மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 12
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 12
நம் அறிவுப் பேராசான் திருவள்ளுவர் சொல்வார். செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று. அவர் அறிவுக்கு முன்னுரிமை கொடுத்தார் என்றால் இவர் இரண்டையும் சமமாகப் பாவிப்பவர். உணவுப் பந்தியோடு அறிவுப் பந்தியும் ஒரு சேர அளிப்பவர். ஆம் நண்பர்களே.
திருச்சி மாயாஸ் உணவகத்தில் (ஹோட்டலில்) உணவுப் பரிமாறகராக (சர்வராக) கடந்த பத்து வருடமாகப் பணியாற்றி வருகிறார். சிறந்த சிறுகதையாளர், தேர்ந்த குறும்பட இயக்குனர் திரு. சுரேஷ் ஆறுமுகம் அவர்கள்.
![](https://angusam.com/wp-content/uploads/2022/10/311181233_10218842667457964_1365851548911869171_n-234x300.jpg)
‘மூங்கில் தெப்பக்குளம்’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2014 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, இரத்ததான விழிப்புணர்வுக் கதைகள், குழந்தைகளுக்கான நீதிக்கதைகள், கார்த்திக் 9 ஆ பிரிவு குறுங்கதை, கண்தான விழிப்புணர்வுக் கதைகள், முக்கிய தினங்கள், புகைப்படங்களும் நினைவுகளும், நாளிதழ்களின் பார்வையில் நான், சிந்தனைத் துளிகள், புகைப்படக் கவிதைகள் என இதுவரை பத்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
இதில் சிறப்பு என்னவென்றால் குழந்தைகளுக்கான நீதிக்கதைகள், சிந்தனைத் துளிகள் என்ற இரண்டு புத்தகங்களையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருவதுதான். இந்த எளிய வாழ்நிலையில் இப்படிப்பட்ட உயர் செயல் போற்றுதலுக்குரியது. பாராட்டுதலுக்குரியது.
![](https://angusam.com/wp-content/uploads/2022/10/311317172_10218842667097955_4737002081968806675_n-221x300.jpg)
மொழி வழிக் கதை சொல்வதோடு காட்சி வழிக் கதை சொல்வதிலும் திறமையானவர். இதுவரை எட்டு குறும்படங்களை இயக்கியுள்ளார். முதன் முதலாகப் புத்தகம் ஒன்றை எழுதி அதை நூலாக்கிட ஒரு எளிய வாழ்நிலையுள்ள எழுத்தாளன் படும் பாட்டை, அவன் வலியை, ‘பயணம்’ என்ற குறும்படம் மூலமும், இரத்ததான விழிப்புணர்வை, ‘என்னைப்போல் ஒருவன்’ குறும்படம் மூலமும், பிளாஸ்டிக் விழிப்புணர்வை, ‘பழக்கடை முருகேசன்’ என்கிற குறும்படம் மூலமும் காட்சிப் படுத்தி உள்ளவர். மேலும், சந்தோசம் BE, டம்மி தோட்டா என 5 குறும்படங்களையும் எடுத்துள்ளார்.
நம் மலைக்கோட்டை மாநகரில் நிதி வளம் நிறைந்தவர்கள் இவர் போன்ற திறமையாளர்களை ஆதரித்தால் சிகரம் தொடுவார் என்பது நிச்சயம்.
-பாட்டாளி