அவனும் அவளும் – தொடர் – 1

0

அது ஒரு ஞாயிறு மதியம்.. சுட்டெரிக்கும் வெயில்… அது மார்க்கெட் பகுதி என்பதால் மானவாரியான கூட்டம் வேறு. ஹாரன் அடித்தும் வழிவிடாதவர்களை தனக்கு தெரிந்த கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்து கொண்டே தன்னுடைய பல்சரை இன்ச் பை இன்சாக நகர்த்தி வந்தான் அவன்.

தன் பைக் முன் தடுமாறி விழ வந்த பெண்ணொருத்தியை த்தா… என திட்ட வாயெடுத்தவன், ஆ…..என வாயைப் பிளந்தபடியே ஆர்காசத்தோடு வண்டியை சடாரென நிறுத்தினான். அவளுக்கோ பதற்றம்!.. அவனுக்கோ ஆச்சர்யம்!
இருக்காதா பின்ன!… ரெண்டுபேரும் ப்ளஸ் டூ வரை ஒரே ஸ்கூல்ல ஒரே க்ளாஸ்ல படிச்சவங்க. ரெண்டு பேருக்குள்ளயும் லவ் இல்ல. ஃபிரண்ட்ஷிப்பும் இல்ல.. கடந்து போறப்ப கண்ணால பாத்துக்கிட்ட உறவு தான். இப்ப தான் மொத மொதல்ல ரெண்டு பேரும் பேசிக்குறாங்க..

2 dhanalakshmi joseph

‘என்ன நல்லாருக்கியா!’ன்னு ஆரம்பிச்ச பேச்சு, ‘என்ன பண்ணிட்டு இருக்க! வீடு எங்க? கல்யாணமாச்சா!’ என நீண்டு கடைசியில் போன் நம்பர் வாங்கியதோடு முடியுது.
அவன் வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல இருக்குற ஸ்கூல்ல தான் அவ டீச்சரா வேலை பாக்குறாளாம்.. அடுத்த நாளே அவள பார்க்க பல்சரை விரட்டினான். ஒரு மரத்தடியில நடக்குது இருவருக்குமான முதல்கட்ட பேச்சுவார்த்தை…

இதுக்கு மேல மெலுசா செய்ய முடியாதுங்குற அளவுக்கு கழுத்துல கெடக்குற செயினு, காதுல கொஞ்சம் தங்கத்தை உரசி வச்ச மாதிரி கம்மலு, உதடு வச்சு கன்னத்துல முத்தம் கொடுத்தா வழுக்கி விட்றுமோங்குற அளவுக்கு பளபளப்பான கன்னம், அதுல நிலாவுல உள்ள மாதிரி சின்னதா ஒரு குழி, உருக்கி ஊத்துன சாக்லெட் கலர்ல லிப்ஸ்டிக் போட்ட உதடு, அதுக்கு மேல நயன்தாராவுக்கும், ஹன்சிகாவுக்கும் இருக்குற மாதிரி சின்னதா ஒரு மச்சம், காலையில தலைக்கு புலி மார்க் சீயக்காய தேச்சு குளிச்சிருப்பாளோ என்னமோ! இது பத்தாதுன்னு ஒரு மொழம் ஜாதிப்பூவும் சேர்ந்து கிறங்கடிச்ச மசக்கத்துல பயபுள்ள படக்குனு, “நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனக்கிறேன்; நீ என்ன சொல்ற”ன்னு கேட்டுட்டான்.

- Advertisement -

- Advertisement -

“எங்க அப்பா செத்து ஆறு மாசம் கூட ஆகலை. வீட்ல அக்காவும், தங்கச்சியும் கல்யாணம் ஆகாம இருக்குறப்ப நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிக்குறது?.. நான் வேலைக்கு போய் தான் குடும்பத்துக்கு ஒத்தாசை பண்ணனும்..

