மணப்பாறை மாவட்டமாவது எப்போது…? ஏங்கிக் காத்திருக்கும் மணப்பாறை மக்கள்

-சுலைமான்

0

சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களை கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்த நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கம் தொடங்கியது. முதன்முறையாக 1966ம் ஆண்டு சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தர்மபுரி என்ற தனி மாவட்டம் உதயமானது.

தொடர்ந்து புதுக்கோட்டை, ஈரோடு, இராமநாதபுரம் என மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இப்படியாக தமிழகத்தில் 37 மாவட்டங்கள் என்றிருந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உதயமாகி, தற்போதைய நிலையில், தமிழகத்தில் 38 மாவட்டங்கள் என்ற எண்ணிக்கையுடன் இயங்கி வருகிறது. திருச்சிராப்பள்ளிலிருந்து புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டது போல் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை தனி மாவட்டமாக்கப்பட வேண்டும் என்பதே மணப்பாறை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 40 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மணப்பாறை. முறுக்கு மற்றும் மாட்டுச் சந்தையால் புகழ் பெற்ற மணப்பாறையில் மாவட்ட தலைமை மருத்துவமனை, நூறாண்டு கடந்த மணப்பாறை ரயில் நிலையம் (தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறையை கடந்தே செல்ல வேண்டும்), நான்கு மாவட்டங்களை (திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை,) இணைக்கும் பகுதியாக மணப்பாறை தாலுக்கா உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச்.83ல் அமைந்துள்ள முக்கிய சாலையாக விளங்கும் மணப்பாறையை சுற்றிலும் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. டிஎன்பிஎல் என்ற காகித உற்பத்தி தொழிற்சாலை, ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் புத்தாநத்தம் பகுதி மணப்பாறையில் உள்ளது.

- Advertisement -

- Advertisement -

திருச்சி மாவட்டம் டெல்டா பகுதியாக, காவிரி பாசன பகுதியாக இருந்தாலும் மணப்பாறை காவேரி பாசனமற்ற வறட்சி பகுதியாக உள்ளது. பொன்னணியாறு அணை நீர்த்தேக்கப் பகுதி, கரூர் மாவட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழும், நீர் வெளியீட்டுப் பகுதி திருச்சி மாவட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழும் வருவதால் பொன்னணியாறு அணை சரிவர பராமரிக்கப்படுவதில்லை, முறையாக தூர்வாரப்படுவதும் இல்லை.

4 bismi svs

அதோடு மழைக்காலங்களில் விரைவாகவே தண்ணீர் நிரம்பி விடுகிறது. 52 அடி கொண்ட அணை தற்போது 28  அடி மட்டுமே நீர்த்தேக்கம் செய்யும் அளவிற்கு உள்ளது.  “ஆர்டிஓ அலுவலகம் இல்லாததால் மணப்பாறையை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பது கூட மிகப்பெரிய சிரமமாக உள்ளது” என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

“மணப்பாறை மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டால் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு துறைகள் வளர்ச்சி அடையும். கல்லுப்பட்டி கீரனூர் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இரயில் சுரங்கப்பாதை சுற்றுலா மையமாக ஏற்படுத்த முடியும், திருச்சி பொன்னணியாறு அணை சுற்றுலா மையத்தை மேம்படுத்தமுடியும் , இதனால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.

மத்திய அரசின் மாவட்டங்களுக்கான நிதியும் கிடைக்கும். சுற்றுவட்டார பகுதி மக்களினுடைய வாழ்க்கைத் தரம் உயரும்” என்கின்றனர் அப்பகுதி தன்னார்வலர்கள். 2019ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ‘மணப்பாறை மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்’ என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் என அனைவரிடமும் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ கட்சியினர் கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்தபோது புதிய மாவட்டங்களை உருவாக்கி பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அப்படி புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கான ஒவ்வொரு அறிவிப்பு வெளிவரும் பொழுதும் மணப்பாறை பகுதி மக்கள் தங்கள் பகுதி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படாதா என்ற ஏக்கத்தோடு காத்திருந்தனர்.

இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த மணப்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் நம்மிடம் கூறியது, “மணப்பாறை பகுதியை மட்டும் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்த முடியாது.  கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து மணப்பாறையை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். இதற்காக 2019ஆம் ஆண்டு தமிழக அரசிடம் முன்மொழிவு (PROPOSAL) வைத்தேன். அன்றைய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களும் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி கூறியிருந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய அரசு மணப்பாறையை மாவட்டமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

தற்போதைய திமுக ஆட்சியில், மணப்பாறை மாவட்டமாக அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதிடம் கேட்ட போது, “ஆமாம்.. மணப்பாறை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்று முடித்துக் கொண்டார்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.