“உள்ளதும் போச்சே..”- முட்டி போட்ட தலைமையாசிரியை !
“உள்ளதும் போச்சே..”- முட்டி போட்ட தலைமையாசிரியை
ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ், பணத்திற்கு ஆசைப்பட்டு டபுளிங் பிசினஸ் செய்து மாட்டிக் கொள்ளும் போது அவர் வைத்திருந்த தள்ளுவண்டியையும் போலீஸார் பறிமுதல் செய்து விடுவார்கள். அப்படியான ஒரு நிகழ்வு திருச்சியைச் சேர்ந்த ஒரு பள்ளி தலைமையாசிரியைக்கு நடந்திருக்கிறது.
திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் தலைமையாசிரியை அவர். ரொம்ப ஸ்ரிக்டான பெண்மணி. பள்ளியில் அவர் வைத்தது தான் சட்டம். அவரை கேட்காமல் ஒரு அணுவும் அசையாது. அந்த பள்ளியின் உரிமையாளர் ஒரு அரசியல்வாதி. மாவட்டத்தில் முக்கிய பிரமுகராக வலம் வருபவர். அந்த முக்கிய பிரமுகரின் தொகுதியைச் சேர்ந்த ஒரு தகப்பனார், தனது பிள்ளையை அந்த தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்க சென்றுள்ளார். ‘ரூ.65,000 டொனேஷன் கொடுத்தால் தான் அட்மிஷன்’ என தடாலடியாக கூறிவிட்டார் அந்த பள்ளி தலைமையாசிரியை.
என்ன செய்வது என்று தெரியாத அந்த தகப்பனார் நேரடியாக அந்த பிரமுகரை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர், “நம்ம பள்ளி கூடத்தில டொனேஷனெல்லாம் வசூல் செய்றதில்லை” என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் தகப்பனாரோ, ‘டொனேஷன் கேட்டார்கள்’ என உறுதியாகக் கூற, அந்த பிரமுகருக்கு அப்போது தான் பொறி தட்டியது. உடனே தன் கையிலிருந்த ரூ.65,000த்தை கொடுத்து, போய் டொனேஷன் கட்டி பிள்ளையை சேருங்கள்… டொனேஷனுக்கு ரசீதும் வாங்கிவிடுங்கள்”ஞ் என்று கூறிவிட்டார். அத்தோடு நிற்காமல் பள்ளி தலைமையாசிரியையின் அறையில் ரகசிய கேமிராவும் பொறுத்திவிடுகிறார்.
அத்தோடு நின்றுவிடாமல் பள்ளியில் உள்ள மாணவர்களிடம், “நீங்கள் டொனேஷன் கொடுக்கவில்லை.. அதனால் நாளையிலிருந்து பள்ளிக்கு வர வேண்டாம்” என தனித்தனியாக மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு, தாங்கள் கொடுத்த டொனேஷனுக்கான ரசீதை தூக்கிக் கொண்டு பள்ளி நிர்வாக அலுவலகத்தில் தருகின்றனர்.
அன்று ஆகஸ்ட் 15..! சுதந்திர நாள் கொடியேற்ற போகிறோம் என்ற ஆவலில் இருந்த அந்த தலைமையாசிரியைக்கு அந்த பிரமுகரின் கல்லூரி அலுவலகத்திலிருந்து போன். ‘உடனே கிளம்பி அலுவலகம் வாருங்கள்’ என்று. கொஞ்சம் குழம்பிய மனநிலையுடன் கல்லூரிக்கு சென்ற போது, “உங்களை உள்ளேவிட வேண்டாம் என்றும், வெளியே நிற்கச் சொல்லியிருக்கிறார்கள்” என்றும் செக்யூரிட்டி கூற கிறுகிறுத்துவிட்டது அந்த தலைமையாசிரியைக்கு.
சுதந்திரதின கொடியேற்று விழா முடிந்ததும் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தலைமையாசிரியையை உள்ளே வரச் சொல்லி, ஒரு அறையில் வைத்து கதவை சாத்தி, முதல்கட்டமாக அவரை, அதாவது தலைமையாசிரியை, முட்டி போட வைத்துள்ளனர்.
டொனேஷன் குறித்து விசாரணை ஆரம்பித்த போது அவர் மறுக்க, ஆதாரம் காட்டியதோடு விழுந்தது பெரிய அடி. அடுத்தடுத்த அடி விழ 20 ஆண்டுகால மொத்த சுருட்டலும் அறைக்குள் அம்பலமானது. உடனடியாக அவருடைய கணவரை வரச் செய்து அவரையும் அறையில் அடைத்து, அந்த அரசியல் பிரமுகரின் உதவியாளர் மூலம் தலைமையாசிரியையின் வீட்டிற்குச் சென்று, நகை, பணம், டாக்குமெண்ட் என அனைத்தையும் அள்ளிவந்துவிட்டனர்.
முடிவாக, தலைமையாசிரியை மற்றும் அவரது கணவரை சுமார் ஒரு வாரம், அந்த அறையில் அடைத்து வைத்து, சோறு தண்ணீர் கொடுத்து, அவர்களின் பெயரில் உள்ள அத்தனை சொத்துக்களையும் அந்த அரசியல் பிரமுகர் சொல்லிய பெயர்களில், பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதில் தலைமையாசிரியையின் பூர்வீக வீடும் அடங்கியது தான் சோகம்..!
“உள்ளதும் போச்சு” என்ற நிலையில் தலைமையாசிரியை அவரது கணவர் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்