அதுமட்டுமில்லாம என் அம்மா இப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டான்னு” உள்ளுக்குள்ள ஆசையிருந்தும் அவனை வேணாம்னு ஒதறி விடுறா… உன் ஜாதிப்பூ வாசத்துக்கு காலம் பூரா அடிமையா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நீ என்னடி என்ன வேணாம்னு சொல்றது! ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு வெடுக்குன்னு கெளம்பிட்டான்.

ஸ்கூல் புள்ளைங்க மாதிரி காலையில கரெக்டா ஒம்பது மணிக்கும், சாயங்காலம் 4 மணிக்கும் ஸ்கூல் வாசல்ல வந்து நின்னுடுவான் அவ தரிசனத்துக்காக!… இப்படி தினமும் அவன் அவளை பார்க்க, அவ அவனை பார்க்க… தண்ணி ஊத்தாமலேயே காதல் தளதளன்னு வளந்துடுச்சி…

4 bismi svs

சொல்லிக்காம ஒரு நாள் போய் உக்காந்துட்டான் அவ வீட்ல. “எனக்கு உங்க பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. ஒரு பைசா வரதட்சணை வேணாம். உங்களுக்கு நான் எந்த பாரத்தையும் கொடுக்க மாட்டேன்”ன்னு சொல்றான்.

“தலையில பாரத்தை தூக்கி போடாத தம்பி. நீங்க வேற மதம்; நாங்க வேற மதம். நாங்க ஏத்துக்கிடாலும் எங்க சொந்தக்காரங்க ஏத்துக்க மாட்டாங்க. அப்படி நான் என் பொண்ணை உங்களுக்கு கட்டிக் கொடுத்துட்டா, என்னோட மத்த ரெண்டு பொண்ணுங்களும் வாழாவெட்டியா வீட்ல தான் இருக்கணும்.

தயவுசெஞ்சு திரும்பி பார்க்காம எந்திரிச்சு போயிடுங்க”ன்னு ஒரு பெரிய கும்பிடா போடுறா அவளோட அம்மா..வீடேறி வந்து  தைரியமா பொண்ணு கேட்டுட்டானே! என் மேல இப்படி கிறுக்கு புடிச்சி கிடக்க ஒருத்தனை நான் வேணாம்னு சொல்லலாமா! என்னோட சம்பாத்தியத்த வச்சு எப்படியாவது அக்காவுக்கும், தங்கச்சிக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு அம்மா நினைக்குறா… இவங்களை பாத்துக்கிட்டு நான் இருந்தா அறுபதாம் கல்யாணம் தான் பண்ண முடியும்… தோல் சுருங்கிப் போன ஒருத்திய எவன் தான் கட்டிக்குவான்… இது ஆகாது டா சாமி!..ன்னு அடிச்சா போன அவனுக்கு…

க்ர்ரிங்….க்ர்ரிங்…. “எங்க அம்மா என்ன இப்போதைக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க மாட்டா. தயவு செஞ்சு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். சூழ்நிலை சரியானதுக்கு அப்புறம் வீட்ல விஷயத்தை சொல்லிடலாம்”ங்கிறா…

ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல கல்யாணம் நடக்குது. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுக்கு போயிடுறாங்க. கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்துலயும், இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்கலயேங்குற ஏக்கத்துலயும் பையன் பொறண்டு பொறண்டு படுக்குறான்.

நைட் பதினோரு மணி இருக்கும். அவன் வீட்டு காலிங் பெல் பல்லை இளிக்குது. கதவை தொறந்து பார்த்தா “உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. இனிமேல் நான் இங்க தான் இருப்பேன்”னு கட்டிப்புடிச்சி கதறுறா காலையில கல்யாணம் பண்ண காதலி…

பத்தியெறியும் போது அணைச்சா நெருப்பு அணையும் தானே! ஆனா, அவனும் அவளும் கட்டி அணைக்கையில மேலும் பத்திக்கிட்டு எரியுது காதலோடு சேர்ந்து காமமும்!….
(தொடரும்)

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.