விழிக்கும் நியூரான்கள் – மருத்துவ தொடர் -1
காலையில் மலரும் மலர்கள் போல் நாமும் தினமும் மலர்கிறோம். வேகமாக இயங்கும் உலகத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். எதை நோக்கி ஓடுகிறோம், வாழ்வின் நோக்கம் என்ன, நமது உடலின் இயல்பு என்ன, நமது உடலை எப்படி நோய்களிடம் இருந்து பேணி பாதுகாத்து ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டும் என்பதை நாம் சிந்திக்க மறந்து விட்டோம்.
Dr. அ.வேணி
MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
ராக்போர்ட் நியூரோ சென்டர்
தொடர்புக்கு: 7598001010
உள்ளங்கையில் அடங்கக் கூடிய அலைப்பேசி மூலம் எங்கோ ஒரு மூலையில் இருப்பவர்களிடம் தொடர்பு கொள்கிறோம். இலட்சக்கணக்கான மைல் தொலைவில் உள்ள ஏவுகணையை இங்கிருந்தே இயக்குகிறோம். அறிவியல் அதிசயங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால், நாம் வாசம் செய்யும் நம் உடலை அதிலும் நம்மை, நம் இதயத்தை மற்றும் அனைத்து பாகங்களையும் இயக்கும் நமது மூளை பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்றால், எத்தனை கோடி அறிவியல் அதிசயங்கள் வந்தாலும் அதனால் நமக்கு ஒரு பயனும் இல்லை என்பதை உணர்வோம் வாசகர்களே…
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”
ஒருவனுடைய உணவும் செயலும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும் நம் உடலில் வாதம், பித்தம், கபம் முதலிய மூன்றும் நோயை உருவாக்கும் என்பதை தமிழரின் வாழ்வியல் கருவூலமான திருவள்ளுவரின் திருக்குறளும், ஆரோக்கிய வாழ்வு வாழும் சூட்சுமத்தை திருமூலரின் திருமந்திரமும் எடுத்துரைக்கிறது.
மூளை நரம்பியல் நிபுணரான நான் பல்வேறு மூளை நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயால் மக்கள் தன் உடல் இயக்கத்தை இழந்து நிற்பதை பார்க்கிறேன். சிலர் தன் வாழ்க்கையையே ஒரு நொடியில் இழந்து விடுகிறார்கள்.
மனிதன் என்பவன் உடல், உள்ளம், உணர்வு ஆகிய மூன்றின் சங்கமம். நமது மனம் நமக்கு ஆருயிர் நண்பனாகவும், உயிரை போக்கும் பகையாளியாகவும் உள்ளது. இந்த இரண்டில் எதுவாக நம் மனம் இருக்க வேண்டும் என்பதை, நாம் நம் மனதிற்கு அளிக்கும் பயிற்சியே காரணமாகிறது. வாழ்நாள் முழுவதும் நோயின்றி பல்லாண்டு வாழ்வதும், நோயுடன் மரணிப்பதும் நம் மனதின் கையில் தான் உள்ளது. நாம் நம் மனதைக் கொண்டு உடலின் ஒவ்வொரு செல்லையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மனதை கொண்டு உடலையும், உடலைக் கொண்டு மனதின் உணர்வுகளையும் கையாண்டு, நோய் அறிகுறிகளை அறிந்து, நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களின் மனதில் நிறுத்த என்னின் சிறிய முயற்சி இதோ….
அந்தவகையில், இன்றைக்கு மக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய நோய் பக்கவாத நோய். மக்கள் பக்கவாத நோயைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். ஆனால், அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்; அதன் அறிகுறிகள் என்ன; நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் தான், பக்கவாத நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.