி, கமல் கால்தடம் அதிகம் படியாத அடித்தள சாமானியனின் பண்பாட்டோடு கலந்திருந்தது.
ஒருவகையிலான தலித் அடையாள கதாநாயகத்துவத்தை, வெகுஜன சினிமாவில் கலக்கும் தீரம் அதனுள் உறைந்திருந்தது.
விஜய்காந்தின் தனித்துவம், வெற்றி, ஆளுமை, தீரம், வணிகம் எல்லாம் அங்குதான் உறைந்திருந்தது.
இறுகிகட்டமைந்த உடல், சற்று ஒழுக்கமான பரட்டை முடி, தீப்பொறி கக்கும் அனல் கண்கள், தரை அழுத்தி முன்னகரும் ஏறு நடை என்ற விஜய்காந்தின் தோற்ற வசீகரம் அந்த ஆவேசத்தின் பௌதிக கட்டமைப்பு போல அவருக்கு வாய்த்தன. இன்றைக்கும் Crush Material Personalities பற்றி நாம் பேசுகிறோம்; கிண்டல் செய்கிறோம். 80களின் அடித்தள மனம் கொண்ட ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு கனவு கணவன் என்றால், அது விஜய்காந்த் தான்.
சில மாதங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா பகிர்ந்ததாக சீனு ராமசாமி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். ‘Cat Face, Horse Face இவை இரண்டும் தான் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது’ என்று. என்றால் தமிழினம் போன்ற பண்பாட்டு சமூகங்களில் கலாச்சாரவரலாற்று நினைவுகளில் உறைந்திருக்கும் காளை, ஏறு போன்றவற்றின் கலை பிரதிமைகளுக்கு என்ன இடம் என்ற கேள்வி எனக்கு எழுந்தது.
விஜயகாந்த் (2)
விஜயகாந்த் (2)
4 bismi svs
அந்த கேள்விக்கான விடை, விஜய்காந்த். போராடடா, ஒரு வாளேந்தடா பாடலில் அந்த காளையை முழுமையாக தரிசிக்கலாம்.
தமிழ் சினிமாவுக்கான கதாநாயகத்துவ ஆகிருதிகளையும், 80களில் உருவாகிவந்த கட்டுக்கடங்காதவன் வலிமையையும் இணைத்த தமிழ் ராம்போ விஜய்காந்த்.
2000ங்களின் இறுதியில் சட்டென எழுந்த வந்த சமூகவலைதள மனம், எவரையும் கேலியால் நொறுக்கும் பின்நவீனத்துவ நாக்கு இரண்டுக்கும் விஜயகாந்த்தின் ஹீரோயிசம் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், 90களின் பால்யத்தை நிறைத்தவை விஜய்காந்தின் அச்சாகசங்கள் தான்.
ஒரு தலைமுறையின் நினைவுகளில் அவற்றுக்கு, அவருக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அன்றைய கே.டிவி யின் slot catalogue தான் அந்நினைவுகளுக்கான வரலாற்றுப்பேடு. பொதுவெளியில் எப்போதும் வெள்ளைவேட்டி சட்டையுடன் நிறைக்கும் உயர் லட்சிய மனிதனாகவும், திரைவெளியில் 1000 பேரை அடித்து நொறுக்கும் சாகச ஹீரோவாகவும் பரிணமிக்கும் இருமை என அவருக்கு முன்னும் பின்னும் யாருக்கும் வாய்க்கவில்லை.
உணர்ச்சிப்பெட்டகமான மனிதன். அவருடைய வெற்றி தோல்வி இரண்டும் அந்த உணர்ச்சிப்பூர்வமையில் தான் அமைந்தது.
பராசக்தி மரபின் சமூக உணர்ச்சியுள்ள நீண்ட வசனங்களை முழுங்குவதாக இருக்கட்டும், ஆவேச வெறிகொண்ட கதாநாயகனாக அடித்து நொறுக்குவதாக இருக்கட்டும், சாமானியன் நம்பத்தக்க ஒரு ஆழ்ந்த உணர்ச்சிப்பீறல் விஜய்காந்திடம் இருக்கும்.
ரஜினி, கமல் என்ற இரு ராட்சசன்களுடன் வணிக யுத்தம் நடத்தும் ஒரு நடிகன், வளர்ந்துவரும் மிக முக்கியமான ஒரு கட்டத்தில், கலைஞரின் மகனுக்காக, ஒரு கட்சித்தலைவரின் மகனுக்காக ஒரு படத்தில் இணைந்து நடிப்பது எத்தகைய வணிக குலைவு என்பதை மீறி இயங்க வைத்தது அந்த உணர்ச்சிப்பூர்வமைதான்.
