கழுத்தில் தூக்கு கயிறுடன்
விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்!
விவசாயக் கடன்கள் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம தஞ்சை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
கர்நாடகாவில் பொறுப்பேற்றுள்ள அரசு மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரமாக முற்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும், தொடர்ந்து பெய்த கனமழையால் டெல்டா மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதேபோல, மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறை அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை வருவாய்த்துறை கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவிடம் அளித்தனர்.
