சபாஷ், கனிமொழி !
சபாஷ், கனிமொழி!
ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் திமுக எம்.பி.கனிமொழி.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி சந்திரசெல்வி ஆகிய இருவரும் ஆகஸ்ட் 9-ம் தேதியன்று இரவு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு அவ்விருவரும் திருநெல்வேலி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாணவர் சின்னதுரையை கேலி கிண்டல் செய்ததுடன் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததற்காக பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரத சகோதரி சந்திரசெல்வி ஆகியோரை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், ‘இன்று திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையைச் சந்தித்து உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தேன்.
குணமடைந்து வரும் அவர்கள் விரைவில் வீடு திரும்பி, தங்களது படிப்பைத் தொடர விழைகிறேன். நடந்த துயரச் சம்பவத்திலிருந்து மனவலிமையோடு மீண்டுவரும் அக்கும்பத்துடன் துணை நிற்பதாக உறுதியளித்தோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