கேப்டன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன்
கேப்டன் பிரபாகரன் என திரைப்படத்துக்கு பெயர் வைத்த நடிகன், தன் சொந்தப்பிள்ளைக்கு பிரபாகரன் என பெயர் வைத்தவன், 2009 படுகொலைக்கு பிறகு வந்தவன் போனவனெல்லாம் இன உணர்ச்சியில் பிண வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த போதும், சொந்தப்பணத்தில் கட்சி நடத்திய – 10% வாக்குவங்கி வைத்திருந்த விஜய்காந்த் ஈழ லாபத்தை, வெளிநாட்டு நிதி மூலத்தை வைத்து பிழைப்பு நடத்த துணியவில்லை என்பதும் தான் நம்பிய உணர்ச்சிக்கு நேர்மையாக இருக்கும் உணர்ச்சிப்பூர்வமையின் தன்னறம் தான்.
ஆனால், அந்த உணர்ச்சிப்பீறலுக்கு தமிழ் அரசியல் கோரும் ஓர் பேராளுமை வடிவத்தை விஜய்காந்தால் கண்டடைய முடியவில்லை.
பேரம் பேசி, விலை சொல்லி, எண்ணிக்கையில் முறுக்கி, நம்பிக்கை தோற்றத்தை நம்பர் விளையாட்டில் பலிகொடுத்துவிட்டார்.
சொந்தப்பணத்தை கோடிகோடியாக அரசியலில் இழந்த ஒரு சாமானியாக அவருடைய தரப்புக்கென்று அந்த பேரங்களுக்கான நியாயம் இருக்கலாம். ஆனால், சமூகத்திற்கு அவை இரண்டாம் பட்சம்.
அவ்வழியே கலைஞர் மரபில் இணைய நினைத்தவர், ராமதாஸ் மரபில் சிக்கிக்கொண்டார். இவற்றையும் மீறி காலம் மீண்டும் அவருக்கான ஒரு கடவுச்சீட்டை வைத்திருந்தது. அந்த கடவுச்சீட்டை கைப்பற்றியிருந்தால் எடப்பாடியே எழுந்துவரும் அரசியல் களத்தில், விஜய்காந்த் இன்னமும் பலமடங்கு உயரமாக நின்று ஜொலித்திருப்பார்.
விஜயகாந்த் - 1
விஜயகாந்த் – 1
ஒரு சாமானியன் பலகீனங்கள் மீண்டும் அவரை உடலால், உடல் நலத்தால் வீழ்த்திவிட்டது. செம்மார்ந்த உடல் சரிந்து, ஏறு நடை குலைந்து, சிம்மக்குரல் மெலிந்து, கொடுத்து சிவந்த கரம் தேங்கி, அவர் எவற்றையெல்லாம் உருவாக்கினாரோ, அவை எல்லாம் நலிந்து போவதை காணும் துக்கம், பேரழிவைவிட மிக மிகக்கொடுமையானது. கொடூரமானது.
ஒரு காவியம் சிதைந்துபோவதுபோல. ஆம். காலம் மிகக்கொடுமையானது. மனிதன் தான் விரும்பி நேசித்து உருவாக்கக்கிய அனைத்தையும் பிடுங்கிவிட்டு நிற்கவைக்கும் ஆற்றல் அதனிடம் இருக்கிறது.
அந்தரங்கமான ஒரு லட்சியவாத வதையை அனுபவித்துக்கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச்சூழலில், விஜய்காந்தின் வாழ்வும் மரணமும் பல தத்துவார்த்தமான விடைகளையும், கேள்விகளையும் நம் முன்னே வீசுகிறது. தனி மனித தன்னறத்துக்கும், அரசியல் தன்னறத்துக்குமான இடைவெளியில் ஊடாடும் அக்கேள்விகள் அநேகமாக நம்மை அடுத்த தலைமுறை அரசியலுக்கு வழிநடத்தலாம்.
கண்ணீர் அஞ்சலி.
இறந்தும் வாழ்வீர்கள் கேப்டன் !
– விவேக் கணநாதன், 28.12.2023
5 national kavi
Leave A Reply

Your email address will not be published.