மதுரையின் கூவம் ! பனையூர் கால்வாய் ! அதிகாரிகளின் அலட்சியம் !

0

அன்று பாசனக் கால்வாய்! இன்று மதுரையின் கூவம் அதிகாரிகளின் அலட்சியம்..

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 12 பிரதானக் கால்வாய்களுள் ஒன்று பனையூர் கால்வாய். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு வைகை அணையிலிருந்து நீர் வந்துசேரும் வழித்தடமாக பனையூர் கால்வாய் பயன்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது.

பல பத்தாண்டுகளாக கவனிப்பாரற்று கிடந்த இந்தக் கால்வாய், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்புதான் புத்துயிர்ப் பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாகவே, குடியிருப்பு வாசிகளால் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டுக்கிடக்கிறது, பனையூர் கால்வாய்.

- Advertisement -

- Advertisement -

குப்பைகளை சுமந்தபடி நகருக்குள் சாக்கடையாக பயணிக்கும் பனையூர் வாய்க்கால் வழியே டெங்கு, மலேரியா, ப்ளூ காய்ச்சல் பரவி வருவதாக குற்றஞ்சாட்டி பனையூர் வாய்க்காலை தூர்வாரக்கோரி மதுரை மாநகராட்சியின் குறை தீர்க்கும் நாளில் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜீவா.

ஜீவா
ஜீவா

தனது மனுவை உரிய அக்கறையோடு மதுரை மாநகராட்சி நிர்வாகம் அணுகவில்லை என்று குற்றஞ்சுமத்தும் ஜீவா, யானைக்கல் பகுதியில் ஒரு தனியார் விடுதி ஒன்று வாய்க்காலை மறித்து ஆக்கிரமித்திருப்பதாகவும் அதில் கார்பார்க்கிங் ஏரியாவாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார்.

50 மீட்டர் அளவுக்கு இரும்புத் தகடு கொண்டு பனையூர் கால்வாயை மூடியிருந்ததோடு, அதன்மேல் கார்களையும் வரிசையாய் நிறுத்தியிருந்தார்கள்.

இதுகுறித்து கேட்டதற்கு, தனியார் விடுதி சார்பில் பேசிய நிர்வாக மேலாளர்கள் தினேஷ் மற்றும் சர்புதீன் ஆகியோர், “முறையாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்திடன் அனுமதி பெற்றுத்தான், கார் பார்க்கிங் அமைத்துள்ளோம். மேலும், கால்வாயை சுத்தமாகவும் சுகாதாரமாகவும்தான் பராமரித்து வருகிறோம்” என்றார்கள்.

4 bismi svs

“இது காலங்காலமாக இருக்கிற பிரச்சினைதான். வாய்க்காலின் ரெண்டு பக்கமும் தடுப்பு சுவர்கூட கிடையாது. டூவீலர்ல போறவங்க வாய்க்காலில் தவறிவிழும் சம்பவம் அடிக்கடி நடந்துகிட்டுதான் இருக்கு. ஆளுங்கட்சி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன், மாநகராட்சி கமிஷனர், மண்டல தலைவர் பாண்டி செல்வி, மேயர் இந்திரா பொன்வசந்த், கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் புகார் கொடுத்தும் எந்த பிரயோசனமும் இல்லை.” என சலித்துக்கொள்கிறார், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சங்கர்.

சங்கர்
சங்கர்

அவ்வளவு ஏன், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலிருந்தும் வாட்சப் வழியே மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என புலம்புகிறார்கள்.

எல்லாம் ஆளும்கட்சி அரசியல் தலையீடு என தலையைச் சொறிகிறார்களாம்.

இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலனை சந்தித்தோம். “மதுரைக்கு வந்து ஒருமாதம் தான் ஆகிறது. திட்டம்-1 செயற்பொறியாளர் மாலதி என்பவரிடம் பேசுங்கள்” என்றார்.

 

அவர் சொன்னபடியே நாமும்,  CTPO மாலதி அவர்களை அணுகினோம். ”மதுரை மாநகராட்சியைத் தவிர, எந்த ஒரு தனியாரும் வாய்க்காலை இவ்வாறு இரும்புத் தகடு கொண்டு மூட முடியாது. அந்தக் குறிப்பிட்ட தனியார் விடுதி அதுபோல் எந்த ஒரு அனுமதியையும் எங்களிடம் வாங்கவில்லை.  ஒருவேளை அவ்வாறு விதிமீறலில் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம்.” என்றார் செயற்பொறியாளர் மாலதி.

ஒரு காலத்தில் வைகை ஆற்றிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை சுமந்து சென்ற பனையூர் கால்வாய், காலநிலை மாற்றத்தால் இன்று நகரில் ஓடும் சாக்கடையாக மாறியிருப்பதையும்; ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருப்பதையும் என்னவென்று சொல்ல, மதுரை மக்கா? 

-ஷாகுல் படங்கள்: ஆனந்த்

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.