மூளைக்காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் பக்கவாத நோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பாதிப்புள்ளாகும் போது ஒரு சில அறிகுறிகளைக் கொடுக்கும். அந்த வகையில் பார்க்கும் போது மூளையை கிருமிகள் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வலிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படுகின்றன.
இவ்வாறு கிருமிகளினால் மூளை பாதிப்புக்கு உள்ளாகும் போது அக்கிருமிகள் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களில் ஒரு வித மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இதனால் அக்குழாய்கள் அடைத்துப் பக்கவாத நோய் வருகிறது.
வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் TB, HIV, HSV, Malaria ஆகிய கிருமிகளினால் மூளைத்தாக்கம் அதிகரித்து வருகின்றன Bacteria, Virus, Parasite இது போன்ற கிருமிகள் மூளையைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவது, அவரவரின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொருத்தது.
மரு.அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்
நம்மிடம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக இருந்தால் கிருமிகளை எதிர்த்து நம் உடலானது போரிட்டு, அழித்து விடுகிறது. அதனால் நமக்கு நோய் வருவதில்லை. ஆனால், சரியான வாழ்வியல் முறை இல்லாததினாலும், HIV மற்றும் சர்க்கரை நோய் போன்ற வியாதிகளினாலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து விடுகிறது. எனவே இக்கிருமிகளின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
உதாரணமாக TB கிருமியானது நுரையீரலைத் தாக்கி காசநோயை உருவாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே கிருமியானது நமது மூளையில் உள்ள CSF என்ற திரவத்தையும், மூளையையும் பாதிக்க வல்லது. சிறுவயதில் காய்ச்சலுடன் கூடிய பக்கவாத நோய் வருமேயானால் TB & HSV கிருமிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
HIV கிருமியினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் படிப்படியாக குறைந்து, சாதாரண நிலையில் நமக்கு நோயை ஏற்படுத்த முடியாத பூஞ்சைக் கிருமிகளின் தாக்கம் அதிகரித்து, அதனால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, பக்கவாத நோய் வருகிறது. இதயத்தில் உள்ள வால்வுகளில் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கிருமிகள் தாக்கி அதனால் பக்கவாத நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நாம் இது வரை பார்த்த பக்கவாத நோய் என்பது சுத்தமான இரத்தத்தை இதயத்திலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லும் தமனி (Artery)அடைப்பதால் வருவது. இந்தக் கிருமிகள் இரத்தத்தில் பரவி உள்ளதால், நமது மூளையிலிருந்து அசுத்த இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் சிரை (Vein) Venous Sinuses-ஐ அடைபட செய்வதால் Cerebral Venous Sinus Thrombosis (CVT) எனும் நோய் அதிக அளவில் வருகிறது. ஏற்கனவே கிருமிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மூளை CVT என்ற நோயினால் மேலும் பாதிக்கப்படுகிறது.
எனவே தான் உடலில் கிருமி தாக்கம் இருக்கும் போது நம்மால் இயன்ற வரை தண்ணீர், இளநீர் மற்றும் மற்ற திரவங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். குடிப்பழக்கம் உள்ள ஆண்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.
அடுத்தபடியாக சிறுநீரக கோளாறினால் வரும் பக்கவாத நோய்ப் பற்றிப் பார்ப்போம். நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்களைச் சிறுநீரகம் சிறுநீரின் வழியாக வெளியே அகற்றுகிறது. சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகும் போது நமது உடலில் உள்ள கழிவுகள் அகற்றப்படுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து மூளையை பாதித்து பக்கவாத நோய் வருதற்கான சாத்தியக்கூறை அதிகப் படுத்துகிறது.
அது மட்டுமில்லாமல் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது நமது உடலின் இரத்த அழுத்தம் சீரான நிலையில் இருப்பதில்லை. திடீர் திடீரென அதிகமாகும்.
எனவே மூளையில் இரத்த குழாய்களில் அழுத்தம் அதிகரித்து இரத்தக் குழாய் வெடித்து இரத்தக் கசிவு பக்கவாத நோய் வருகிறது. இரத்தக்குழாய் அடைத்து வரும் பக்கவாத நோயும் வெகுவாக அதிகரிக்கிறது.
எனவே சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை சரியான முறையில் பார்த்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்வரை தவிர்க்கலாம்.
மருத்துவ ஆலோசனையின்றி வலி மாத்திரைகள் அதிக அளவில் உட்கொள்வதாலும், சில வகையான நாட்டு மருந்துகளை உட்கொள்வதாலும், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது, என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
என்ன நேயர்களே இது நாள் வரை
நாம் பக்கவாத நோய் என்றால் என்ன?
அதன் அறிகுறிகள் என்ன? முக்கிய நோய் காரணிகள் என்ன? என்பது பற்றி பார்த்தோம் அல்லவா. பக்கவாத நோயை கண்டறியும் முறை மற்றும் அந்நோய்க்கான மருத்துவ முறை பற்றி
இனி வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.