பிறந்த குழந்தைக்கும் பக்கவாதம் வரும்…

0

பக்கவாத நோயை ஏற்படுத்தும் வாழ்வியல் முறை காரணிகளைத் தொடர்ந்து, வியாதிகளால் ஏற்படும் பக்கவாத நோய் பற்றி பார்ப்போம்.

மனிதன் என்பவன் உடல், உள்ளம், உணர்வு ஆகிய மூன்றின் சங்கமம். இந்த மூன்றில் எதற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்பைச் சார்ந்து தான் இருக்கிறது. எந்த ஒரு உறுப்பும் தனித்துச் செயல்படுவதில்லை. நமது உடலின் அமைப்பே ஒரு உறுப்பு மற்ற உறுப்போடு தொடர்புடையதாகவே இருக்கிறது. எனவே, ஒரு உறுப்பில் ஏற்படும் பாதிப்பானது உடலில் உள்ள மற்ற உறுப்புகளின் செயல் திறனை பாதிக்கிறது.

உதாரணத்திற்கு, சர்க்கரை வியாதியானது இரத்தக் கொதிப்பை வரவழைக்கும்; இரத்தக் கொதிப்பானது சிறுநீரகத்தை பாதிக்கும்; சிறுநீரகத்தின் பாதிப்பானது இதயத்தை பாதிக்கும்; இதயத்தின் பாதிப்பானது அதன் தன்மைக்கேற்றவாறு நுரையீரலை பாதிக்கும்; நுரையீரலின் பாதிப்பானது மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இப்படி ஒரு வியாதியால் அவதியுறும் மனிதனுக்கு பல்வேறு வியாதிகளை ஈர்க்கும் தன்மை தானாகவே வந்துவிடுகிறது.

நம் உடல் உறுப்புகளின் பாதிப்பு எப்படி பக்கவாத நோயை ஏற்படுத்துகிறதோ, அதே போல் நம் உள்ளம் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் பாதிப்பும் பக்கவாத நோயை ஏற்படுத்துகிறது என்றால் உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியத்தைக் கொடுக்கும் என்றே நான் நினைக்கிறேன். இப்படி பல்வேறு காரணங்களால் பக்கவாத நோய் வருகின்றது.

Dr. அ.வேணி MD., DM (NEURO)

மூளை நரம்பியல் நிபுணர்.

இதில் மிகவும் முக்கியமானது இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மாரடைப்பு, இதயத்தின் இயக்கக் கோளாறுகள், இதயத்தில் ஏற்படுகின்ற சில பிறவி கோளாறுகள், இதயத்தில் வால்வுகளில் வரும் கோளாறுகள், அதிகமான கொழுப்பின் அளவு, இணைப்புத்திசு சம்பந்தப்பட்ட வியாதிகள், இரத்த உறைதலில் ஏற்படும் கோளாறுகள், மூளையில் உள்ள இரத்தக் குழாய்களின் அமைப்பில் ஏற்படும் பிறவிக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், மூளைக்காய்ச்சல், மூளையைக் கிருமிகள் தாக்குவது (காசநோய் கிருமி,ஹெச்.ஐ.வி, மற்ற வைரஸ் கிருமிகள்) ஆகியவைகள் ஆகும்.

சிலருக்கு மிகவும் சிறுவயதிலேயே பக்கவாத நோய் வரக்கண்டிருப்பீர்கள். நான் எனது அனுபவத்தில், பிறந்த ஒரு மாதத்திற்குள்ளவாகவே பக்கவாத நோய் தாக்கிய குழந்தைகளை பார்த்திருக்கின்றேன். இப்படி சிறு வயதிலேயே வரும் பக்கவாதத்திற்கு இரத்தக் குழாய்களிலோ அல்லது இதயத்தில் ஏற்படும் பிறவிக் கோளாறுகளோ காரணமாக இருக்கலாம்.

இன்று உள்ள காலக்கட்டத்தில் 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயின் விழுக்காடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மிகவும் முக்கியமானது வாழ்வியல் முறைகள், உடல் மற்றும் உள்ளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகும். இந்த காரணிகளைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் உடலின் அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பக்கவாத நோயினைப் பற்றி பார்ப்போம். இரத்தக் குழாய்களில் இரத்த அழுத்தம் சாதரணமாக 120/80mmHg இருக்க வேண்டும். நமது உடலில் இரத்தக் கொதிப்பின் அளவானது நொடிக்கு நொடி வேறுபடும். நாம் உறங்கும் போது இரத்த அழுத்தத்தின் அளவு குறைவாகவும், நடந்தாலோ, உணவு, தண்ணீர் மற்றும் தேனீர் குடித்தாலோ அளவு அதிகரிக்கும். நாம் கோபப்படும்போது இரத்தக் கொதிப்பின் அளவு பன்மடங்கு அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தத்தின் அளவு வயதிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. வயது அதிகமாக அதிகமாக இரத்த அழுத்தத்தின் அளவும் சற்றே அதிகரிக்கும். 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு 140/80mmHg கீழ் இருக்க வேண்டும். இதை விட அதிகரிக்கும் போதும், நடுத்தர வயதினருக்கு 120/80mmHg விட அதிகரிக்கும் போதும் இரத்த கொதிப்பு நோய் வந்து விட்டது என்று அர்த்தம்.

இரத்தக் குழாயானது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அதிகமுள்ள இரத்தத்தை எடுத்துச் செல்கிறது. எனவே தான், நமது உறுப்புகள் அதனதன் வேலைகளை சரிவர செய்ய முடிகிறது. இந்த இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் உடலில் எந்த இடத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லையோ அந்த உறுப்பு அதன் செயலை இழக்கிறது.

இப்படி இதயத்தில் உள்ள இரத்தக் குழாய் அடைப்பதால் வருவது தான் மாரைடைப்பு நோய். மூளையில் உள்ள இரத்தக் குழாய் அடைப்பதாலோ அல்லது வெடித்து இரத்தம் மூளையினுள் கசிவதாலோ வருவது தான் பக்கவாத நோயாகும். மூளையில் இரத்தக் குழாய் அடைப்பதால் வருவது இஸ்கீமிக் பக்கவாத நோய், இரத்தக் குழாய் வெடித்து இரத்தம் கசிந்து வருவது ஹெமரேஜிக் பக்கவாத நோய் என்று அழைக்கிறோம். இரண்டிற்கும் வைத்திய முறைகள் வேறுபடுகின்றன.

சர்க்கரை வியாதியால் பக்கவாத நோய் பற்றி பார்ப்போம்.

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.